சந்திப்பில் பங்கு பெறுபவர்கள், நண்பர் ஜீவன், நண்பர் ஜமால், நண்பர் வால்பையன், நண்பர் கார்த்திகைப் பாண்டியன்.
நாம எல்லாரும் இப்படி ஜாலியா சந்திச்சு எவ்வளவு நாளாச்சு. ரொம்பநாள் கழிச்சு எல்லாரும் ஒன்னா சேர்ந்து சுத்தப் போறோம் இல்லே. எங்கே போலாம்? கேள்வியின் நாயகன் கார்த்திகை பாண்டியன்.
தோ! இங்கே ஒரு காம்போண்டு சுவரு இருக்கு பாரு! அதுலே ஏறி உக்காந்துக்கலாம். அப்படியே உக்காந்துகிட்டு எங்கே போகலாம்னு ஒரு முடிவிற்கு வரலாம். ஐடியாவின் நாயகன் வால்பையன்.
சரி வாங்க ஜீவன், இவரு சொல்றதும் சரியாதான் இருக்கு. வாங்க அந்த காம்போண்டு சுவற்றின் மேலே ஏறி உக்காரலாம்.
எனக்கு இப்படி எல்லாம் ஏறி பழக்கம் இல்லையே!
அநியாயத்துக்கு அப்பிராணியா இருக்கீங்களே ஜீவன்! நான் மொதல்லே ஏறி உக்காரேன். பாருங்க! அப்படியே என்னை மாதிரியே நீங்களும் ஏறி உக்காருங்க.
உனக்கு வாலு இருக்கு, அதான் இவ்வளவு வேகமா ஏறுரே! மவனே இருடி இறங்கும்போது பிடிச்சி தள்ளி விடறேன். மனதிற்குள் ஜமால் கருவிக் கொள்கிறது கண்களில் தெரியுது. என்ன செய்ய லேசா கொஞ்சம் பூசினமாதிரி குண்டாயிட்டோமேன்னு ஒரு வேதனைதான் காரணமா இருக்குமோ? இருக்கலாம் இருக்கலாம்.
அதற்குள் ஜமாலின் கைபேசி சிணுங்குகிறது. ஹல்லோ!!
ஐயோ! தங்கமணி, என்ன இந்த நேரத்துலே போன் பண்ணறாங்க?
ஏங்க உங்க தங்கமணிகிட்டே அவ்வளவு பயப்படறீங்க! வெளியே பாக்க தைரியமானா ஆளு போல இருக்கீங்க?
என்னோட தங்கமணிகிட்டே நான்தான் பயப்பட முடியும். இதென்ன கேள்வி வாலு?
ஏங்க நான் இங்கே பேசிகிட்டு இருக்கேன், நீங்க வேறே யாருகிட்டேயோ பேசிகிட்டு இருக்கீங்களே. என்ன சங்கதி?
அண்ணே! அண்ணி ரொம்ப கோவமா இருக்காங்க!
அதெப்படி தெரியும் உனக்கு?
நீங்கதான் ஒரு மாதிரி முழிக்கிரீங்களே! வேர்த்து வேறே கொட்டுது பாருங்க! மொதல்லே அதெ தொடைச்சுக்கோங்க!
பாண்டி! சும்மா இரு அவ காதுலே விழுந்தா நான் சென்னையிலே இருக்கறதை கண்டுபிடிச்சிடுவா!
என்னாங்க சொல்றீங்க நான் கண்டுபிடிச்சுடுவேனா??
இல்லேம்மா இங்கே பேசிகிட்டு இருக்கேன்....
நான் இங்கே லைன்லே இருக்கேன். உங்களுக்கு அங்கே என்ன பேச்சு??
சரி! சரி! இரு வரேன் பேசிகிட்டு இருக்கவங்களை அடிக்கவா முடியும்? கொஞ்சம் யோசி!
ஏங்க இவ்வளவு கோவப்படறீங்க? எப்பவும் இப்படி பேசமாட்டீங்களே?
அண்ணே நல்லா மாட்டுனீங்க? நீங்க அண்ணிக்கு கொடுத்திருக்கிற போன் நம்பெர் இந்தியா வந்தவுடன் பேசும் சிம் கார்டோடது. அதெ இன்னும் அவங்க கவனிக்கலை போல இருக்கு.
பாண்டி! வேண்டாம் வெவரம் பேசாதே! பெரிய பிரச்சனையாயிடும்? இதெல்லாம் உன் கிட்டே நான் கேட்டேனா? அதுவும் இப்போதான் நீ சொல்லனுமா?
இல்லேண்ணே! உஷாரா பேசுங்கன்னு சொல்ல வந்தேன். ஹி ஹி ஹி ஹையா! எப்படி சமாளிக்கப் போறாரோ? வேடிக்கை பார்க்க ஒரே ஜாலியா இருக்கு!
பாண்டி! ஜமால் வீட்டுக்கு தெரியமல் முன்னமேயே சென்னைக்கு வந்திட்டாரு. எதுக்கு? நண்பர்களை பார்க்க. இது நல்ல விஷயம்தானே! தங்கமணிகிட்டே சொல்லி இருக்கலாம். ஒத்துக்க மாட்டாங்கன்னு சொல்லலை போல. அதுனாலே நீங்க சத்தமா பேசாதீங்க. இது வாலுவோட அட்வைஸ்.
வாலு! சத்தமா பேசாதீங்க, அவங்க காதுலே விழப்போகுது! கிசுகிசுத்தார் ஜமால்
என்னாங்க, என்னாங்க நான் பேசறது காதிலே விழலையா?
விழுது என்னான்னு சொல்லும்மா?
ஆமா! இந்த மாசம் ஹாஜரை பார்க்க வரேன்னு சொன்னீங்களே எப்போ வரீங்க?
அதைத்தான் இன்னும் ஒரு நாளில் முடிவு பண்ணனும், இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே?
என்ன பேச ஆரம்பிக்கலையா? யாரு கிட்டே பேசணும்? யாரு முடிவு பண்ணனும்? ஏங்க ஒரு மாதிரி பேசறீங்க? ஹல்லோ! ஹல்லோ! நான் பேசறது காதிலே விழுதா?
என்ன சொன்னே சரியா கேக்கலையே? என்ன செய்ய? ஹல்லோ! ஹல்லோ! சரி நான் அப்புறமா பேசறேன், சிக்னல் சரி இல்லே போல இருக்கு. வச்சிடும்மா!
இல்லே! இல்லே! வைக்காதீங்க, நீங்க பேசறது எனக்கு நல்லா காதிலே விழுது. பேசுங்க எப்போ வரப்போறீங்க? டிக்கெட் வாங்கிட்டீங்களா?
இன்னும் இல்லேம்மா, எனக்கு கொஞ்சம் டைம் கொடு யோசிச்சு சொல்றேன். ஹல்லோ! ஹல்லோ! மறுபடியும் காதிலே விழலை, போனை வச்சிடும்மா!
என்ன கெடுபிடி அதிகமா இருக்கு போல ஜமால்? நீங்க இந்தியா வந்தது உங்க வீட்டுலே தெரியாதா?
இல்லே ஜீவண்ணே! எனக்கு நண்பர்கள் நிறைய பேரு இங்கே இருக்காங்க. எல்லாரையும் பார்த்திட்டு மூன்று நாட்கள் கழித்து ஊருக்கு போகலாம்னு பிளான் பண்ணி இருக்கேன். அதுக்குள்ளே போன் போட்டு அவசரப் படுத்தறாங்க.
நான் கூட வீட்டுலே வெவரம் சொல்லிட்டு வரலை. ஆபீஸ் வேலையா போறேன்னு மட்டும் சொன்னேன்.
சும்மா அப்படி சொன்னா விட்டுடுவாங்களா வாலு?
இல்லைங்க ஜீவன் உண்மையை சொல்லிட்டா அவ்வளவுதான் என்னை இப்போ வர விட்டிருக்க மாட்டங்க.
பேசிக்கொண்டிருக்கும் போதே வால்பையனின் கைபேசி செல்லச் சினுங்கலை வெளிப்படுத்த, எடுத்தால் வெகுமதியுடன் வந்த திருமதி.
என்னம்மா இப்போ பேசறே?
ஏன் நான் இப்போ பேசக் கூடாதா?
இல்லே இந்த நேரத்துலே உன்னோட போனை எதிர் பார்க்கலை!!
அப்போ வேறே யாரோட போனை எதிர்பார்த்தீங்க!
இங்கே பாரு உனக்கு இப்போ என்ன வேணும்? சட்டுன்னு சொல்லு, எனக்கு நிறைய வேலை இருக்கு.
அதெல்லாம் இருக்கட்டும் இன்னைக்கு எங்க அம்மா வருவாங்கன்னு சொல்லி இருந்தேன் இல்லே! அவங்க வரலையாம். நீங்க சென்னையிலே தானே இருக்கீங்க! அப்படியே போயி ஓரு எட்டு பார்த்துட்டு வந்திடுங்க.
இங்கே பாரு நான் வந்திருக்கிறதோ அலுவலக வேலையாக, நான் அதெ பார்க்கிறதா? இல்லே உங்க அம்மா வீட்டுக்கு போறதா?
என்னாங்க பேச்சு ஒரு மாதிரி போகுது. யாரு இருக்கா பக்கத்துலே! நிஜம்மாவே ஆபீஸ் வேலையாத்தானே போனீங்க?
ஆபீஸ் வேலையாதான் வந்தேன்! அதுலே உனக்கென்னா சந்தேகம்?
இல்லே எனக்கு சந்தேகமாவே இருக்கு. ஏன் பேசும்போது குரல் விட்டு விட்டு வருது?
அதுக்கு நான் என்னம்மா செய்ய முடியும்? ஏர்டெல் கம்பெனியைத்தான் கேக்கணும்!
அதெல்லாம் ஒன்னும் வேணாம் ஒழுங்கா பேசுங்க!
இல்லேம்மா நான் எப்பவும் போலதானே பேசறேன், சரி பாப்பா நல்லா இருக்காளா?
நான் கேட்டதுக்கு நேரடியா பதிலை காணோம் என்ன பாப்பா பீப்பான்னுகிட்டு.
இல்லேம்மா நான் அலுவலக வேலையாதான் வந்திருக்கேன். நீ தேவை இல்லாம சந்தேகப் பட்டு உயிரை வாங்காதே. வேலை முடிஞ்சவுடனே நானே உன்னை போனிலே கூப்பிடறேன். தோ! இங்கே மீட்டிங் ஆரம்பிக்கப் போறாங்க. நீ முடிச்சுக்கோ! அப்பா எவ்வளவு சமாளிக்க வேண்டியிருக்கு.
ஐயோ என்னாச்சு பயங்கர டெரர்ரா இருப்பாங்க போல இருக்கே? வீட்டுக்கு போனால் சண்டை போடுவாங்களா வாலு.
இல்லே ஜீவன் ஆபீஸ் வேலைன்னு சொன்னேன், அவங்களுக்கு நான் சொன்ன விதம் நம்பிக்கையா இல்லே. நண்பர்களை பார்க்கப் போறேன்னு சொன்னா, அவங்களை வெளியே கூட்டிகிட்டு போகலைன்னு சொல்லுவாங்க. அதான் நைசா வந்துட்டேன். ஜமால் வர்றதே அரிது. அதான் வராருன்னு சொன்னவுடனே கிளம்பிட்டேன். அவரும் அவரு திருமதிகிட்டே பொய்தான் சொல்லி இருக்காரு. நானும் பொய்தான் சொல்லி இருக்கேன். பொய் சொல்லிட்டு தப்பா பண்றோம். நண்பர்கள் சேர்ந்து எங்கேயாவது வெளியே போகலாம்னு முடிவு பண்ணினோம்.
வலையிலே சந்திக்கவா முடியுது பின்னூட்டம் போடுவதோடு சரி. நேரே சந்திச்சாதான் இன்னும் விரிவா பேச முடியும். அப்பபோ சாட் பண்ணிக்கறோம், என்னாதான் ச்சாட்டினாலும் நேரே பேசறது போல ஆகுமா? இந்த பொண்டாட்டிங்களுக்கு இது தெரியவே மாட்டேங்குது ஜீவன். என்ன ஜமால் அமைதியா இருக்கீங்க நான் சொல்றது சரிதானே!
சரிதான்.... ஆனா சரி இல்லாத.... மாதிரி இருக்குங்க வாலு. உண்மையை சொல்லிட்டு வந்திருக்கணும்.
யோவ்! வந்த வேலையை கவனிக்கலாம். இன்னமும் பேசிகிட்டேதான் இருக்கோம். சரக்கு வாங்கிகிட்டு எங்கேயாவது போய் அமைதியான இடத்துலே உக்காந்து பேசுவோம்.
கிளம்புற நேரம் பார்த்து அலைபேசியின் செல்ல சிணுங்கல் ஜீவன் பாக்கெட்டில் இருந்து வந்தது. இப்போ ஜீவனின் அலைபேசி சிணுங்க.
ஹல்லோ! ஹல்லோ யாரு பேசறது??
நான்தான் உங்க சிங்கமணி பேசறேன். குரல் தெரில? என்ன கேள்வி எல்லாம் பலமா இருக்கு?
அம்மணி இப்போதானே எனக்கு வெளியே அவசர வேலை இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன். அதுக்குள்ளே ஏம்மா போன் பண்றே?
அவசர வேலைன்னு சொல்லிட்டுதானே போனீங்க. அந்த வேலையை இன்னும் ஆரம்பிக்கலை இல்லையா? அப்புறம் என்னா பேச தயக்கம், கேள்வி கேக்கறீங்க??
ஐயோ! அண்ணே அண்ணிகிட்டே கோவபடாமா மெதுவா பேசுங்க.
ஜமால் குரல் குடுக்காதீங்க சிங்கமணி சந்தேகப் படுவாங்க.
என்னாங்க அங்கே சத்தத்தையே காணோம், நான் கேட்டுகிட்டே இருக்கேன்ல்லே.
இரு வரிசையா கேள்விதான் கேக்கறே, மனுஷனை பேச விட்டாதானே என்னோட நிலைமை தெரியும்.
ஜீவன்! இன்னும் ஆரம்பிக்கவே இல்லே அதுக்குள்ளே நிலைமையை பத்தி பேசி சந்தேகத்தை வரவழைச்சிடாதீங்க. அண்ணி ரொம்ப உஷாரா பேசர மாதிரி தெரியுது.
இல்லே வாலு நான் என்ன சொன்னாலும் நம்பிடுவாங்க. என் மேலே அவ்வளவு நம்பிக்கை. இருங்க முடிச்சிட்டு வாரேன்.
என்னாங்க எதை முடிப்பீங்க? என்ன சொல்றீங்கன்னே புரியலே!
இல்லேம்மா கிராஸ் டாக்குன்னு நினைக்கறேன், எனக்கு கூட யாரோ நடுவிலே பேசர மாதிரி குரல் கேக்குது... உனக்கும் அதே குரல்தான் கேக்குது போல...எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு பாருங்க வாலு!
என்னாங்க மறுபடியும் கிராஸ் டாக்கா, ஆனா அதுவும் உங்க குரல் மாதிரியே இருக்கே? உண்மையை சொல்லிடுங்க எங்கே போய் இருக்கீங்க?
இல்லேம்மா பதிவர்கள் சேர்த்து அவசரக் கூட்டம் போட்டிருக்காங்க. அதுக்கு முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடக்கப் போகுது. அதுக்கு முன்னே சிலர் கூடி பேசி தேர்தலை எப்படி நடத்தலாம்னு ஆலோசனை நடத்ததான் வந்திருக்கோம்.
ஓ அப்படியா! நான் கூட உங்களை சந்தேகப் பட்டுட்டேனுங்க. நல்லா ஆலோசனை பண்ணுங்க உருப்படியா எதானச்சும் செஞ்சா சரிதான். சரிங்க கூட்டம் முடிஞ்ச உடனே நேரா வீட்டுக்கு வரணும். சாயாங்காலம் வெளியே போகணும். பிள்ளைங்க பீச்சுக்கு கூட்டிகிட்டு போக சொல்றாங்க. கடை பக்கம் போய்டாதீங்க. போனீங்க எனக்கு கெட்ட கோவம் வரும். ஆமாம் சொல்லிட்டேன். இப்போ போனை வச்சிடறேன். சரியா??
சரிம்மா நேரா வீட்டுக்குத்தான் வருவேன். கவலைப் படாதே. இங்கே எனக்கு வேலை அதிகமா இருக்கு. சீக்கிரம் போனை வச்சுடு. அப்பா எவ்வளவு கஷ்டம் சிங்கமணியை சமாளிச்சுட்டா வேறே எதை சமாளிக்கறதும் கஷ்டமே இல்லே.
மறுபடியும் அலைபேசியின் சிணுங்கல், அய்யய்யோ அண்ணே! நான் கிளம்பறேன், இப்போ யாரு திட்டு வாங்கபோராங்கன்னு விளங்கலை.
ஹையோ! ஹையோ! ஜமால்ண்ணே! போன் எனக்குண்ணே!!
ஹல்லோ! ஹல்லோ! அம்மா என்னாம்மா வேணும்? நான் நாளைக்கு வந்திடறேன். சரி, சரி, சரி, சரி, நீங்க சொன்னதெல்லாம் வாங்கிகிட்டு வரேன்.
என்னா தம்பி இவ்வளவு சரி சொல்றீங்க?
ஜமால்ண்ணே எங்க அம்மா சில பொருட்களை இங்கே இருந்து வாங்கி வரச்சொல்லி இருக்காங்க. அதான்.........
இங்கே பாரு பாண்டி அம்மாங்கிறது எல்லாம் சும்மாதானே. ஏதோ பிகருகிட்டே தானே பேசினே. பொய் சொல்லாம சொல்லணும்.
என்னா ஜமாலு! சந்தேகமா கேக்குறமாதிரி இருக்கு??
ஆமாம் வாலு எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு!
அதானே கார்த்திகை பாண்டியன் உண்மையை சொல்லிடுப்பா! போன்லே யாரு?
ஜீவண்ணே! உண்மையாகவே எங்க அம்மாதான் போன் பேசினாங்க. நீங்கள்லாம் இவ்வளவு நேரம் போனிலே பட்ட அவஸ்தையை பார்த்தேனே! ரொம்ப யோசிக்கணும் போலிருக்கே. ஆனா இவ்வளவு வெவரமா என்னாலே சமாளிக்க முடியுமான்னு தெரியலை.
அதெல்லாம் பழக்கம் ஆனா தானா வந்திடும் தம்பி... சோகக் குரலில் ஜமால்..
ஆமா எங்களை போட்டு இப்படி தாளிக்கிறியே நீ எப்போ கலியாணம் செஞ்சுக்கப் போறே பாண்டி?
ஜீவன் அண்ணே! திருமணம் என்ற வட்டத்துக்குள்ளே வரனும்னா சில விஷயங்களை நான் விட்டத்து மேலே உக்காந்து யோசிச்சு முடிவு எடுக்கணும்!!! நீங்க எல்லாரும் பட்ட அவஸ்தையை பார்த்து நானே என்னோட சொந்த முடிவுலே ஒரு முடிவிற்கு வந்துட்டேன். இப்போதைக்கு என்னை விட்டுடுங்க....... என்றார் கார்த்திகைப் பாண்டியன்.


