Wednesday, November 11, 2009

ரம்யாவின் நூறாவது இடுகை நிறைவு!!

நூறைத் தாண்டிய இடுகை நண்பர்களே!!





நண்பர்களே உங்களுக்கு கேக்கு வச்சிருக்கேன் எடுத்துக்கோங்க!





என் இதயப் பூக்களை உங்களுக்கு சமர்பிக்கிறேன் நண்பர்களே!!



மகிழ்ச்சியின் உச்சம் உங்களுக்கு நான் அளிக்கும் இந்த பூங்கொத்து!!


என்னுடன் சேர்ந்து அவங்களும் உங்களுக்கு நன்றி சொல்கிறார்கள்!!

எழுத ஆரம்பித்து நூறைத் தாண்டிவிட்டது "Will To Live". இது நிஜமா... இல்லே இது நிஜம்தானா... என்ற கேள்விக்கு பதில் கிடைக்க ஒரு வேள்வியையே நிகழ்த்தி விட்டேன் எந்தன் மனதிற்குள்ளே.

எழுதப்பட்ட இடுகைகள் எனக்கு மன நிறைவை கொடுத்ததா என்று பல முறை என்னையே கேட்டுக் கொள்கிறேன்! கேள்விக் குறியாகவே இன்னும் நிற்கின்றேன்.

நூறை தொடுவதற்கு உதவியது யாரு? எல்லாம் நீங்கள்தான். என்ன யோசிக்கறீங்க? நான் உண்மையைத்தான் சொல்கிறேன்!

எனக்கு பின்னூட்டம் என்ற ஊக்க மருந்தை ஊட்டி ஊட்டி வளர்த்தீர்களே! அதைத்தான் சொல்கிறேன்.

என்னை உங்களின் பாசம் என்ற நேசக் கயிற்றால் இழுத்து வந்து நூறைத் தொட வைத்தீர்களே அதைத்தான் கூறுகிறேன்!

எத்துனை நட்புகள் எத்துனை உறவுகள், எத்துனை பந்தங்கள், இவைகள் எல்லாம் எங்கே சாத்தியம்? எங்கேயும் கிடைக்காது!

நான் மேலே கூறிய பொக்கிஷங்கள் அனைத்தும் எனக்கு கிடைத்தது இந்த வலையுலகில்தான்.

வலைபூக்களின் வாடாமலர்களான் நீங்கள் அனைவரும் என்னுடன் இருக்கும் வரை எனது வலையும் வாடாமலராக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நினைக்கவே ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது. திரும்பி பார்ப்பதற்குள் நூறைத் தாண்டிவிட்டது "Will To Live" என்ற உண்மை.

பத்திரைமாத்து சொக்கத்தங்ககளான நீங்கள் கொடுத்த ஊக்கம்தான் என்னால் இது சாத்தியப் படுத்த முடிந்தது. சாதிக்கவில்லை ஆனால் நூறைத் தாண்டிவிட்டேன். அதை நினைக்கையில் மனதிற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த என் மகிழ்ச்சிக்கு காரணனமான உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி நண்பர்களே! மிக்க நன்றி!




Monday, November 9, 2009

பிடித்தவர், ரொம்ப பிடித்தவர்..!

பிடித்தவர், ரொம்ப பிடித்தவர் என்ற தொடர் பதிவை தொடர அழைத்த வால்பையனுக்கு மிக்க ந‌ன்றி.

பிடித்தது பிடிக்காதது

பிடிக்காதது என்ற தெரிவில் எனது மனதில் இருப்பதைத்தான் எழுதினேன். எஸ்கேபிஸம் எல்லாம் உண்மையாகவே இல்லீங்க. இதுவரை எனக்கு பிடிக்காதது என்று எதுவுமே இருந்தது இல்லீங்க.

என்னைப் பிடிக்காதவங்களிடம் கூட நான் நட்போடுதான் பழகுவேன். (அவங்களுக்கு பிடிக்கலைன்னா நான் என்ன செய்ய எனக்கு பிடிக்குதே!) எல்லாவற்றையும் அதன் அதன் தனித்தன்மையோடு ரசிப்பேன். இதுவும் என்னோட பல குணங்களில் ஒன்றுதாங்க. என்னுடன் நெருங்கி பழகும் அனைவருக்கும் இந்த குணம் நன்கு தெரிந்த விஷயம்தான்.

நேர்மறையான அப்ரோச், இங்கே வாலின் தனித்தன்மை வெளிப்படுகிறது என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டுவிட்டார்கள். அது வால்பையனோட எண்ணங்கள். நான் பிடிக்காதது என்ற சொல்லை எப்படி மாற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வால்பையன் முந்திக் கொண்டு விட்டார்!

என்ன! ரம்யா ஓவரா புலம்புராளேன்னு பார்க்கறீங்களா? ச்சேச்சே! அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க என்னைப் பற்றி தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறேன் என்பதை மிகவும் அடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்.

நண்பர் வால்பையன் அழைத்த தலைப்பு மாற்றுக் கருத்துடைய தலைப்பு. அதனால்தான் இந்த தலைப்பை தனியாக எழுதுகிறேன்.


அரசியல் தலைவர்

பிடித்தவர்: C.N. அண்ணாதுரை
ரொம்ப பிடித்தவர்: கர்மவீரர் காமராஜ்

நடிகர்

பிடித்தவர்: ரஜனி, சூர்யா
ரொம்ப பிடித்தவர்: கமல்ஹாசன்

நடிகை

பிடித்தவர்: திரிஷா
ரொம்ப பிடித்தவர்: ஜோதிகா

பாடகர்
பிடித்தவர்: ஜேசுதாஸ்
ரொம்ப பிடித்தவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடகி

பிடித்தவர்: S.P.ஷைலஜா, சித்ரா, ஸ்வர்ணலதா
ரொம்ப பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா

இயக்குனர்

பிடித்தவர்: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்
ரொம்ப பிடித்தவர்: விசு, கிரேஸிமோகன்

போன முறை நண்பர் உள்குத்து, வெளிகுத்து மற்றும் கும்மாகுத்தா ஒரு கேள்வி கேட்டு இருந்தார் ("கிரேஸிமோகன் ஒரு இயக்குனரா சொல்லவே இல்லே") இந்த விளக்கம் அந்த நண்பருக்கு, அவர் யார் என்று படிக்கும்போது அவருக்கே தெரியும். கிரேஸிமோகனும் ஒரு இயக்குனர்தான். நாடகங்கள் எல்லாம் இவர் இயக்கவில்லையா நண்பரே! அந்த வழியில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாடக இயக்குனர், விளக்கம் எப்பூடி ?? நண்பரை மடக்கிட்டேனாமா இஃகிஃகி இஃகிஃகி)

கவிஞர்

பிடித்தவர்:கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும்.
ரொம்ப பிடித்தவர்: கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும்

இசைஅமைப்பாளர்

பிடித்தவர்: A.R. ரஹ்மான்
ரொம்ப பிடித்தவர்: இளையராஜா

எழுத்தாளர்

பிடித்தவர்: பாலகுமாரன்
ரொம்ப பிடித்தவர்: சுஜாதா

பேச்சாளர்

பிடித்தவர்: வை.கோபால்சாமி
ரொம்ப பிடித்தவர்: கலைஞர் கருணாநிதி அவர்கள்

டம்பிமேவி எழுதவில்லை என்பது இப்போதுதான் தெரியவந்தது.

அதனால் இத்தொடரை தொடர டம்பிமேவியை அழைக்கிறேன் மொத்தல்லேயே அழைக்காமல் விட்டுப் போனதிற்கு என்னை மன்னிக்க.

தொடரை விரைவில் எதிர் பார்க்கும் ரம்யா.....



Thursday, November 5, 2009

பிடித்தும் பிடிக்காம‌லும்!!


தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ நண்பர்கள் ஜீவன், அ.மு.செய்யது, உங்கள் ரங்கா, Romeoboy இந்த நால்வருக்கும் மிக்க ந‌ன்றி.


அரசியல்

பிடித்தவர்: C.N. அண்ணாதுரை

பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க

நடிகர்

பிடித்தவர்: கமல்ஹாசன், ரஜனி, சூர்யா

பிடிக்காதவர்: S.A. அசோகன் (ரொம்ப சூழ்ச்சியெல்லாம் பண்ணுவாரு. சினிமாவுலேதான் இருந்தாலும் எனக்கு பிடிக்காது)

நடிகை

பிடித்தவர்: ஜோதிகா

பிடிக்காதவர்: சி.கே சரஸ்வதி (ரொம்ப சதி பண்ணி சண்டை போடுவாங்க. சினிமாவில்தான் இருந்தாலும் எனக்கு பிடிக்காது)

பாடகர்

பிடித்தவர்: ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க

பாடகி

பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா (இவங்க இரெண்டு பேரையும் நான் நேரிலே சந்திச்சு இருக்கேன். ரொம்ப நல்லவங்க)

பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)

இயக்குனர்

பிடித்தவர்: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், விசு, கிரேஸிமோகன்

பிடிக்காதவர்: எல்லாரையும் ரசிப்பேன் இது மிகைப்படுத்தல் அல்ல.எந்த சினிமா பார்க்கிறேனோ அதில் உள்ள சில பிளஸ் வைத்து அவர்களை ரொம்ப பிடிக்கும். இது என்னோட தனிப்பட்ட கருத்து.

கவிஞர்

பிடித்தவர்:கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும்.

பிடிக்காதவர்: எல்லோர் கிட்டேயும் ஒரு தனித்திறமை இருக்குதுங்க. அதனால் பிடிக்காதுன்னு சொல்ல முடியாது.



இசைஅமைப்பாளர்

பிடித்தவர்: இளையராஜா

பிடிக்காதவர்: அப்படி யாரும் இல்லீங்க



எழுத்தாளர்

பிடித்தவர்: சுஜாதா

பிடிக்காதவர்: எல்லாரோடதும் படிப்பேன். அதனால் பிடிக்கலை என்பதிற்கு பேச்சே இல்லே



பேச்சாளர்

பிடித்தவர்: கலைஞர் கருணாநிதி அவர்கள்

பிடிக்காதவர்: எஸ்.எஸ்.சந்திரன் (மேடையில் பேச்சு தர்மம் மீறி ரொம்ப கேவலமா பேசுவாரு)

பதிவினை தொடர நான் அழைப்பது !

இருவரை அழைக்க விரும்புகிறேன். இவர்கள் இருவரும் எழுதி இருக்க மாட்டார்கள் என்று நம்பி அழைத்துள்ளேன். என் அழைப்பை ஏற்று எழுதுவீர்களா மக்கா?

R.கோபி

அண்ணன் வணஙகாமுடி









நியாயங்கள் எங்கு கிடைக்கும்!! பகுதி - 2

முதல் பகுதி படிக்காதவர்கள் இங்கே க்ளிக்கவும்.....

திரும்பிப் பாராமல் சென்று விட்ட முதலாளி குடும்பம் போலீஸ்காரர்களிடம் என்ன கூறிச் சென்றிருப்பார்கள் என்று சங்கருக்கு புரியாத போதும் தங்கள் குடும்பத்திற்கு சாதகமாக பேசி இருப்பார்கள் என்ற அசையாத நம்பிக்கை இருந்தது.

உள்ளே சென்று தங்கள் குடும்பத்தை விடுவிக்குமாறு அப்பாவியாய் கேட்டு இருக்கிறார் சங்கர். என்ன உங்க ஆளுங்களை விடுறதா? என்னா கேட்கறே நீ? உங்கள் முதலாளி வீட்டுலே இருந்து வந்தவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? உங்க மேலேதான் அவர்களுக்கு முழுச் சந்தேகமாம்.எப்படியாவது நகைகளை வாங்கித்தருமாறு மனு கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள். அடுத்த குற்றம் நீங்க அவங்க வீட்டுலே போய் மிரட்டி விட்டு வந்திருக்கீங்க! அதுக்கும் உங்க மேலே நடவடிக்கை எடுக்கப் போறோம்.

இப்போ நீங்க போலாம். உள்ளே இருக்கறவங்க கிட்டே விசாரிக்கிற விதத்தில் விசாரித்து விட்டு மேல்படி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று கூறுகிறோம். அதுவரை நீங்க எங்களை தொந்தரவு பண்ணக் கூடாது. அதற்கு "சங்கர் தனது மனைவி மற்றும் மகளையாவது விட்டுங்க. பெண்கள் இரவில் காவல் நிலையத்தில் தங்குவது எப்படிங்க நியாயமாகும். இப்போதே மணி ஆறு ஆகப்போகுது. அதனாலே இப்போ விட்டுடுங்க காலையிலே அழைத்து வந்து விடுகிறேன் என்று மன்றாடி இருக்கிறார்" அதற்கும் ஒன்றும் சரியான பதில் இல்லை.

இந்த சூழ்நிலையில்தான் சங்கரின் நிலைமை எங்களின் காதில் விழுந்தது. உடனே நானும் எனது சகோதரி மற்றும் நண்பர் மூவரும் யோசித்து ஒரு முடிவிற்கு வந்தோம். எங்களின் குடும்ப சட்ட வல்லுனரை சந்தித்து விவரத்தை கூறினோம். பெண்கள் காவல் நிலையத்தில் இருக்கிறார்கள் என்ற விவரம் கேட்டவுடனே தனது உதவியாளரை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு விரைந்தார். நானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தேன். ஆனால் எனது சகோதரி வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள்.

இந்த நிலையில் வக்கீலை பார்த்தவுடன், காவல் நிலைய மேலதிகாரி நீங்க ஏன் இதில் தலை இடுகிறீர்கள் நாங்களே கவனித்துக் கொள்கிறோம். பாருங்க, அந்த வக்கீல் சீனியர் வக்கீல் மிகவும் பிரபலமானவர், அவர் பெயர் எல்லாருக்கும் தெரியும். எல்லா விததிதிலும் சலுகைகள் அதிகம். அதுவும் அவைகளை நேர்மையான முறையில் பெற்றிருப்பவர். அந்த விவரமும் காவல் துறை அதிகாரிக்கு தெரிந்த போதிலும், எதற்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.

வக்கீலிடம் நாங்கள் கைது செய்திருப்பவர்கள்தான் இந்த திருட்டை செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தை நம்ப வைக்க படாத பாடு பட்டிருக்கிறார்கள். வக்கீலும் பெண்களை முதலில் விடுவிக்க பாடு பட்டிருக்கிறார். "நீங்க செல்லுங்கள், நாங்கள் விசாரணை முடிந்தவுடன் அனுப்பி விடுகிறோம்" என்று சமாதானம் சொல்லி இருக்கிறார்கள். சீனியர் வக்கீல் தனது ஜூனியர் வக்கீலை காவல் நிலையத்திலயே இருக்குமாறு கூறிவிட்டு எங்களுக்கும் விவரம் கூறினார். இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் அனைவருக்கும் பெண்களுக்கும் சேர்த்துத்தான் அடி பின்னிருக்காங்க. வேறு எதுவும் முன்னேற்றம் இல்லை.

ஜூனியர் வக்கீலும், சங்கரும் அங்கேயே கொட்ட கொட்ட இரவு பூரா தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

காவல் துறையினர் மாற்றி மாற்றி செய்த விசாரணையில் அந்த பெண் மனதளவில் மிகவும் காயப்பட்டு விட்டாள். இரவு முழுவதும் இருப்பு கொள்ளாமல் எப்போது விடியும் என்று காத்திருந்தோம். அடுத்த நாள் எங்களின் வக்கீலை தலயிட வேண்டாம் என்று கூறி விட்டார்கள். இந்த நிலையில் வக்கீலும் அவரின் கேசை கவனிக்க நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். சங்கர் காவல் நிலையத்திலயே பலியாக கிடந்தார். எங்களுக்கும் எந்த வேலையும் ஓட வில்லை யாரோ எவரோ இருந்தாலும் தவறு செய்யாத மனிதர்கள் என்று தெரிந்து விட்டது. எதற்கு இந்த நாடகம் என்றுதான் புரியவில்லை.

அதற்குள் எல்லா உறவினர்களும் வந்துவிட அவர்களை சாமாளிப்பது மிகவும் கஷ்டமாகிப் போனது சங்கருக்கு. பணம் தண்ணீராக கரைந்தது. கோவிலுக்குச் செல்ல வட்டிக்கு வாங்கி வைத்திருந்த பணம் முழுவதும் காலியானது. காவல் நிலையத்தில் இருப்பவர்களுக்கு காபி, டீ, டிபன் மற்றும் சாப்பாடு வரை வெளியே இருந்து சங்கர் வாங்கி கொடுப்பார். அப்போது அங்கே இருக்கும் அனைவருக்கும் சங்கர் வாங்கி தரவேண்டுமாம். அதனால் பணம் கண்ணா பின்னாவென்று செலவானது. செலவானாலும் உள்ளே இருப்பவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. வக்கீலையும் தலையிட வேண்டாம் என்று கூறி விட்டார்கள். என்ன நடக்கும் என்பதே யாருக்கும் விளங்க வில்லை. FIR போடப்படவில்லை. பயங்கரமான சூழ்நிலை என்று மட்டும் புரிந்தது. அதற்கு மேல் என்னால் அமைதி காக்க முடியவில்லை. நாங்கள் மூன்று பேரும் காவல் நிலையம் நோக்கிப் புறப்பட்டோம்.

ஆனால் என் சகோதரி காவல் நிலையத்திற்கு செல்லாமல் அதன் அடுத்த தெருவில் காரை நிறுத்திவிட்டு, சங்கருக்கு போன் போட்டு உடனே வருமாறு அழைத்தார்கள். வந்தவரை பார்த்ததும் எங்களுக்கே அழுகை வந்து விட்டது. முதல் முறை பார்க்கும் போது கூட கொஞ்சம் தைரியமா நல்லா இருந்தாரு. இரெண்டே நாட்களில் உருக்குலைந்து மிகவும் பாவாமா காட்சி அளித்தார்.

சரி என்னாதான் சொல்றாங்க என்று வினவினால் பேரம் பேசி இருக்கிறார்கள். ஆயிரங்கள் பேரம் பேசப் பட்டுள்ளன. கேட்ட பணத்தை கொடுத்தால் உடனே எல்லாரையும் அனுப்பி விடுகிறோம் என்று கூறி இருக்கிறார்கள் என்று அழ மாட்டாத குறையாக சொன்னார். அவ்வளவு பணத்திற்கு நான் எங்கேம்மா போவேன்.

இருந்தது பூரா செலவு பண்ணிட்டேனே. நீங்க யாரோ எவரோ என்னோட கஷ்டத்துலே இவ்வளவு நல்லது நடக்கனம்னு முயற்சி பண்றீங்க. ஆனா இங்கே இருப்பவங்களுக்கு மனதே இல்லையே. இதை சங்கர் கூறும்போது மனது வலித்தது. யாரா இருந்தால் என்னாங்க கஷ்டம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதானே! நீங்க மனதை தளர விடாமல் தைரியமா இருங்க. எதுவானாலும் பார்த்துக்கலாம் என்று நாங்கள் சமாதானப் படுத்தினோம். குலுங்கி அழுத அந்த தந்தையை பார்க்க மனதை என்னவோ செய்தது.

சரி எதுவானாலும் முதலில் எல்லாரையும் வெளிய எடுக்க முயற்சி செய்வோம் பிறகு என்னா செய்யலாம்னு யோசிக்கலாம் என்று நான் கூர்நேன். ரத்தம் கொத்திக்குது. நியாயம் கிடைக்க ஏதாவது செய்யனும்னு மனசு கிடந்தது அடிச்சிக்குது.

ஏதோ எங்களாலான பண உதவியாவது செய்யலாம் என்று அழைத்துப் போய் ATMஇல் எடுத்துக் கொடுத்தோம். அதற்குள் மேலதிகாரி சங்கரை அழைத்திருக்கிறார். சங்கர் மேலதிகாரியை சந்தித்து பேசி இருக்கிறார். எந்த தவறும் செய்யாத என்னோட குடும்பத்தை இப்படி அலைக்களிக்கரீங்களே! இது நியாயமா? நான் வேறே யாரு கிட்டேயாவது முறை இடனுமா? என்று கேட்டு இருக்கிறார். பார்த்தார் அந்த அதிகாரி சங்கரையும் தூக்கி உள்ளே போட்டு விட்டார்கள். இந்த விவரம் எங்களுக்கு வந்தவுடன் மறுபடியும் வக்கீல் வீட்டுக்கு படை எடுத்தோம்.அவருக்கும் ஒன்றுமே விளங்கவில்லை. பேரம் விவரம் சொன்னவுடந்தான் அந்த கோணத்தில் யோசிச்சு மறுபடியும் அவர்களை சந்திக்க சென்றார்.

வக்கீல் வருவதை விரும்பாத காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள், மறுபடியும் அவரின் தலையீட்டை தடை செய்திருக்கிறார்கள். சங்கரும் உள்ளே சென்றதினால் இந்த முறை பல விதத்திலும் முயற்சி செய்து அதிகாரிகளை தவறே செய்யாமல் அடைபட்டிருக்கும் அந்த ஏழைகளை விடுவிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார்.

பேசியபடி எல்லாமே கொடுக்கப் பட்டது. மூன்றாம் நாள் நள்ளிரவு சங்கரின் மனைவி மற்றும் மகளை விடுவித்து வக்கீல் அழைத்து வந்து விட்டார். மீதி உள்ளவர்களை அடுத்த நாள் அனுப்புவதாகக் கூறி விட்டனர். இவர்கள் வந்த செய்தி கேட்ட பிறகு தான் எங்களுக்கு பசிக்கவே ஆரம்பித்தது.

அடுத்த நாள் அனைவரையும் விட்டு விட்டார்கள். திருடியது யாரு என்று இதுவரை இந்த பக்கம் யாருக்கும் தெரியாது. கேட்டும் கூறவில்லை.

ஆனால் தவறாக அல்லது வேண்டுமென்றே அழைத்துச் சென்ற அந்த ஏழைகளின் உடல் பலம், மனோபலம், தேவையற்ற கடன், உறவினர்கள் முன்னே ஏற்பட்ட அவமானங்கள், அக்கம் பக்கம் ஏற்பட்ட தீரா கரைகள் இவற்றிற்கெல்லாம் யார் பதில் கூறப் போகிறார்கள்? சம்பத்தப் பட்டவர்களா! இல்லே முதலாளியம்மாவா?

இதில் சங்கரின் மாப்பிள்ளையின் அண்ணனையும் அழைத்துச் சென்றார்கள் அல்லவா? தினம் தினம் நடத்திய நூதன விசாரிப்பில் புத்தி பேதலித்து விட்டது. அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு யார் பதில் கூறப் போகிறார்கள்?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பதினெட்டே வயது நிறைந்த அந்த பெண்ணின் மனநிலையை யோசித்தார்களா? சித்தப் பிரமை பிடித்து அப்படியே அமர்ந்து இருந்தாளே! அந்த காட்சியை பார்க்கும் அந்த ஏழை தந்தை கதறிய கதறல்களுக்கு யார் பதில் கூறப் போகிறார்கள்?

எல்லாவற்றிகும் முத்தாய்ப்பு வைப்பது போல் அந்த குடும்பத் தலைவர் ஒரு முடிவு எடுத்த்தார், அவமானம் தாங்காமால் இரவோடு இரவாக குடுபத்தோடு பரலோகம் சென்றுவிடலாம்என்று முடிவெடுத்தும் விட்டார்.

அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள் என்று தெரிந்தவுடன் மனம் அமைதியை அடைந்தாலும், சங்கரின் முன்னே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் சூழ்நிலையை எப்படி சமாளிப்பார் என்ற பயம் மனதில் கவ்வ சங்கர் ஏதேனும் தவறான முடிவு எடுத்து விடுவாரோ என்று எனக்கு வந்த பயத்தை என் சகோதரியிடம் தெரிவித்தேன். அவர்களும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தார்கள். உடனே தொலைபேசியில் அழைத்து சகஜமாகப் பேசி காலையில் வீட்டுக்கு வருமாறும் கூறினார்கள். தவறான எந்த முடிவிற்கும் செல்லக் கூடாது என்று நேராகவே கூறி விட்டார்கள். அதை கேட்டவுடன் சங்கர் அழுதாராம்.

சிலதினங்கள் இப்படியே சென்றன. அவர்கள் இல்லத்தில் யாரும் சகஜ நிலைக்கு வரவில்லை. என் கவனம் முழுவதும் பதினெட்டு வயது நிரம்பிய பெண்ணின் நிலைதான் கவலைக்கிடமாக தோன்றியது.

மறுபடியும் நானும் சகோதரியும் கலந்து ஆலோசித்து அவளை அந்த சூழ்நிலையில் இருந்து வெளியயே கொண்டு வரவேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை சங்கரிடம் தெரிவித்தோம்.

அதற்கு சங்கர் கூறினார் , நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை செயல் படுத்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார். பிறகு தையல் மெசின் ஒன்று வாங்கி கொடுத்து அந்த பெண்ணை தையல் வகுப்பில் சேர்த்தோம். காலையில் கேட்டரிங் மதியம் தையல் கற்றுக் கொள்ள அனுப்பினோம். இப்போது அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறாள். ஆனால் அந்த குடும்பம் இன்னும் நிமிரவில்லை.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தில் நிறைய கசப்பான நிகழ்ச்சிகள் அரங்கேறி விட்டன. யாரால்தான் என்ன செய்ய முடியும். விதியின் வில்லத்தனமா இல்லே அவர்கள் கூறுவதுபோல் கெட்ட நேரமோ எதுவோ, இது போல் நிகழ்வுகள் நிகழாமல் இருக்க மனதார வேண்டுகிறேன்.

எங்கள் சட்ட வல்லுனரும் கூறினார். இந்த காவல்துறை அதிகாரிகள் செய்த செயல்கள் எதுவுமே விதிகளுக்குள் இல்லை. அதனால் எல்லா நிலையிலும் சென்று நீதி கேட்கலாம் என்றார். ஆனால் அந்த ஏழைத் தந்தையோ வேண்டாம் சாமி, இனி நான் எங்கேயும் வரமாட்டேன். என்னையும் என் குடுபத்தாரையும் இப்படியே விட்டுடச் சொல்லுங்க என்று கூறி விட்டார். எங்க வக்கீலும் "பாவம் மனதாலும் பொருளாதார நிலையிலும் மிகவும் பலவீனப் பட்டு இருக்கிறார்; அப்படியே விட்டுடலாம்" என்று கூற நாங்களும் அதை ஏற்றுக் கொண்டோம். ஆனாலும் மனதை அரித்துக் கொண்டிருந்த இந்த உண்மையை உங்களோடு பகிர்ந்து கொண்டு விட்டேன். என் மனதும் சற்றே லேசாகிப் போனது.

இந்த இடுகை எழுதியதின் நோக்கம், இந்த பயங்கர சூழ்நிலையில் நாங்களும் எங்களின் சகஜ வாழ்க்கையை மறந்து இந்த நிகழ்வில் அமிழ்ந்து போனோம். இனி இது போல் ஒரு கெட்ட சம்பவங்கள் யார் வாழ்க்கையிலும் நடக்க கூடாது என்று மனது நினைத்தாலும் அந்த எண்ணங்கள் ஜெய்க்குமா?? ஆனால் இது போல் சில நிகழ்வுகள் சாதாரன மக்களை எப்படி பாதித்து விடுகிறது?

டிஸ்கி: காவல் துறையில் நேர்மையான பல அதிகார்கள் இருக்கிறார்கள் அதே போல் நேர்மையான காவல் நிலையங்களும் இருக்கின்றன. நேர்மையானவர்கள் தவிர்த்து தவறு செய்பவர்களைத்தான் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

நிறைவுற்றது.....

Tuesday, November 3, 2009

நியாயங்கள் எங்கு கிடைக்கும்!!

நியாயங்களைத் கேட்டும், நீதியைத் தேடியும், நேர்மையை நாடியும் நாம் ஓடினோம், ஓடிக் கொண்டிருக்கிறோம், ஓடிக் கொண்டிருப்போம். இன்னும் இவைகளை அடைய முடியவில்லை என்ன செய்ய? அடையும் தூரம் அதிகமாக இருக்கிறது!!!



நான் எழுதுவது இந்த சமுதாயத்தில் சில மாதங்களுக்கு முன்னால் சத்தமில்லாமல் அரங்கேறிய ஒரு உறைய வைக்கும் உண்மைச் சம்பவம்.

ஒரு வீட்டில் கனகம்மா பல வருடங்களாக வீட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்(பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன). தனது மூத்த மகள் பிரசவத்திற்கு வந்திருப்பதால் தனக்குப் பதிலாக தனது பதினெட்டு வயதே ஆன இளைய மகளை அந்த வீட்டுக்கு வேலைக்கு அனுப்பி இருக்கிறார் கனகம்மா. வேலைக்கு சென்ற பெண்ணின் பெயர் இப்போதைக்கு வனஜா என்று வைத்துக் கொள்வோம். காலை மாலை இரெண்டு நேரமும் வேலைக்கு செல்வது வனஜாவிற்கு வழக்கம். அப்படி ஒரு நாள் வேலைக்கு சென்ற போது அந்த வீட்டு எஜமானியம்மா தனது வீட்டில் சில கார்பெண்டரி ரிப்பேர் வொர்க் வேலைகள் இருப்பதாகவும், யாராவது தெரிந்த ஆள் இருந்தால் கனகாகிட்டே (வனஜாவின் அம்மா) சொல்லி வரச்சொல்லு என்று கூறி இருக்கிறார். இந்த பெண்ணும் சரி என்று கூறிவிட்டு வந்திருக்கிறாள்.இதே விஷயத்தை அந்த எஜமானியம்மா அக்கம் பக்கம் வீட்டிலும் கூறி வைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே கார்பெண்டரி ரிப்பேர் வொர்க் செய்ய கார்பென்டர் என்று கூறிக் கொண்டு ஒருவன் வந்திருக்கிறான். அந்த அம்மா யாரு அனுப்பி வந்திருக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார்கள். வெளியூரில் தங்கி இருக்கும் உங்கள் கணவர்தான் என்னை இங்கு வேலை இருப்பதாக போன் செய்து போகச் சொன்னார் என்று கூறி இருக்கிறான். இந்த அம்மாவும் அதற்குமேல் விவரம் கேட்காமல் வேலை என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி விட்டு சமையல் செய்ய சென்றிருக்கிறார்கள்.

அன்று வேலைக்கு வந்த வனஜாவோ திடுக்கிட்டுப் போனாள். ஐயோ! நம்மளிடம் யாரையாவது கார்பெண்டரி ரிப்பேர் வேலைக்கு வரச்சொல்லு என்றார்களே! அவர்களே ஆளை தேடிகிட்டாங்களே! ஒரு வேளை நம்மை திட்டுவாங்களோ! என்று பயந்தவாறு வேலைகளை முடித்து விட்டு மாடி வீட்டிற்கு வேலைக்கு சென்று விட்டாள்.

இதற்கிடையே வனஜாவின் வீட்டில் அனைவரும் வேண்டுதலை நிறைவேற்ற வெளியூரில் இருக்கும் கோவிலுக்கு போக முடிவு செய்தனர். வனஜாவின் தந்தை முடிவெடுத்த அடுத்த நாள் தனது மகளை வேலைக்கு செல்லும் போது அடுத்த ரெண்டு நாட்களுக்கு லீவு சொல்லிவிட்டு வா என்று கூறி இருக்கிறார். அதன்படி வனஜாவும் வேலைகளை முடித்துவிட்டு லீவு கேட்டிருக்கிறாள். அவர்களும் லீவு எடுக்க சம்மதித்து கையில் இருபது ரூபாவும் கொடுத்து அனுப்பி உள்ளார்கள். சந்தோஷமாக வீட்டிற்கு வந்த பெண் விவரத்தை பெற்றோர்களிடம் விவரிக்க, அனைவரும் கிளம்புவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அவர்கள் வீட்டின் முன்னே ரெண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். என்னவென்று விசாரிக்க தந்தை வெளியே வர, அவர்கள் மூத்த மாப்பிள்ளையின் பெயரை குறிப்பிட்டு விசாரித்துள்ளனர். எதற்கு என்று கேட்டதிற்கு விவரம் ஒன்றும் சொல்லாமல் அவர்களின் வீடு எங்கே என்று கேட்க; மூத்த மகளின் வீடும் எதிர் வீடுதான் என்று போலீசிடம் குழப்பத்துடன் கூறி இருக்கிறார் அந்த தந்தை.

அதற்குள் அங்கே கூட்டம் கூடிவிடவே யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த நேரத்தில் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த மூத்த மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளையின் சகோதரர் இருவரையும் கழுத்தைப் பிடித்து தள்ளிக் கொண்டு வந்த போலீஸ்காரர்கள், இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னே, விவரம் எதுவும் தெரியாத நிலையில் அழைத்துச் சென்று விட்டார்கள்.

கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்த அந்த ஏழை குடும்பத்தில் ஏற்பட்ட இந்த சலசலப்பு மிகப் பெரிய இடியாக இறங்கி விட்டது. குடும்பத்தலைவர் (சங்கர் என்று வைத்துக் கொள்வோம்) சங்கர் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் காவல் நிலையத்திற்கு ஓடி விவரம் கேட்டிருக்கிறார். காவல் நிலையத்தில் ஒரு அதிகாரி கூறி இருக்கிறார், என்னவென்று? வனஜா வேலை செய்த வீட்டில் "42" பவுன் தங்க நகைகள் காணமல் போய் விட்டதாம். உங்கள் மருமகன்தான் ஆள் வைத்து திருடி இருக்கிறான், அதற்கு நிறைய பேர் உங்கள் வீட்டில் உதவி ய்திருக்கிர்றார்கள் அதனால் ஒவ்வொருவராக கைது செய்வோம் என்று கூறி இருக்கிறார்கள்.

சங்கருக்கு தலை தட்டாமாலை சுற்ற ஒன்றும் விளங்காதவராக அடுத்து என்ன செய்வது என்று புரியாமலும், உதவிக்கு யார் வருவார்கள் என்று மனம் அலைபாய, வீட்டிற்கும் காவல் நிலையத்திற்குமாக அலைந்து கொண்டிருக்கும் போதே, அவரின் மனைவி மற்றும் மகளை (வயது பதினெட்டு) அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். பயந்து போன
சங்கர் ஐயோ! என்னோட மொத்த குடும்பமும் இப்படி ஆகிவிட்டதே என்று அங்கலாய்த்த வண்ணம் என்ன செய்யலாம் என்று சங்கருக்கு குழப்பம் மிகுதியால் விவரம் அறிய மகள் வேலை செய்த வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கே வெளியூரில் இருந்து வந்துவிட்ட கணவனும் மனைவியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிராகள். சங்கர் உள்ளே என்ட்ரி ஆனதும் மிகவும் சாதரணமாக பேசி அனுப்ப முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் சங்கரோ என்ன நடந்திச்சு எனக்கு எதுவுமே புரியல, உங்க வீட்டுலே நடந்த திருட்டுக்கும் எங்க வீட்டு மனுஷங்களுக்கும் என்ன தொடர்பு என்று அழமாட்டாத குறையா விசாரித்திருக்கிறார்.

அதற்கு அந்த வீட்டு எஜமானி எங்களுக்கு ஒன்றுமே தெரியாது! ஆனால் எங்க வீட்டுலே திருட்டு போனது உண்மை. ஆனால் உங்க ஆளுங்களை நாங்க காட்டிக் கொடுக்கலை. போலிஸ் வந்து உங்க ஆளுங்களை அழைத்துச் சென்றால் நாங்க என்ன செய்ய முடியும் என்று கூறி இருக்கிறார்கள். அதற்கு சங்கர் மிகவும் தாழ்மையுடன் தயவு செய்து நீங்க காவல் நிலையம் வந்து எங்க வீட்டுலே கைது செய்த அனைவரையும் ரிலீஸ் செய்ய சொல்லுங்க என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்களும் நீங்க போங்க நான் உடனே காவல் நிலையம் வருகிறோம் என்று கூறி இருக்கிறார்கள். சங்கர் நம்பிக்கையுடன் காவல் நிலையத்துக்கு விரைந்து வந்து அங்கே எஜமானி அம்மாவிற்காக காத்திருந்தார்.

அவர்களும் வந்தார்கள், வந்தவர்கள் கையில் ஒரு மனு எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்கள். சங்கர் தன்னை வந்து மிரட்டியதாகவும் அவர்களின் குடும்பத்தார் மீதுதான் அதீதமான சந்தேகம் இருப்பதாகவும் தனக்கு நீதி அளிக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்து விட்டு சங்கரை திரும்பிக் கூட பார்க்காமல் சென்று விட்டார்கள்.


வளரும்.....