என் செல்வங்களுக்கு இன்று நான் தொடுக்கும் கதை மாலை !!நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைச் செய்வதாகும். அப்படிச் செய்வதன் மூலம் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் உயர் நிலையை அடைந்து விடலாம்.
ஓர் இளம் துறவி காட்டிற்குச் சென்றார். அங்கு தியானம், வழிபாடு, யோகப் பயிற்சி முதலியவற்றில் நெடுங்ககாலம் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
அப்போது அவர் தலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும், கொக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம். ஆத்திரத்துடன், 'என்ன! எவ்வளவு துணிவிருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்' என்று கூறியபடியே அந்தப் பறவைகளைக் கோபத்துடன் பார்த்தார்.
யோகி அல்லவா! அவரது தலையிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளைச் சாம்பலாக்கிவிட்டது.
அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, தலைகால் புரியாத மகிழ்ச்சி கொண்டார்.சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி உணவிற்காக அருகிலுள்ள ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன் நின்று, 'அம்மா, பிச்சை இடுங்கள்' என்று கேட்டார்.
'மகனே கொஞ்சம் இரு' என்று வீட்டிற்குள்ளிருந்து ஒரு குரல் வந்தது.
இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், 'பேதைப் பெண்ணே, என்னைக் காக்க வைப்பதற்கு உனக்கு என்ன தைரியம்! என் சக்தியை நீ அறியவில்லை' என்று நினைத்தார்.
இப்படி அவர் நினைத்ததுமே உள்ளிருந்து, 'மகனே, உன்னைப்பற்றி அவளவு பெரிதாக நினைத்துக் கொள்ளாதே. இங்கே இருப்பது காகமும், அல்ல. கொக்கும் அல்ல' என்று குரல் வந்தது.
துறவி திகைத்துவிட்டார். எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது.
கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். துறவி அவளது கால்களில் வீழ்ந்து, 'தாயே, நான் மனதில் நினைத்ததை நீங்க எப்படி அறிந்தீர்கள்?' என்று கேட்டார்.
அதற்கு அவள், 'மகனே, எனக்கு உன்னைப்போல் யோகமோ, தவமோ எதுவும் தெரியாது'.
அன்றாடம் என் கடமைகளைச் செய்து கொண்டிருக்கின்ற ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோயுற்றிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன்.
அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டியதாயிற்று. கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனப்பூர்வமாகச் செய்து வருகிறேன். திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன்; இப்போது கணவருக்குச் செய்து வருகின்றேன்.
கடமைகளைச் செய்வதாலேயே என் ஞானக் கண் திறந்துவிட்டது. அதன்மூலம்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. காட்டில் நடந்ததையும் தெரிந்து கொண்டேன். இதற்கு மேலும் ஏதாவது அறிந்துகொள்ள விரும்பினால், இன்ன நகரத்துலுள்ள சந்தைக்குச் செல். அங்கே ஒரு வியாதன் (இறைச்சி வியாபாரி) இருப்பான், அவனை நீ சந்தித்தால் அவன் உனக்கு போதிப்பான்' என்றாள்.
முதலில் அந்தத் துறவி, 'ஒரு வியாதனிடம் போவதா?' என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்று விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். சந்தையைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார்.
அங்கே கொழுத்த பருமனான ஒருவன் பெரிய கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே, விலை பேசுவதும், விற்பதுவுமாக இருந்தான். 'அடக் கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த விஷயத்தைக் கற்கப் போகிறேன்?. இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம்போல் தோன்றுகிறதே!' என்று அதிர்ந்தார் துறவி.
இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்து விட்டு, 'ஓ ஸ்வாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? சிறிது நேரம் அமர்ந்திருங்கள், என் வியாபாரத்தை முடித்து விட்டு வருகிறேன்' என்றான்.
'இங்கே என்ன நடக்கப் போகிறதோ' என்று எண்ணியவாறே அமர்ந்திருந்தார் துறவி. நெடுநேரம் கழித்து, வேலை முடிந்தது. வியாதன் பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு துறவியிடம் வந்து, 'வாருங்கள் வீட்டிற்குப் போகலாம்' என்றான்.
வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்காக இருக்கை ஒன்றை அளித்து, 'இங்கேயே இருங்கள் வந்துவிடுகிறேன்'என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.
பின்னர், வயது முதிர்ந்த தன் தந்தையையும் தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி, அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான்.
பிறகு துறவியிடம் வந்தான்.
துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்குத் தகுந்த விளக்கம் தந்தான். (அது வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் உள்ளது.)
பின்னர் துறவி வியாதனைப் பார்த்து, 'நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? இந்தத் தொழில் இழிந்தது ஆயிற்றே' என்று கேட்டார். இதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி, 'மகனே, கடமைகளுள் எதுவும் இழிந்ததோ கேவலமானதோ இல்லை. என்னுடைய பிறப்பு, கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் வைத்திருக்கிறது. எனக்குப் பற்று ஏதும் இல்லை. என் பெற்றோரை மகிழ்விப்பதற்கான சேவைகள் அனைத்தையும் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது, நான் வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என்னிடம் நீங்கள் பார்ப்பவை கேட்பவை எல்லாம், எனது நிலைக்கு உரிய கடமைகளைப் பற்றின்றிச் செய்ததால் கிடைத்ததாகும்' என்றான்.
பின் குறிப்பு
==========
எனது செல்லங்களாகிய உங்களுக்கு இந்த கதை பிடித்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
இந்த கதையின் முழு அர்த்தத்தையும் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதை உங்கள் பிஞ்சு மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
பிற் காலத்தில் இவைகள் அனைத்தும் உங்களுக்கு உபயோகப்படும்.