Wednesday, June 30, 2010

Wedding Query........ ........ (SQL Style)


HUSBANDS QUERY

CREATE PROCEDURE MyMarriage (
BrideGroom Male (25) ,
Bride Female(20) )AS
BEGIN

SELECT Bride FROM india_ Brides
WHERE FatherInLaw = 'Millionaire'
AND Count(Car) > 20 AND HouseStatus ='ThreeStoreyed'
AND BrideEduStatus IN (B.TECH ,BE ,Degree ,MCA ,MiBA) AND Having Brothers= Null AND
Sisters =Yes

SELECT Gold ,Cash,Car,BankBalance
FROM FatherInLaw
UPDATE MyBankAccout
SETMyBal = MyBal + FatherInLawBal

UPDATEMyLocker
SET MyLockerContents = MyLockerContents + FatherInLawGold

INSERT INTO MyCarShed VALUES('BMW')
END

GO


Wife Writes The Below Query:

DROP HUSBAND;
Commit;


ச்சும்மா டைம்பாஸு...

டிஸ்கி: என் தோழி அனுப்பி நான் ரசித்தது, இப்போ உங்களுக்காக...:)


Wednesday, June 23, 2010

கோனே ஃபால்ஸ்!!

இந்த படம் நாங்க எடுக்கலை அங்கே இருந்து வாங்கி வந்தேன். ஏன்னா நாங்க சென்ற போது கொஞ்சமாகத்தான் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

திருக்காரிக்கரை (காரியாற்றின் கரையிலுள்ள ஊர். எனவே 'காரிக்கரை' . என்றாயிற்று) தற்போது மக்கள் "ராமகிரி" என்று அழைக்கின்றனர்.

அழகிய பசுமை நிறைந்த ஊராகத் திகழ்கிறது.

பழமையான பெரிய சிவாலயம். இத்தலம் கால பைரவ தலம் என்று போற்றப்படுகிறது.

இங்குள்ள நந்தியின் வாயிலிருந்து இடையறாது நீர் கொட்டிக் கொண்டேயுள்ளது. இந்நீர் (தீர்த்தக்) குளத்தில் நிரம்பி 'காரியாறு' என்றும் பெயருடன் ஓடுகிறது. இங்கிருந்து கோனே ஃபால்ஸ் பயணமானோம்.

செல்லும் வழி எல்லாம் நண்பர்கள் பட்டாளம். அவர்களை பார்த்தவுடன் மனதிற்குள் ஒரே குஷியாகிப் போனது. பாருங்க குழந்தையை எவ்வளவு அழகா வச்சிக்கிட்டு இருக்காங்க.

இவர்கள் தண்ணீர் குடிக்கும் அழகை இன்றெல்லாம் ரசிக்கலாம். இந்த தண்ணீர் கோனே ஃபால்ஸ்சில் இருந்து வருகின்றது.


அம்மா தண்ணீர் அருந்தும் போது குழந்தையும் சேர்ந்து தண்ணீர் குடித்ததை காண மிகவும் அழகாக இருந்தது..

போட்டோ எடுக்கறதை பார்த்து பயந்துட்டாங்க போல. இல்லே அந்த குட்டியை தூக்கிகிட்டு வந்திடுவோம்னு மொறைக்கிறாங்க.


நந்தி வாயில் இருந்து வரும் தண்ணீர் இப்படி குளமாகிறது. அதில் எல்லாரும் குளிக்கறாங்க!!



NOTE: கோனே ஃபால்ஸ் ஆந்திராவைச் சேர்ந்த அருமையான சுற்றுலா தளம். சென்னையில் இருந்து சுமார் 60KM தொலைவில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த புத்தூரில் இருந்து 10KM தொலைவில் அமைந்துள்ளது. நுழை வாயிலில் அழகிய வளவு அமைத்திருக்கிறார்கள். அதில் "கைலாசானாதா கோனே ஃபால்ஸ்" என்று எழுதி இருக்கும்.





Monday, June 21, 2010

பெருமாளும், பருப்பு போளியும்!!!

இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மயிலு விஜி உங்களுக்கு நன்றி !!






ஏதோ பருப்பு, போளி தராங்கன்னு ஓடி வந்தா தாரிணியை தாக்கி, ரம்யாவை தாக்கி, சின்ன அம்மிணியை தாக்கி ம்ம்ம்.. இந்த விஜிக்கு ஓவர் குறும்பு.

இந்த தொடர் பதிவுக்கு அழைத்த விஜி உங்களுக்கு தைரியம் அதிகம்தான், எப்படியும் நான் ஒரு அதிர்ச்சி (தாமதமா எழுதுவேன்) தருவேன் என்றும் தெரிந்தும் இப்படியா!

யாரையாவது கலாய்க்க சொன்னா ரொம்ப சந்தோஷமா கலாயிக்கலாம்!! ஆனா சூப்பர் தொடருக்கு அழைத்து என்னை சாச்சிட்டியேம்மா:)

எல்லாரும் என்ன பண்ணீங்க எழுதிட்டீங்களா? கடை தொரக்கலின்னா ஆளையே மறந்துடராங்கப்பா!!

என்னை தொடருக்கு அழைச்சிட்டு என்னிடம் சொல்லாதவங்களோட நான் கா விட்டுக்குறேன், நான்தான் உலக மகா ஆணியிலே மாட்டிகிட்டு முழிக்கிறேன், ஒரு மெயில் அனுப்பலாம்னு யோசிச்சீங்களா? போங்கப்பா....:)) சரி சரி நோ டென்ஷன்...

இப்போ மெயின் டாப்பிக்கு வருவோம்!

நல்ல தலைப்பு உணர்வுகளோடு ஒன்றி போய் எழுதக் கூடிய தலைப்பு இல்லையா? எனக்கு அப்படிதான் தோன்றுகிறது.(இதுதான் கேள்வியும் நானே பதிலும் நானே என்பது :-)).

சிறு வயதில் எங்க வீட்டுக்கு அருகே கோவில். அதனால் என்னோட தின வாசஸ்தலமும் அந்த கோவில்தான். படிக்கிறது, விளையாடறது எல்லாமே அந்த கோவிலில்தான் (சின்னப் புள்ளைதானே சாமி மன்னிச்சிடுவாங்க). நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கேதான் இருப்பேன், கண்களுக்குத் தெரியாத அரூவமான உருவமாய் எங்குமே நீக்கமற நிறைந்திருக்கும் நான் நம்பும் எனது தந்தையும் தாயுமாகிய சமயபுர அம்மாவைப் பற்றி இங்கே கூற எனக்கு ஒன்றும் தயக்கமோ ஆட்சேபனையோ இல்லை. கடவுள் இல்லை என்று கூறிவிட்டு ஒதுங்க நான் தயாராக இல்லை. மேடை ஏறி சொல்ல என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் எவ்வளவு வேணும்னாலும் எனது கருத்துக்களை பரிமாறிக் கொள்வதிலும் எந்த சங்கடமும் இல்லை. இந்த உணர்வுகள் என் உணர்வுகளோடு கலந்தவை. நான் உணரும் அளவிற்கு எழுத்து வடிவம் கொடுக்க முடியாது. ஆனாலும் ஓரளவிற்கு சுமாரா எழுதமுடியும்ன்னு நம்பி எழுத ஆரம்பித்து விட்டேன்.

தவறுகள் செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று கூறி யாரும் என்னை வளர்க்கவில்லை. நல்ல எண்ணங்களுடனும், அன்புடனும் நடந்து கொண்டால் அதுவே உன்னை உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டு செல்லும் என்ற அறிவுரையுடன்தான் நான் வளர்ந்தேன்.

மார்கழி குளிரில் அதிகாலையில் ரெண்டு மணிக்கே எழுந்து குளித்து, அந்த நடுக்கத்துடனேயே கோவிலுக்குச் சென்று சுப்ரபாதம் பாடிய நாட்கள் இன்றும், என்றும் என் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் பசுமையான நினைவுகள்! அந்த நினைவுகள் இன்று நினைத்து பார்த்தாலும் ஆனந்தப்பட வைக்கும் நினைவலைகள்!! என நெஞ்சுக் கூட்டுக்குள்ளே சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள இனிமையான நினைவுகள்!!

காலைப்பொழுதில் வாட்டி எடுத்த பனி அரக்கன் கதிரவனின் கதகதப்பில் சற்றே சென்று ஒளிந்து கொண்டாலும் குளிரின் கடுமைதான் குறையுமே தவிர குளிர் குறையாது. அந்த மாலைப் பொழுதில் அந்தக் கோவிலில் செய்யும் பூஜைகள் அபாரமா இருக்கும்!

இப்படியே படிப்பு, பாட்டிக்கு உதவிகள், மற்ற நேரத்தில் கோவில்தான் எனது இருப்பிடம். பேசிக்கொண்டு இருப்பது அங்கே இருக்கின்ற சுவாமி விக்கிரகத்திடந்தான். எனக்கு இருக்கும் ஒரே தோழி அந்த கடவுள்தான்.

இது படிப்போருக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் நான் உணர்ந்ததை தான் கூறுகிறேன்.கடவுள் இருக்கு என சொல்பவர்களுக்கு கண்டிப்பாக கடவுள் இருக்கு. இல்லை என்பவர்களுக்கும் கண்டிப்பாக கடவுள் இருக்கு. அவங்கதான் எங்கேயோ ஒளியாக திகழ்கின்ற உருவமில்லாத அருவமான உருவம். அண்ட சராசரத்தில் இருக்கும் ஒவ்வொரு துகள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள் நம்மை செம்மை படுத்துவதோடல்லாமல் நல்வழி படுத்திக் கொண்டும்தான் இருக்கின்றார்கள்.

கடவுள் இல்லை என்று யாரும் சும்மா சொல்லிவிடுவதில்லை, அப்படி கூற அவர்களிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கலாம். அதே கடவுள் இருக்கின்றது என்று கூறுவதற்கு என்னிடம் இருக்கும் ஆதாரம் நிமிர்ந்து நிற்கும் நான்தான்!!! இதை தவிர என்னிடம் வேறு எந்த ஆதாரமும் இல்லை. உன்னோட உழைப்பினால் நீ உயர்ந்தாய் இதற்கு எதற்கு கடவுள் பெயரை கூறுகிறாய் என்று கேட்கலாம், அருமையான கேள்வி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அனைவரும் நிமிர்ந்து பார்க்கும் இந்த வாழ்க்கையை அடைய எனது உழைப்பும் மட்டும் காரணம் இல்லை என்று அடித்துக் கூறவும் முடியும்.

உங்கள் முன் சிரித்துக் கொண்டு வலம் வரும் இந்த ரம்யா சந்தித்த வேதனைகள்தான் எவ்வளவு?இந்த முன்னேற்றம் காண இடையில் ஏற்பட்ட தடங்கல்கல்தான் எவ்வளவு? ஏமாற்றங்கள்தான் எவ்வளவு? அவமானங்கள்தான் எவ்வளவு? எதுவுமே எண்ணிலடங்கா! கணக்கிலடங்கா! அந்த சூழ்நிலையில் தள்ளப்பட்ட நான், எழ முடியாமல் முடக்கப்பட்ட நான்,எப்படி சாதரணமாக நடமாட முடிந்தது? அந்த தைரியமும் துணிச்சலும் கொடுத்தது யார்? எங்கோ ஏதோ அண்டத்தில் இருக்கும் அரூவமான உருவம்தான் என்று என்னால் கூற முடியும்!

என உள்ளத்தில் ஒரு மூலையில் ஒளிக் கீற்றாய் அவ்வப்போது வந்து போகும் ஒரு ஜ்வாலைதான் எனக்கு மனதில் ஒரு நம்பிக்கையை கொடுத்தது. ரம்யா இதில் இருந்து மீண்டு வா! நடந்து வா! ஓடி வா! இந்த உணர்வுகளால் நான் திகைத்தேன். உன்னால் முடியும் என்று அவ்வப்போது அழைத்துக் கொண்டே இருந்தது. அந்த ஒளி அளித்த வெளிச்சத்தில் நான் மெதுவாக மிக மெதுவாக என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை விதையை மனதில் மிகவும் ஆழமாக பதித்தேன்.

தாக்கிய அவமானகள்! ஏற்பட்ட துன்பங்கள்! துக்கங்கள்! வேதனைகள் அனைத்தையும் மறந்து! மன்னித்து, சில நிகழ்வுகளை மட்டும் நினைவில் உரம் போட்டு வளர்த்து, அதன் மேல் கோபம் வைத்து, அந்த கோபத்தில் ஏற்பட்ட ஜ்வாலையில் என்னை நானே திடப் படுத்திக் கொண்டு தவழத் தொடங்கினேன்! அப்புறம் தத்தி தத்தி நடந்து, பிறகு சாதாரண நடை நடக்கவே பட்ட கஷ்டங்கள் அதிகம்தான். இதற்கெல்லாம் காரணம் ஏதோ ஒரு மூலையில் இருந்து நம்மை வழி நடத்துகிறது! அந்த நடத்துதலில் நமக்கு எந்த தீங்கும் வராது என்ற ஒரே நம்பிக்கை. நடந்தேன்.. நடந்தேன் ஜெயித்தேன்!!!

என்னைப் பொறுத்தவரையில் படிக்கும் காலங்களில்தான் எனது வாசஸ்தலம் கோவிலாக இருந்தது. இப்போ வேலைக்கு வந்த பிறகு நினைத்த நேரத்திலோ அல்லது விசேஷ காலங்களிலோ கோவிலுக்கு செல்ல முடிவதில்லை. அதற்காக நான் வருத்தப்பட்டதும் இல்லை. நம் தூய்மையான மனதே கடவுளின் வாசஸ்தலம், அப்படி இருக்க நான் ஏன் கோவிலுக்கு போகவில்லை என்று வருத்தப் படவேண்டும். சூழ்நிலை அமைந்தால் கண்டிப்பாக செல்வேன். மத்தபடி எனக்கும் கடவுளுக்கும் இடையே இடைத்தரகர்கள் யாரை பற்றியும் யோசிப்பதில்லை, சந்திக்க நினைத்ததும் இல்லை.

பிரபல பதிவர் மயிலு விஜி என்னை சொன்னார்கள் எனது வீட்டை சமயபுரத்திற்கு மாற்ற நினைக்கும் ரம்யா என்று...
ஆமாம் விஜி இதில் என்ன தவறு? அப்படிதான் எங்கள் வீடு!அது ஒரு ஆலயம்தான்!! அந்த ஆலயத்தில்தான் எங்களின் இன்றைய வாசம் என்றால் அது மிகையாகாது! எளிமையான வீடுதான் ஆனாலும் எங்களது வீட்டிலும் ஒரு ஈர்ப்பு இருக்கின்றது என்று எங்க வீட்டிற்கு வருபவர்கள் அனைவரும் கூறுவார்கள். எங்க வீட்டிற்கு வருபவர்கள் எம்மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த இடம் மனதிற்கு அமைதியை கொடுக்கிறது என்று சொல்லாமல் சென்றவர்கள் மிகக் குறைவு.

கடவுளுக்கும் நமக்கும் என்ன ஒப்பந்தம் இருக்கிறது? ஒன்றுமே இல்லை! கூட்டி கழிச்சிப் பார்த்தால் எதுவுமே இருக்காது; இந்த உணர்வு என்னோட மனதில் ரீங்காரமிட்டு சுற்றி வரும் ஒரு உண்ணதமான் உணர்வு! இந்த உணர்வை நான் ரசிக்கிறேன்! நேசிக்கிறேன்! போற்றுகிறேன்! துதிக்கிறேன்! கரைந்து போகின்றேன்! இப்படி எவ்வளவ எழுதிக் கொண்டே செல்லலாம்.

எந்த கோவிலுக்கு செல்லும்போதும் பெரிய ஆன்மீகவாதியாகவோ, வேதங்கள் பல கற்றுக்கொண்டோ, நேம நிஷ்டைகள் பல கடைபிடித்தோ இருக்க வேண்டிய அவசியமில்லை.மாறாக, யாரையும் துன்புறுத்தாமல், ஒருவருக்கும் கெடுதல் நினைக்காமல், பரிசுத்தமான மனதுடன் இருந்தாலே போதும். எதிலும் ஒரு நிறைவு கிடைக்கும். சாமியிடம் பயம் வேண்டாம்! பக்தி வேண்டாம்! கலப்படமில்லாத நேசம் ஒன்றே போதும்! எளிதில் எதையும் வென்றிடலாம்.

சுருங்கசொல்லின் மனிதன் மனிதனாக இருக்கவேண்டும். அன்பு, பண்புடன், காம, குரோத, லோக, மோக, மத, மாச்சர்ய இவைகள் அனைத்தும் தவிர்த்து, நல்ல மனதால், நல்ல சிந்தனையுடனும் வாழத் தெரிந்திருக்கவேண்டும்.மனதால் கூட எவருக்கும் தீங்கு நினைக்கக்கூடாது.(இதுதான் ஆறாவது அறிவின் மிக முக்கியமான வேலை)

இந்த பண்புகளை மனிதனால் மட்டுமே வளர்த்துக் கொள்ள முடியும். அதனால்தான் மனிதப் பிறவியை மிகச் சிறந்த பிறவியாக சிலாக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை கோவிலுக்கு எதற்கு செல்கிறோம். அங்கே சந்திப்பவர்களிடம் குசலம் விசாரிக்கவா? இல்லை தெரிந்தவர்களுடன் புறம் பேசவா? கண்டிப்பாக இல்லை! செல்லும் நேரம் குறைவாக இருந்தாலும், செல்லும் நாட்கள் கணக்கிலடங்கினாலும் நோக்கம் ஒன்றே!

என்னைப் பொறுத்தவரை எந்த கோவிலுக்கு சென்றாலும் ஒரே தெய்வத்தின் உருவம் தான் எனது கண்களுக்கு தெரியும், திருப்பதி சென்றாலும் மாரியம்மாதான், ஸ்ரீரங்க நாதரிடம் சென்றாலும் மாரியம்மாதான், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றாலும் தெரியும் உருவம் மாரியம்மாதான். இப்படி எதிலும் அம்மாவை ஒரு நிலைப் படுத்தி வைக்க முதலில் நான் எனது மனதை ஒருநிலைப் படுத்தி வைக்க வேண்டும் அல்லவா? அந்த காரியத்தை மிகச் சிறிய வயதிலேயே செய்து முடித்துவிட்டேன். யோக நிலையை எனது ஒன்பதாவது வயதில் அடைந்தேன். இது என்னோட பாட்டி உபயம். அவர்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. எனக்கு முன்னால் ஒரு அதிசயமான ஒரு பிம்பம் எனது பாட்டிதான்!!

அதேபோல்தான், எந்த கோவிலுக்குப் போனாலும் அனைத்தும் மறந்து போகும். ஒரே இலக்கு நம் முன்னால் எந்த உருவச் சிலை உள்ளதோ அதனுடந்தான் மனம் ஒரு நிலைப்பட்டுப் போகும். ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ நமது கவலைகள் அனைத்தையும் மறந்து நிற்கின்றோமே! அதுதான் என மனதில் தோன்றும் ஒரு அருமையான யோக நிலை. இதற்கு மேல் என்ன வேண்டும்? எதுவும் வேண்டாம்...

எந்த கோவிலுக்கு சென்றாலும் என் கண்களுக்கு மட்டுமல்ல கருத்துக்களுக்கும் தெரிவது கடவுள் ஒன்றுதான். அந்த கடவுள் நான் மனமுருக வழிபாடும் எனதன்பு தெய்வமான சமயபுரமாரியம்மன்தான்!!!

கிறித்துமஸ் விழாவில் அந்த தோழிகளுடன் கிருஸ்துமஸ் கொண்டாடுவோம்.
இஸ்லாமிய தோழிகளின் வீட்டிற்கு ரமலான் நோன்பு சமயத்தில் சென்று அவர்களின் நோன்பில் கலந்து கொள்வோம். அவர்கள் கொடுக்கும் அந்த நோன்பு கஞ்சியையும் அதே பய பக்தியோடு சாப்பிடுவோம்.

இவர்கள் அனைவரும் எங்க வீட்டில் தீபாவளியை கொண்டாடுவாங்க.

மதம் தாண்டி, இனம் தாண்டி, பல நட்புக்களை அளித்து அந்த நட்புக்களே என்னைச் சுற்றும் உறவுகளாக மாறிய இத்தருணம் கூட அந்த கடவுள அளித்ததுதான் என்றால் அது மிகையாக!

மயிலு, இந்த தலைப்பில் எழுதினால் முடிவே இருக்காது. எனது மனதில் அவ்வளவு உள்ளது. ஆனாலும் முடிக்கும் தருணம் வந்து விட்டது என்று எண்ணுகின்றேன். கைகள் ஒய்ந்து விட்டன, ஆனால் எண்ணங்களும் அதில் எழும் ஓசைகளும் மனதில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன. மற்றுமொரு தருணத்தில் மறுபடியும் இதே போல் ஒரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்.

டிஸ்கி: இங்கு எழுதி இருப்பது அனைத்தும் என்னோட தனிப்பட்ட உணர்வுகள்தான். ஒருவரையும் புண்படுத்த அல்ல. என்னுடைய நம்பிக்கைஎன்னுடன் உறவாடிக் கொண்டிருக்கும் எனதருமையான உணர்வுகளின் உயிரோட்டங்களின் ஆர்ப்பரிப்புதான். நண்பர்கள் நல்ல புரிதலுடன் இந்த தோழியை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.





Saturday, June 19, 2010

அதனாலென்ன!!


விடிய விடிய படித்தும்
விளங்காமல் போன பாடங்கள்
விடிந்ததும் கேலி செய்ததே!

****

வாழ்க்கைப் பாதைகளில்
வரைந்து வைத்த ஓவியம் போல்
கால இறகு பூக்களை தூவி
வைத்ததே!
****

எந்த வடிவமும் பிடிப்பதில்லை
நான் மனதில் வடித்த
உன் முகம் தவிர

****

மலை உச்சிக்கு சென்று
உயிரை துறக்க நினைக்க
ஏதோ ஒன்று மனதை மாற்றியதே!

****

தேர்வுத் தாள்களில்
எழுதிய எழுத்துக்கள்
செல்லுபடியாகாமல் பரிசாக்கியது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே!
****

ஒரிஜினல் கவிதை எழுதியவர் ஈரோடு கதிர்: அவரின் வேறென்ன

கதிருக்கு எதர் கவிதை எழுதியவர்கள் ஏழு பேரு என்று சொன்னார்கள் அவர்கள் பின் வருமாறு:

கதிர் (ஒரிஜினல் கவிதை ): வேறென்ன?

பழமைபேசி: பிறகென்ன?

நிஜம்மா நல்லவன்: வேறென்ன?

இயற்கை ராஜி: நானில்லாமலென்ன‌?

வானம்பாடிகள்: கதிருக்கு எதிரு

நட்புடன் ஜமால் : அதனாலென்ன!!

விவசாயி: அதுக்கென்ன?


இவங்களோட சேர்த்து நானும் எழுதி இருக்கேன்.... நீங்க படிச்சிருப்பீங்க :)

எனக்கு தெரிஞ்சி இவ்வளவு பேருதான் எழுதி இருக்கோம். இன்னும் எவ்வளவு பேரு எழுதி இருக்காங்கன்னு இப்போ நிலவரப்படி தெரியல:) பொறுத்திருந்து பார்ப்போம்:)




Monday, June 14, 2010

எனது ஹாஸ்டல் அனுபவம்!!

வேலைக்கு செல்லும் மகளிர் விடுதியில் தங்கி இருந்த போது ஏற்பட்ட பல அனுபவங்களில் இதுவும் ஒன்று.

தினம் தினம் ஒரு அனுபவம்தான். விடிந்தால் ஒரு பிரச்சனை, விடிந்து முடிந்தால் ஒரு பிரச்சனை, இதில் சில தானே நிகழ்வது, சில நமக்கே தெரியாமல் நாம் காரணமாவது. நான் எப்போதும் இரெண்டாம் ரகம்தான். என்னால்தான் பல பிரச்சனைகள் எனக்கே தெரியாமல் உருவாகிவிடும். .

உண்மையை ஒத்துக் கொள்வதில் தனி தைரியம் வேண்டும் அல்லவா? ஹா ஹா என்ன செய்ய வால் நம்பர் ஒண்ணாக இருந்தால் இந்த மாதிரி நிகழ்வுகள் சகஜம் தானே? சரி வாங்க என்னான்னு பார்க்கலாம்!!

நான் இருவர் தங்கி இருக்கும் அறையில் இருந்தேன். என்னுடன் இருந்த அக்கா ரொம்ப பெரியவங்க. அவங்க டீச்சரா இருந்தாங்க. எனக்கு காலை ஷிப்ட். ஏழு மணிக்கு போயிட்டு மாலை ஐந்து மணிக்கு ஷிப்ட் முடியும். மாலையில் சில சமயம் ஐந்து மணிக்கு வந்து விடுவேன். பல சமயம் அறைக்கு வர ரொம்ப நேரம் ஆகும். அன்று பார்த்து கொஞ்சம் சீக்கிரம் வந்துவிட்டேன். அங்கே எனது விடுதியில் புதுசா சேர்ந்திருந்த சுந்தரி மிகவும் சோகமாக உக்காந்திருந்தாள். இதுதான் வில்லங்கத்திற்கு ஆரம்பம் என்று எனக்கு அப்போ தெரியாமல் போய் விட்டது.

உள்ளே நுழையும்போதே இந்த காட்சியை கவனித்து விட்டேன். இருந்தாலும் பசி என்ற அரக்கன் என்னை மிகவும் மோசமான நிலையில் தாக்கியதால் வேகம் வேகமாக டீ குடித்துவிட்டு சுந்தரியின் அருகே அமர்ந்தேன்..

"என்ன ஆச்சுங்க சுந்தரி? புதுசா வந்திருக்கீங்கல்லே! ஹாஸ்டல் வசதியா இருக்கா? சாப்பாடு நல்லா இருக்கா? " (என்ன கேள்வி சட்டுன்னு விஷயத்திற்கு வருமாறு மனது சொல்கின்றது!)

"எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் ரம்யா, என்னோட ரூம்லே ஒரே கட்டில் தான் இருக்கு. இன்னொரு கட்டில் வர ஒரு வாரமோ இல்லை பத்து நாளோ ஆகுமாம்"...

"சரி அதுக்கு என்ன இப்போ?".

"ரூமுலே ரெண்டு பேரு தங்கி இருக்கோம்"
"சரிப்பா யாரவது ஒருத்தர் கட்டில்லே படுத்துக்கோங்க, அடுத்தவங்க கீழே படுத்துக்கோங்க, என்னப்பா இன்னும் பத்து நாள் தானே சமாளிக்க மாட்டீங்களா?"

"இதெல்லாம் பிரச்சனை இல்லே! என்னோட அறையிலே இருக்கிற கவிதா நான் ஒருத்தி இருக்கிறதை சட்டையே பண்ணாம அவ பாட்டுக்கு நேத்து ராத்திரி கட்டில் நிறைஞ்சு படுத்து தூங்கிட்டா. அதை நினைச்சாதான் ஒரே கோவமா வருது ரம்யா" என்றாள் அழமாட்டாத குறையாக.

"ஐயோ! அப்படியா செஞ்சா கவிதா? எனக்கு அவளை பத்தி அவ்வளவா தெரியாது. இருந்தாலும் உன் கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு தூங்கி இருக்கலாம்" (எண்ணையை ஊத்திட்டோமோ? அப்படிதான் தெரியுது:))

"இன்னைக்கு என்ன பண்ண போறேன்னா, எனக்கும் கட்டில்லே கொஞ்சம் இடம் குடுன்னு கேக்கப் போறேன். நானும்தானே பணம் கட்டறேன். அவ மட்டும் என்ன ஜமீனா?" என்று சொல்லும் போதே கோபம் கொப்பளித்ததை என்னால் உணர முடிந்தது.

"நேரம் ஆச்சு நான் வரேன்" என்று கிளம்பி போய்ட்டாங்க சுந்தரி.

இது என்ன நடக்குமோ என்ற பயம் இருந்தாலும் அடுத்த என்னோட வேலைகளில் கவனம் செலுத்தியதால் (வேறு என்னா சாப்பாடுதான்) சுந்தரியை அப்படியே மறந்து போனேன்.

அடுத்த நாள் மாலையில் அலுவலகத்தில் இருந்து தாமதம் இல்லாமல் வந்து சேர்ந்தேன். அன்று சுந்தரி என்னோட அறையில் அமர்ந்து கொண்டிருந்தாள். எனக்கு ஒரே ஆச்சர்யமாகிப் போனது. ஏனெனில் வேலம்மாக்கா ஒருவரிடமும் பேச மாட்டாங்க. இந்தப் பெண்ணுடன் இருப்பதைப் பார்த்தவுடன் புரியாத புதிரானேன். டீ கோப்பையுடன் மெதுவாக சுந்தரியின் அருகே அமர்ந்தேன், மனதில் ஒரே பரபரப்பு. என்னாவா இருக்கும்? மறுபடியம் ஏதாவது பிரிச்சனையா என்று அறிவதில் ஆர்வம் அதிகமானது.

ஆனால் என்னோட அறையில் இருந்த வேலம்மாக்கா என்னைப் பார்த்து முறைத்தார்கள். நான் அதை கண்டு கொள்ளாமல் சுந்தரியின் அருகே அமர்ந்து... "என்னாச்சு பா?" என்றேன்.

"உன் கிட்டே சொன்ன மாதிரி எனக்கும் கட்டில்லே படுக்க உரிமை இருக்கு, மரியாதையா எனக்கு கொஞ்சம் இடம் விட்டு படுத்துக்கோன்னு சொன்னேன். அவளும் தள்ளி படுத்துகிட்டா. ஆனா பாதி ராத்திரி வேணும்னே என்னை உதைச்சி கீழே தள்ளிட்டா! இடுப்பிலே நல்ல அடி" என்று அழ ஆரம்பித்தாள் சுந்தரி.

"ஹையோ இதென்னா கூத்தா இருக்கு! ஆனாலும் கவிதா ரொம்ப மோசம்பா" கிளம்பும்போது என்னால் இயன்ற ஒரு சின்ன ஐடியா சொல்லி அனுப்பினேன். அதாவது ஒரே கட்டிலில் இருவரும் தலை கீழாகப் படுத்துக் கொள்ளுங்கள். அப்போது இடம் அதிகமா கிடைக்கும் என்றேன். அதற்கு சுந்தரியும் வேகமாக தலையை ஆட்டிவிட்டு சென்றார்கள். மறுபடியும் வேலம்மாக்கா என்னை பார்த்து முறைத்தார்கள்"

"சும்மாவே இருக்காமாட்டியா ரம்யா வீண் வம்பை விலை கொடுத்து வாங்குற? இதெல்லாம் நல்லதுக்கே இல்லேன்னு திட்டினாங்க"

அடுத்த நாளோ அதிகப் பிரச்சனை ஆகிவிட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் உதைத்துக் கொண்டதின் விளைவு இருவர் முகத்திலும் காயங்கள். கேட்டில் நுழையும்போதே எனக்கு விஷயம் காதில் விழுந்து விட்டது. ஒரே பயம். நான் கொடுத்த ஐடியா இவ்வளவு மோசமா விளைவுகளை ஏற்படுத்தி விட்டதே! அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சிகிட்டே உள்ளே நுழைந்தேன்.

மெதுவா என் அறைக்கு செல்ல முயன்றபோது வார்டன் அறையின் முன்னால் ஒரே சத்தம். அனைவரும் வார்டன் ரூம் வாசலில் குழுமி இருந்தார்கள். கவிதா உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தாள். சுந்தரியும் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். இருவரும் ஒரே நேரத்தில் கத்தியதால் விஷயம் தெரியாதவர்கள் விழித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குதான் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுத்தது. நான் கொடுத்த ஐடியாவினால்தான் இப்படி ஆகிவிட்டது என்று எல்லாருக்கும் தெரிந்து விட்டதாக வேலம்மாக்கா என்னிடம் கூறினார்கள். படுபாவி இன்னும் யார் யாரிடம் சொல்லி இருப்பாளோ என்று மனதில் பயம் வேறு...

மெதுவாக கூட்டம் இருக்கும் திசையில் செல்லாமல் அறையினுள்ளே அடைந்து விட்டேன். எல்லாம் முடிந்து வேலம்மாக்கா வந்தார்கள்.

"என்னாம்மா இப்படி ஒரு ஐடியா கொடுத்திட்டு போயிட்டே??"

"ஐடியா கொடுக்கத்தான் முடியும், கவிதாவை அடிக்கவா முடியும் போங்கக்கா"

"உனக்கு கொழுப்பு ஜாஸ்த்தி ஏன் வீணா இதுலே எல்லாம் தலையிடரே ஒழுங்கா உன்னோட வேலை உண்டு நீ உண்டுன்னு இருக்க மாட்டியா" இது வேலம்மாக்காவின் தரப்பு நியாயம்.

மெதுவா போய் கூட்டத்தில் கலந்து கொண்டு இருவரையும் நோட்டம் விட்டேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. ரெண்டு பேரு முகமும் வீங்கிப் போயிருந்தது எனக்கு ரொம்ப பயமா போச்சு. இந்த சண்டைக்கும், இந்த செயலுக்கும் காரணம் யாரு என்று நைசா விசாரித்தேன். காரணம் யாருக்கும் தெரியாது என்று கூறினார்கள். பிறகுதான் உயிர் வந்தது. தைரியமா சுந்தரியை என் அறைக்கு வரவழைத்து விவரம் அறிந்தேன்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக தற்போது தங்கி இருக்கும் அறையை காலி செய்து விட்டு வேறே அறைக்கு செல்லுமாறு ஐடியா கொடுத்தேன். அதன்படி மறுபடியும் வார்டனிடம் தனக்கு வேறே அறை கேட்டு இருக்கிறாள் சுந்தரி. இப்போது அறை எதுவும் காலியாக இல்லை இரு பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த செய்தி மாலை என் காதுகளுக்கு எட்டியது. இரண்டு நாட்கள் முன்பு நான்கு பேர் தங்கும் அறையில் ஒரு பெண் காலி செய்துவிட்டு சென்று விட்டதால் அங்கு ஒரு பெட் காலியாக இருப்பது எனக்கு தெரியும். அதனால்தான் அப்படி ஒரு ஐடியா சுந்தரிக்கு கொடுத்தேன். ஆனால் ஏன் வார்டன் அப்படி கூறினார்கள் என்று புரியவில்லை. அந்த விவரத்தையும் சுந்தரியின் காதில் போட்டு வைத்தேன். ஏனெனில் கவிதா சரியான ராங்கிக்காரின்னு இன்னொரு தோழியும் என்னிடம் கூறியதால் சுந்தரியை காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்கு இருப்பதாக என் மனது கூறியது(இதெல்லாம் கொஞ்சம் ஓவரா ஸீன் போடறதா நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது:-)).

இந்த வெவரம் தெரிந்தவுடன் சுந்தரிக்கு மிகவும் கோவம் வந்து, அதே வேகத்துடன் வார்டன் அறைக்கு விரைந்து சென்றாள். அங்கே கவிதா தனக்கு வேறே அறை கொடுக்குமாறு விவாதம் செய்து கொண்டிருந்திருக்கிறாள், இல்லாதையும் பொல்லாததையும் வார்டனிடம் சுந்தரியை பத்தி கவிதா போட்டு கொடுத்ததை காதில் வாங்கிய சுந்தரி, அழுகையுடன் எனது அறைக்கு வந்து சேர்ந்தாள். இந்த முறை வேலம்மாக்கா ரெண்டு பேரையும் வெளியே போகச் சொல்லி விட்டார்கள். எனக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. அந்த நேரத்தில் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. கவிதா அறையை காலி செய்து விட்டால் சுந்தரிக்கு பிரச்சனை இல்லை என்று முடிவெடுத்து அதை உடனே அவளிடம் கூறாமல் அமைதியாக ஒரு நாளை கடத்து ஆறப்போட்டு பிறகு யோசிப்போம் என்று கூறி சுந்தரியை அனுப்பி வைத்தேன் (இப்போதைக்கு சுந்தரிக்கு நான்தான் லீகல் அட்வைசர்.. காலத்தின் கொடுமையை பார்த்தீங்களா?).

பிறகுதான் தெரிய வந்தது, கவிதாவும், சுந்தரியும் சண்டை போடுவாங்கன்னு நாலு பேர் ரூமிலே இருக்கறவங்க பயப்பட்டதால், வார்டன் இவர்களை தவிர்த்து விட்டதாக ஒரு செய்தி எனது காதுகளுக்கு எட்டியது. தெரிந்தும் நானும் பேசாமல் இருந்து விட்டேன். எந்த தரப்பிலும் எந்த மாறுதல்கள் இல்லாததால் சுந்தரி வேறே ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள்.

இப்படி தினம் தினம் பல அனுபவங்களுடன் கடத்திய நாட்களை இப்போது அசை போட்டாலும், சில அனுபவங்கள் மனத்திற்கு கஷ்டமாக இருந்தாலும் பல அனுபவங்கள் சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக இருக்கும்.

நாம் சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் மரணம் நம்மை விட்டு வெகு தூரத்தில் விலகி நிற்கும்....

ரம்யா...