Wednesday, April 7, 2010

பதின்மப் பக்கங்கள்!!


பன்னிரெண்டு முதல் பத்தொன்பது வயதிலான அருமையான இளமைக் காலத்தைத்தான் பதின்மப் பக்கங்கள் என்று குறிப்பிடப் படுகின்றது என்று நினைக்கின்றேன் சரிதானே நண்பர்களே!!

வாழ்க்கையில் என்றென்றும் மறக்க முடியாத பசுமையின் பக்கங்கள். ஏக்கங்கள் நிறைந்த பக்கங்கள். அந்த நாட்களின் நினைவுகள் முழுவதுமாக கடந்த சில நாட்களாக என்னை வேறு எந்த நினைவுகளும் வராதபடி ஆட் கொண்டுவிட்டது. ஆமாம்! ஜீவன் இத்தொடரில் என்னைத் தொடர அழைத்ததே எனக்கு தெரியாது. நான் தொலைபேசியில் பேசும்போது, ஜீவன் அவர்களே தொடர் இடுகை ஒன்றில் என்னை தொடர அழைத்திருப்பதாகக் கூறினார். ஜீவன் அவர்களுக்குத்தான் எவ்வளவு பொறுமை. பிறகுதான் அத்தொடரை படித்தேன். ஏறக்குறைய அனைவரும் எழுதி விட்டார்கள், வழக்கப்படி நான் தான் மிகவும் தாமதம்.

இத்தொடரை என்னை தொடர அழைத்ததிற்கு மிக்க நன்றி ஜீவன். தாமதத்திற்கு மன்னிக்க ஜீவன்.

வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்கக் கூடாதது எதுவென்றால் அதுவே என்று சொல்லக் கூடிய அருமையான வயதுதான் பதின்மப் பக்கங்கள். அந்த நாட்களை நெஞ்சிலே நிறுத்திப் பார்த்தால் கண்களில் நீரை வரவழைக்கக் கூடியது. ஏனெனில் மறுபடியும் அந்த உருண்டோடிய நாட்கள் நமக்கு கிடைக்குமா?

பசுமையான பதின்மங்களின் நினைவுகள் நெஞ்சிலே நீங்கா இடம் பெற்றிருக்கக் கூடியவையேயன்றி மறுபடியும் நம்மை நெருங்க கூடியதல்ல.

அந்த நினைவுகளை மறுபடியும் அசை போடவும், அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் அருமையான வாய்ப்பு எனக்கு கிடைக்குமென்று கனவிலும் நினைக்கவில்லை.

அறிய இந்த வாய்ப்பினை அளித்தமைக்கு நம் நண்பர் ஜீவன் அவர்களுக்கு மறுபடியும் எனது உளம் கனிந்த நன்றி..

பதின்மப் பக்கங்கள் அது ஒரு வசந்தகால நினைவலைகள்!

வாருங்கள் எனது வசந்த காலத்திற்கு போகலாம்...

எங்கள் வீடு ஒரு அழகான வீடு. ஆனால் அந்த வீட்டில் வசித்தவர்களின் எண்ணிக்கையோ இரண்டுதான். நானும், என்னை வளர்த்த பாட்டி இருவர் மட்டும்தான் அந்த வீட்டின் நிரந்தர வாசம் செய்யும் வி.ஐ.பிக்கள். வீட்டில்தான் தனிமை. வெளியே என்னைச் சுற்றி எப்போதும் பத்து பேர் இருப்பார்கள். (இதை படிக்கும் போது என் நண்பர்கள் என்ன நினைப்பார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்! :-)

நான் பாட்டியிடம் தனிமையில் வளர்ந்தேன். அவங்க ரொம்ப கண்டிப்பானவங்க. விளையாடினா பிடிக்காது, சிரிச்சா பிடிக்காது, எப்பவும் படிக்கணும். தோழிகளே இருக்கக் கூடாது. இதுதான் என்னை வளர்த்தவர்கள் எனக்கு கொடுத்த அந்த வயது அறிவுரை. ஆனால் எனக்கு இதெல்லாம் காதில் ஏறாது. மனதில் இளமையின் காட்டாற்று ஓட்டம். அந்த ஓட்டம் கொடுத்த அசாத்திய தைரியத்தில், படிப்பு போக மீதி நேரம் தோழிகளுடன் அரட்டைக் கச்சேரி, எப்பவும் எதிலும் விளையாட்டு விளையாட்டுதான்.

சில சமயம் குரூப் ஸ்டடி பண்ணுவோம். எனக்கு மிகவும் நெருக்கமான தோழி பூர்ணிமா. அவங்க எங்க கிளாஸ்லயே எல்லாரையும் விட ரொம்ப பெரியவங்க. எங்க கிளாஸ்லே இருக்கறவங்களை விட 3 வயது பெரியவங்க, ஏன்னா அவங்க வெளிநாட்டுலே படிச்சிட்டு வந்தாங்க, எங்க பள்ளியிலே சேரும் போது ரெண்டு கிளாஸ் குறைத்துதான் சேர்த்துக் கொண்டார்கள்.

அவங்க ரொம்ப பெரிய பணக்காரங்க. பள்ளிக்கு தினமும் கார்லதான் வருவாங்க. அமைதியா இருப்பாங்க. அந்த குணமே எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னை மாதிரியே நல்லா படிப்பாங்க. (நம்புங்கப்பா ப்ளீஸ்) பூர்ணிமா அக்கா வீடு ரொம்ப பெருசு. அவங்க வீட்டுலே விளையாட நிறைய இடம் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அவங்க வீட்டுக்குப் சென்று படிக்கிற அளவிற்கு நட்பு இறுகி விட்டது. நாங்க ஆறு பேரு நெருங்கிய தோழிகள். அவங்க வீட்லேதான் ஆறு பேரும் சேர்ந்து படிப்போம். படிச்சி முடிச்சிட்டா மீதி நேரத்தில் விளையாடுவோம். பூர்ணிமா அக்காதான் எப்பவுமே நீதிபதி. சரியான தீர்ப்பு சொல்லுவாங்க.

விளையாடும் விளையாட்டு என்ன தெரியுமா? பம்பரம், கோலி, கில்லி இதெல்லாம் அப்புறம் மிகவும் பிடித்த விளையாட்டு கோக்கோ. துண்டு ஒண்ணு கையிலே கொடுப்பாங்க. பாட்டு போடுவாங்க. பாட ஆரம்பிச்சவுடனே அதை கையிலே எடுத்திகிட்டு, உக்காந்திருக்கறவங்களை சுத்தி சுத்தி வரணும். பாட்டு நிக்கும் போது கையிலே இருக்கிற துண்டை (நசரேயன் மன்னிக்க இது நீங்க சொல்லுற துண்டு இல்லே :-) ) யாரு பின்னாடி போடறோமோ அவங்க அதை எடுத்துகிட்டு சுத்தணும் பிறகு யாரு பின்னாடியாவது போடணும். இப்படி விளையாடனும். ஆனால் நான் என்ன செய்வேன் தெரியுமா? துண்டு போடுறமாதிரி யாரையாவது துண்டால் அடிச்சிட்டு வேறு தோழியின் பின்னால் போட்டுட்டு ஓடிடுவேன், பிறகென்ன களத்தில் இருவரும் ஓடுவார்கள். எதுக்கு?? என்னை பிடிச்சி அடிக்கத்தான்!!!.. இப்படி எவ்வளவோ சுவாரசியமா பொழுதை கழிப்போம்.

வெளியில் இப்படி என்றால் வீட்டுலே எப்படி... அதுவும் பெரிய கஷ்டம்தான்...

வீட்டிலே அடிச்ச லூட்டிகள் எண்ணிலடங்கா.. ஏதோ சிலவற்றை உங்களுக்காக எழுதுகிறேன்....

எப்போவாவது நெருங்கிய சொந்தங்கள் ஒன்று சேருவோம். உடன் பிறந்தவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். அப்படி சேரும்போது ரொம்ப சந்தோஷம் இருக்காது. ஆனாலும் எனது இளைய சகோதரியிடம் மட்டும் கொஞ்சம் ஒட்டுதல் அதிகம். சகோதரி என்ற உரிமையை விட சிநேகிதி என்ற சிநேகபாவம் தான் எங்களுக்குள் அதிகமாக இருந்திருக்கிறது. அதுக்காக அடிச்சிக்க மாட்டோம் என்று நினைத்து விடாதீர்கள். தினம் நடக்கும் சில சம்பவங்களில் இப்போ நான் கூறப் போவதும் ஒன்றுதான்.

மதிய வேளையில் சிறிது நேரம் உறவுகள் உறங்கிபோகும் நேரம். எனக்கும் உறக்கத்திற்கும் எப்பவுமே ரொம்ப தூரம். அதுவும் மதிய வேளையில் சொல்லவே வேண்டாம். ஆனால் உறங்குபவர்கள் மீது செம கோவம் வரும். அனைவரும் என்னைவிட பெரியவர்கள், எனது அத்தை மகள்களும், எனது இளைய சகோதரி மட்டும்தான் எனது டார்கெட்டாக இருக்கும். அவர்களின் கால்கள் மீது வேகமாக நடந்து செல்வேன். முதல் முறை கொஞ்சமாக நெளிவார்கள், ரெண்டாவது முறை லேசாக கண்களை திறந்து பார்ப்பார்கள், மூன்றாவது முறை நடக்கும் சமயம் அனைவரும் நன்றாகவே விழித்துக் கொள்வார்கள். எனது அத்தை மகள்கள் மரியாதையின் நிமித்தம் என்னை ஒன்றும் கூறாமல் அழ ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் எனது தங்கையோ கையில் எது கிடைக்கிறதோ அதை தூக்கிக் கொண்டு என்னை அடிக்க ஓடி வருவாள். என்னை அவ்வளவு விரைவில் பிடிக்க இயலாது, ஏனெனில் சகோதரி நெருங்கும் முன் நான் மரத்தின் மீது சர சரவென்று ஏறிவிடுவேன். அங்கேயே நின்று அலுத்து பிறகு சென்று விடுவாள். ம்ம்ம் இப்படி எவ்வளவோ....

எங்க அப்பா மாதம் இருமுறை என்னைக் பார்க்க வருவார்கள். வந்தாலும் என்ன என்னோடவா உக்காந்து பேசுவாரு? தோட்டத்தில் புதுசா ஏதாவது பயிர் பண்ணுவாரு. எங்க வீட்டு பின்னாடி இருந்த நந்தவனத்தில், சாமிக்கு நிறைய பூக்கள் பூக்கும். பாதாம் மரம், கருவேப்பிலை மரம், மாமரம், பலா மரம் (வேர் பலா) இதெல்லாம் உண்டு. கூடுதலாக அவரை, புடலங்காய், கீரை, கொத்தமல்லி, புதினா இதெல்லாம் கூட அப்பா வரப்பு கட்டி போடுவாரு. பீர்க்கங்காய் கூட வேலியில் படர விடுவாரு. புடலங்காய் எல்லாம் நிறைய காய்க்கும். அவரைக்காயும் கூடத்தான். அதுக்கு மருந்து அடிப்பது முதல் பரமாரிப்பு முழுவதும் அப்பாதான் கவனித்து செய்வார்.

ஒரு முறை அப்பா அந்த மாதம் வர முடியாத சூழ்நிலை, அதனால் அந்த முறை புடலங்காய்க்கு கல்லு கட்டுற வேலை எனக்கு அளிக்கப் பட்டது. நானும் சரி என்று எரிச்சலுடன் கல்லு எடுத்து வந்து அந்த கல்லை கயிற்றில் கட்டி அதை 9 புடலை பிஞ்சில் கட்டி விட்டேன். எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு இருந்திச்சி. இங்கே அங்கே என்று பாய்ந்து வேலை செய்ததில் எங்கேயோ கோட்டை விட்டுட்டேன். கல்லின் சைஸ் மிகவும் பெரிசு வேறே, அதே போல அப்பா கட்டிய பந்தலும் அவ்வளவு ஸ்ட்ராங்காக இல்லாததால் நான் பந்தலை விட்டு வெளியே வருமுன்னே என் மீது பந்தல் சாய்ந்தது. அப்புறம் என்ன உடல் பூர ஒரே அரிப்பு, அழுகை, துக்கம் தொண்டையை அடைக்க அப்பாவை நினைத்து பயம் வேறு. எப்படியோ சமாளிச்சேன் போங்க.

யாரவது என்னை அடிக்க வந்தால் பாதாம் மரத்தின் மீது கிடு கிடுவென்று ஏறிவிடுவேன். அதனால் அடி வாங்குவதில் இருந்து தப்பி விடுவேன். இந்த மரம் ஏறும் பழக்கம் என்னை பல முறை காப்பாற்றி இருக்கிறது.

ஒரு முறை என்னோட தோழி பூர்ணிமாவின் வீட்டிற்கு வழக்கம் போல படிக்க சென்றேன். அவர்களின் வீட்டுக் கேட்டை திறந்து உள்ளே நுழைய முற்பட்டேன். எங்கிருந்தோ பாய்ந்து வந்த அல்சேஷன் நண்பர் நாலு கால் பாய்ச்சலில் என்னை நோக்கி படு ஆக்ரோஷமா வந்து கொண்டிருந்தார். அதுவரை அவர்கள் வீட்டில் அப்படி ஒரு நாயை நான் பார்த்ததே இல்லே. சின்னதா ரெண்டு குட்டி நாய்தான் இருக்கும். அந்த ரெண்டும் எனக்கு ரொம்ப பிரண்டு. இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர் பார்க்காத நான் திரும்பி ஓடி அவர்கள் கேட்டின் மீது ஏற முற்பட்ட போது எனது பாவாடையில் கால் பாகம் அதன் வாயில். அதற்கு மேலும் என்னைப் பார்த்து உறுமிக் கொண்டிருந்தது.

பயத்தில் என் நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டு விட்டது. பேச்சு வரலை. கேட்டை திறந்து போன எனக்கு, அதே கேட்டை திறந்து கொண்டு ஓட மூளை வேலை செய்யலை. இதுதான் விதி போலும். அப்படியே கேட்டில் இருந்து கீழே குதித்து ஓட ஆரம்பித்தேன். இதற்கிடையே எனது தோழியின் அப்பா சத்தம் கேட்டு வெளியே வந்தவர் என்னை பெயரிட்டு அழைத்திருக்கிறார், அவர் குரல் என் காதில் விழுந்தால் தானே! நான் தலை தெறிக்க, பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடிக் கொண்டிருந்தேனே! இந்த அவலத்தைப் பார்த்த தெரிவில் நின்று கொண்டிருந்த மூன்று கருப்பு நண்பர்கள் நாலு கால் பாய்ச்சலில் என்னை தொடர ஆரம்பித்தார்கள். இதென்னடா விதி வில்லங்கமா வேலை செய்யுதே! என்ன செய்ய? எங்கே நிக்க? பின்னாடி பாவாடை வேறே கிழிந்த நிலையில் ஓட்டம் வேறு. எங்க வீட்டுக்கு போக இன்னும் ரெண்டு தெருவை கடக்க வேண்டும்.

ஓடிக் கொண்டிருந்த எனக்கு எனது பாட்டி அறிவுரை என்ற பெயரில் சொன்ன சில அசத்தலான வார்த்தைகள் காதில் திடீர் ரீங்காரத்துடன் ஒலித்தது. "குனிய குனிய குட்டுவார்கள்" "ஓட ஓட துரத்துவார்கள்" குனிந்தவர்கள் நிமிர்ந்தால் குட்டியவர்கள் கை தானாக நின்றுவிடும். ஓட ஓட துரத்துபவர்களை நின்று திரும்பி பார்த்தாயானால் அவர்களின் ஓட்டமும் நின்று போகும். இதுதான் அவர்கள் எனக்கு கூறியது. சமயோசிதமாக இந்த வரிகள் நினைவிற்கு வர ஓட்டத்தை குறைத்து குனிந்து ஒரு கல்லை கையில் எடுத்து மெதுவாக நின்று திரும்பிப் பார்த்தேன். அந்த மூவரின் ஓட்டத்தின் வேகமோ கொஞ்சம் கூட குறைவதாய் தெரியவில்லை. அதனால் என் கையில் இருந்த கல்லை தூக்கி அவர்கள் மீது எறிந்தவுடன் திரும்பி ஓட ஆரம்பித்தார்கள். கொஞ்சமாக பயம் தெளிந்து வீடு வந்து சேர்ந்தேன் .

அடுத்த சில மாதங்களில் நிகழ்ந்த இந்த அனுபவம்....

அவரை மரத்தில் இருக்கும் அசு(சரியான பெயர் நினைவில் இல்லை) என்ற பூச்சியை விரட்ட அப்பா எப்பவும் சாம்பல் தெளிப்பார் போல, அது எனக்கு தெரியாமல், எங்க வீட்டு வேலைக்கார பெண்ணின் கூட்டு சதியில் பூச்சிக் கொல்லியை சாம்பலுடன் கலந்து அடித்ததில் அந்த முறை அவரை செடிக்கும் சங்கு. வந்து பார்த்த அப்பா அடிச்சி நொறுக்கி எடுத்திருப்பார். நல்ல வேளை எனது அத்தை ஊரில் இருந்து திடீர் விருந்தாளியாக வந்து விட்டார்கள். அதில் என் மீது இருந்த கோபம் அப்பாவுக்கு மாறிப் போனது. இப்படி எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்து கொண்டும், சில சமயம் அடி வாங்கிக் கொண்டும் காலத்தை ஓட்டி இருக்கிறேன். எனது தோழிகளுடன் களித்த நாட்கள் மட்டுமே இன்பமான நாட்கள்.

ஆனால் எனக்கு எனது தனிமை நிறைந்த நாட்கள் தான் அதிகம். அதானால் நான் சில சமயம் பெற்றோர்களின் ஏக்கத்தில் தனிமையை விரும்பி ஏற்பதும் உண்டு. அப்போது ஒருவருடனும் பேச மாட்டேன். நான் உண்டு பள்ளி உண்டு, படிப்பு உண்டு என்று இருப்பேன். இருக்கிற இடம் தெரியாது. அந்த வயதில் ஏற்பட்ட ஏக்கங்களும், வேதனைகளும் எப்படி மாற்ற முடியும்? இன்றைய காலகட்டத்தில் எது வேண்டுமானாலும் என்னால் வாங்க முடியும்? ஆனால் தேவையான அன்பு, அரவணைப்பு இவை எல்லாம் எனது பெற்றோர்களிடம் இருந்து எனக்கு கிடைக்காமல் போனது பெரும் துரதிர்ஷ்டமோ என்று பல முறை என்னை நானே கேட்டுக் கொண்டதும் உண்டு. என்ன கேட்டு என்ன பிரயோஜனம், அந்த வயதின் ஏக்கங்கள் இன்னமும் ஆறாத ரணமாக ஒரு ஓரத்தில் பசுமையாக மிகவும் பசுமையாக இருந்து கொண்டு என் உள்ளத்தை உரசிப் பார்க்கின்றனவே!

எனது இளமை காலத்தில் இன்பமும், (அதாவது தோழிகளுடன் களித்த நாட்கள்)துன்பமும் சரிபாதியாக அடையப் பெற்றேன். இன்று என்னிடம் எல்லாம் இருக்கின்றது. ஆனால் அன்று என் மனதில் ஏற்பட்ட ஏக்கத்தை இன்று போக்க முடியுமா? முடியாது முடியாது... ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்று வந்து விட்டது என்று கூறிக் கொண்டு என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்.

பதின்மங்களின் இறுதியில் எனது தோழிகள் அனைவரும் படிப்பதற்காக இடம் மாறிப் போனார்கள், நானும் இடம் மாறித்தான் போனேன். அந்த பசுமையான எண்ணங்களை சுமந்து கொண்டு புதியதாக ஏற்படும் சுகமான அனுபவங்களை அடைய எனது மனதை தயார் படுத்திக் கொண்டு கல்லூரிச் சாலையில் காலூன்றினேன். எழுதியவைகள் அனைத்தும் கடுகளவே. தினம் தினம் ஒரு நிகழ்வுகள். அவைகள் அவ்வளவும் எழுதினால் நீங்க எல்லாரும் பொறுமையை இழந்து என்னை அடிக்க வந்து விடுவீர்கள்.. அதனால் இத்துடன் பசுமையான பதின்மப் பக்கங்களை முடித்துக் கொள்கிறேன்

எனது இளமைக் காலத்தை திரும்பி பார்க்க வைத்த ஜீவன் உங்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!