Wednesday, November 3, 2010

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே!!!

அனைத்து வாழ்த்துக்களும் எனது வலை நண்பர்களுக்கே!!











நட்புக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ இத்தீபத் திருநாளில் வாழ்த்தும் உங்களன்பு தோழி ரம்யா!!




Tuesday, October 26, 2010

சொர்க்கம் எங்கே? எதில்?? எப்போ கிடைக்கும்??

விழி மூடி இசையில் லயிப்பதிலா
தாள லயத்தோடு இசைப்பதிலா
ஜதிக்கேற்ப நடனம் அமைப்பதிலா
ஜதிக்கேற்ப ஆடும் நாட்டியத்திலா

மழையில் நனைந்து மகிழ்வதிலா
மழலையின் மந்தகாஸ சிரிப்பிலா
மழலையின் குதலைப் பேச்சிலா
மகளின் மணக்கோலத்திலா

மதியை விழுங்கும் மலையின் வீரத்திலா
மலைக்கு போர்வையான பனியை ரசித்த தருணத்திலா
மரத்தில் ரீங்காரமிடும் பறவைகளின் சப்த்தத்திலா
தோகை விரித்து ஆடும் மயிலின் ஆட்டத்திலா

அன்னைக்கு அகம் அமைப்பதிலா
பிறர்க்கு தானம் தர்மம் செய்வதிலா
எண்ணங்களை எழுத்தாய் வடிவமைப்பதிலா
வர்ணங்கள் பல நம்மைச் சுற்றி வருவதிலா

இல்லத்தை செல்வத்தால் நிரப்புவதிலா
இயந்திர வாழ்க்கையை இனிமையாக்குவதிலா
இந்திரன் சந்திரன் என்ற புகழ் வார்த்தைகளாலா
இல்லாததை திடீரென்று அடையும் தருணத்திலா

தங்கத்திடம் தஞ்சம் புகுவதிலா
தான தர்மங்கள் செய்வதிலா
தத்துவம் சொல்வதினாலா
தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் தருணத்திலா

நாணயம் நம்மைத் தேடி வருவதிலா
நன்றி மறவா தன்மையினாலா
நடப்பை உச்சத்தில் உணரும் சமயத்திலா
நஞ்சை கண்டு நகரும் தருணத்திலா

வீடு நிறைந்து உலா வரும் விருந்தினர்களாலா
வீடு நிறைய பணத்தை சேர்த்த மகிழ்ச்சியிலா
பிறரிடம் நீ காட்டும் அன்பிலா
எதிரி உன்னிடம் காட்டும் அன்பிலா

வானவில்லின் வண்ணத்தில் மயங்கும் தருணத்திலா
கண்சிமிட்டும் விண் மீன்களை ரசிக்கும் தருணத்திலா
விண்ணைத் தொட்டு பறக்கும் விமானத்தை ரசிக்கும் தருணத்திலா
மாற்றாந்தாயின் மாறா அன்பிலா
ஆடம்பரச் செலவுகளின் உச்சத்திலா


டிஸ்கி: எங்கே?? எங்கே?? எங்கே கிடைக்கும் தெரிந்தவர்கள் கூறுங்கள். இது கவிதை அல்ல எனது மனதில் ஓடிய சந்தேகங்களின் தொகுப்பு. எதில் சொர்க்கம் என்பதை எனக்கு உணர்த்துங்கள் நண்பர்களே!!

என் தேடுதலுக்கு பதில் கிடைக்கும் என்று ஏங்கும் உங்கள் (கேப்டன் ஸ்டைலில்)ரம்யா... ம்யா... யா.. யா


Monday, October 4, 2010

கேள்விகள் ரம்யா.. மாட்டிக் கொண்டவர் நசரேயன்!!


நண்பர் நசரேயன் அவர்களிடம் ஏதாவது கேள்வி கேட்டு பதில் பெற வேண்டும் என்று பல நாட்களாக யோசித்தேன். பதில் அளிப்பாரோ அளிக்கமாட்டாரோ என்று மனப்போராட்டம் வேறு. சரி பதில் கிடைக்கவில்லை என்றால் என்ன? நம் நண்பரிடம்தானே இந்த தோல்வி என்று ஒரு முடிவுடன் கேள்விகளை அனுப்பி வைத்தேன்.

நண்பர் நசரேயன் என் கேள்விகளுக்கு பெரிய மனதுடன் பதில்களை அனுப்பி இருக்கிறார். நண்பர் நசரேயன் அருமையான மனிதர், எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பதை மிகவும் விரும்புவார் (தவறாக எண்ண வேண்டாம். முக மலர்ச்சியைதான் நான் அவ்வாறு கூறி இருக்கிறேன்). எதையுமே தவறாக எண்ணாமல் ஆரோக்கியமான கோணத்தில் சிந்திக்கும் திறன் படைத்தவர். நண்பரின் மனப்பக்குவம் பல சமயத்தில் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இந்த குணம் மிகவும் ஆரோக்கியமான மனப் பக்குவம்தானே! நண்பரின் இந்த குணம் அவரின் வெற்றிக்கு மிகவும் உதவும் என்பது என் கணிப்பு. என்னோட கணிப்பு சரிதானே நண்பர்களே!!

நண்பர் நசரேயன் என்ன பதில்களை நமக்கு அளித்துள்ளார் என்பதை அறிய உங்களைப் பலவே நானும் மிகவும் ஆவலாக உள்ளேன், வாங்க நண்பரின் பதில்களைப் படிக்கலாம்.....

1. நீங்க எந்த கல்லூரியில் படித்தீர்கள்? உங்களுக்கு முதல் வேலை எங்கே கிடைத்தது? முதல் வேலை மனதிற்கு நிறைவைத் தந்ததா?

நான் மலைக்கோட்டை நகரத்திலே உள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில தான் படிச்சேன் .. ஆமா இந்த கேள்வியை தெரிஞ்சி எனக்கு ஏதும் மருத்துவர் பட்டம் கொடுக்கப் போறீங்களா? என்னோட முதல் வேலை சென்னையிலே தான் கிடைத்து, கல்லூரி முடித்துவிட்டு சென்னை வந்து மின்னணு பெறியியல் துறையிலே மைலாப்புரிலே "யுனைட்டேட் எலக்ட்ரோனிக்ஸ்ல ஒரு நேர் முகத்தேர்வுக்கு போனேன், அவரு கேட்டாரு நீ எங்க தங்கி இருக்கிறாய்னு ஆங்கிலத்திலே கேட்டாரு, அந்த கேள்வி எனக்கு எனக்கு புரியலைன்னு சொன்னேன், உடனே அவரு முதல் வகுப்பிலே தேர்ச்சி அடைந்த உனக்கு ஆங்கிலமே தெரியலையேன்னு சொல்லிட்டு என்னோட குடும்ப விவரங்களை கேட்டு, என்னை பாரிமுனை யிலே இருந்த ஒரு கப்பல் நிறுவனம் ஒன்றிக்கு என்னை அனுப்பி வைத்தார், அங்கே எனக்கு வேலை கிடைத்தது, என்னோட வேலையே எண்ணுரிலே இருக்கும் துறைமுகம் சென்று அங்கு கப்பலில் வரும் கன்டைனர்களில் உள்ள சரக்கு பொட்டலங்களை எண்ணி, அதை சரி பார்த்து அனுப்புவது, படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்ததாலே, ஆறு மதம் வேலை பார்த்துவிட்டு, வேலையை விட்டு விட்டேன். அடுத்த ரெண்டு மாசத்திலே சோத்துக்கு வழி இல்லாம ஊரு பக்கம் போனவன், திரும்பி வரவே இல்லை. ஊரிலே நண்பன் ஒருவனுக்குகாக கணணி தொழில் பயற்சி வகுப்பிலே சேர தென்காசிக்கு அவனுடன் சென்ற போது எனது விலாசத்தையும் கொடுத்து விட்டு வந்தேன். கடைசியிலே அவன் சேராம கம்பிய நீட்டிட்டான், எனது விலாசத்தை வைத்து எங்க வீட்டுக்கே வந்துவிட்ட அந்த பயிற்சி நிறுவனத்திலே வேலை செய்யும் அலுவலர் ஒருவரினால் நான் அந்த பயற்சி நிறுவனத்திலே சேர்ந்து விட்டேன். பல தடைகளை தாண்டி இப்ப எப்படியோ இருக்கேன்.

2. நண்பர்களுடன் அதிகம் சுற்றியதாக கேள்விபட்டோம் அது உண்மையா? சொல்லலாம் என்றால் தாராளமாகப் பகிரலாம்...

அது ஒண்ணும் இல்லை, ஆள் ரெம்ப கருப்பா இருக்கேன் நினைச்சிட ௬டாதுன்னு பல்லை காட்டி சிரிச்சிகிட்டே இருப்பேன், அது அவங்களைப் பார்த்து தான் சிரிக்கிறேன்னு நிறைய நண்பர்கள் உருவாகிட்டாங்க, சும்மா நண்பனா மட்டுமே இல்லாம, செலவுக்கும், சாப்பாட்டுக்கும் காசு கொடுங்கன்னு கேட்டே வாங்கிப்பேன், பிறந்த நாள் வந்தா மோதிரம் அடகு வச்சி விழா கொண்டாடுவது எங்க வழக்கம், உங்களுக்கு பிறந்த நாள் வந்தா சொல்லி அனுப்புங்க.

3. நீங்க சிறிய வயதிலே நாடகங்களில் மிகவும் ஆர்வத்துடன் நடிச்சிருக்கீங்கலாமே நிஜம்மாவா? அந்த அனுபவத்தை எங்களோட பகிர்ந்து கொள்ளலாமே!

நல்ல கேள்வி ரம்யா, சின்ன வயசிலே நாடகம் எல்லாம் நடிச்சி இருக்கேன். நாடகங்களிலே நகைச்சுவை என்ற பெயரில் ஊரிலே அவங்களுக்கு பிடிக்காதவங்களை கேலி செய்வது வழக்கம்,பெரும்பாலும் அந்த மொக்கை நகைச்சுவை எல்லாம் நாடகத்தின் கதையோட சம்பந்தம் இருக்காது, நாடகத்தின் கதை தேய்வு அடையும் போது இப்படி மொக்கைகள் வரும், அந்த நடைமுறை முடிந்து என்னைய மாதிரி வாலிப புள்ளைகள் எல்லாம் தலை எடுத்து நடிக்க வரும் போது, மிகப் பெரிய நகைச்சுவை பஞ்சம் ஏற்பட்டு விட்டது, அதை எப்படி சரி செய்யன்னு மக்கள் யோசித்திகிட்டு இருக்கும் போதுதான், நான் நாடக உலகிலே காலடி எடுத்து வச்சேன், அந்த கால கட்டத்துக்கு தகுந்த மாதிரி காதல் நகைச்சுவை காட்சிகள் எழுதி கொடுத்தேன். அப்பவும் துண்டைப் பத்தி எழுதினேன், இன்னும் எழுதிகிட்டு இருக்கேன். தனியாக ஐந்து அல்லது ஆறு காட்சிகள் எழுதி, நடிக்க ஆள் இல்லாம நானே நடிச்சி இருக்கேன். ஆனா நகைச்சுவைக்கு துணைக்கு நடிக்க வரும் நடிகையோட எனக்கு ரெண்டு பாட்டு வரும்.இப்படியா ரெண்டு நாடகங்களுக்கு கதை எழுதி கொடுத்து, அடுத்து நானே ஒரு நாடகத்தை (1996 வருடம் என்று நினைக்கிறேன்) முழுவதும் எழுதினேன். அதான் எங்க ஊரிலே நடந்த கடைசி நாடகம். கதை எழுத வச்ச பேருதான் நசரேயன், அந்த கதை எழுதின அப்புறமா சினிமா இயக்குனர் ஆகுவேன் என்ற நம்பிக்கையிலே பல காலம் கனவு கண்டேன், அதான் கடைப் பேரு என் கனவில் தென்பட்டது.

4. உங்களுக்கு சூரியன் மீது கடும் கோபம் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்க தெரிவிக்கின்றன உண்மையா?

ஆமா ரம்யா, நல்லா சிகப்பா இருந்த என்னைய கருப்பாக்கி விட்டுதுன்னு கோபம்.ஒரு காலத்திலேயே சுண்டினா ரத்தம் வருகிற மாதிரி இருந்த நான் இப்ப அடிச்சா ௬ட ரத்தம் வருமான்னு தெரியலை.

5. வலைத்தளத்தை தேர்ந்தெடுத்தது எவ்வாறு? இதை உங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் யார்? இப்போது அவர் எங்கே இருக்கிறார்?

இந்த கேள்விக்கு பதில் பலமுறை சொல்லி இருந்தாலும் மறுபடியும் சொல்லுறேன். வலைத்தளம்னு ஒன்னு இருக்கிறது எனக்கு ரெம்ப நாளா தெரியாது, எங்களோட கல்லூரி குழுமத்திலே ஒரு தடவை நான் எழுதி முதல் பரிசு வாங்கிய கவுஜையை எழுதி போட்டேன், அதை பார்த்த என்னோட கல்லூரி நண்பன் சத்யா, மற்றும் ராம் இருவரும் பதிவர்கள் தான், அவங்க எல்லாம் எழுதியே களைச்சி போய்ட்டாங்கன்னு, என்னைய எங்க கல்லூரி குழுப் பதிவிலே எழுதச் சொன்னார்கள், அங்க ஒரு கதையும், கவுஜையும் எழுதிப் போட்டேன். எழுதிப் போட்டுட்டு நானே ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தடவை பார்ப்பேன் யாராவது கருத்து சொல்லுவாங்களா என்று, ஈ ௬ட எட்டிப் பார்க்கலை, அப்புறமா கூகிள் ஆண்டவர் மூலமா தமிழ்மணம் இணைப்பு கிடைத்தது,தமிழ்மணம் திரட்டியில் எழுதுபவர்களை எல்லாம் பார்த்து விட்டு, குழுப்பதிவை இணைக்க சம்மதம் கேட்டேன். கிடைக்கலை, உடனே நான் என்னோட சொந்த கடையை ஆரம்பித்து வியாபாரம் பண்ண ஆரம்பித்தேன், அதனாலே நான் இப்ப இங்க இருக்கேன்.

சத்யா இந்தியாவிலே இருக்கிறார்னு நினைக்கிறேன், ராம் குமார் "முகவை மைந்தன்" என்ற பெயரிலே சிங்கையிலே இருந்து எழுதுகிறார்.

6. உங்களை அறிமுகப் படித்தியவர்களை இப்போது சந்திக்க நேர்ந்தால் அவர்களின்பால் உங்களின் ரியாக்சன் எப்படி இருக்கும்?

தெரியலையே அடி விழுந்தாலும் விழலாம், விரைவிலே அவர்களை சந்தித்துவிட்டு நடந்ததை சொல்லுறேன்.

7. பிரபல பதிவராக இருப்பதால் தர்மசங்கடமான தருணங்கள் ஏதாவது???

நீங்க என்னைய பிரபலமுன்னு எதைவச்சி சொல்லுறீங்கன்னு தெரியலை, தமிழ்மண முகப்பிலே வருகிறதை வைத்து சொல்லுறிங்கன்னா, அதுக்கு காரணம் மொய் வச்சி, மொய் எடுக்கிறதுதான். இதுநாள் வரைக்கும் அப்படி தர்ம சங்கடம் ஏற்பட்டதில்லை, அப்படியே ஏற்பட்டாலும், அது என்னை ரெம்ப பாதிக்காது, எனக்கு ஞாபக மறதி அதிகம்.

8. உங்களை பிரபலமாக்கிய இடுகை எது என்று இப்போது நினைவு கூர்ந்து அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நல்ல கேள்வி ரம்யா, நாம் தமிழ் மணம் வந்த புதுசிலே சூடான இடுகை இருந்தது, அதில் வரும் இடுகைகள் ஒரு நாள் முழுவதும் இருக்கும், அதை அதிகம் பேர் பார்ப்பார்கள். நானும் எப்படியாவது அந்த கோட்டையிலே கால் வைக்கனுமுன்னு நினைச்சேன், வில்லு படத்துக்கு நானே விமர்சனம் எழுதிப் போட்டேன், அது சூடுக்கு போச்சி, அப்புறமா எந்த இடுகையும் சூடு பக்கமே போகலை, மறுபடியும் சூடுக்கு போணுமுன்னு பல நாளா யோசித்து "வெள்ளைகாரிக்கே வெட்கம்". அப்படின்னு கவர்சிகரமா ஒரு தலைப்பு வச்சேன், இடுகை போட்டு அரைமணி நேரத்திலே சூடுக்கு
போச்சி, அப்புறமா அதே பாணியிலே அமெரிக்கா ன்னு தலைப்பிலே வச்சி இடுகைகள் எழுதினேன், அதும் சூட்டுக்கு போச்சி. இப்ப அதையெல்லாம் நினைச்சி பார்த்தா,
இதெல்லாம் ஒரு பொழைப்பா நினைச்சிக்குவேன்.

9. உங்கள் முதல் காதலை உங்க தங்கமணிக்கு தெரியாமல் பகிர்ந்து கொள்ளலாமே? நான் கண்டிப்பா அவங்களுக்கு சொல்ல மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். ...

இந்இடுகையிலே சொல்லப் பட்டது கிட்டத்தட்ட எனது சொந்தக் கதைதான்.

10. அது சரி, உங்க கையிலே எப்போதும் ஒரு துண்டு வச்சிருக்கீங்களே? அது எதுக்கு? அதனால் கடந்து வந்த பாதைகளில் ஏதாவது பலன் கிடைத்துள்ளதா? விவரம் அறிய நண்பர்கள் அனைவரும் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள். விளக்கமா சொல்லுங்களேன் ...

துண்டினாலே ஒரு பிரயோசனம் இல்லை, இடுகைகள்ல துண்டு போட்டு காதல் தோல்விய ஆத்திகிறேன், எழுத்திலே போடுகிற துண்டு கானல் நீர் மாதிரி, நிஜ வாழ்க்கைக்கு பயன்படாது,துண்டைப் பத்தி படிக்கிறவங்க .. அவ்வளவு அப்பாவியா வா இருப்பாங்க?

11. வேலை செய்யும் இடத்தில் வெள்ளையம்மாக்களின் நட்பு பற்றி கொஞ்சமா சொல்லுங்களேன்...

எங்க குழுவிலே ஒரு வெள்ளையம்மா ௬ட இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்,நான் இதுவரை ரெண்டு வெள்ளையம்மா பாட்டி ௬டத்தான் வேலை செய்து இருக்கிறேன். இனிமேலும் அந்த வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கை இல்லை.

12. உங்களின் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாக இருந்த உங்களின் குணங்கள் என்னவென்று கூற முடியுமா?

தன்னம்பிக்கை தான்.....

13. வலையில் நீங்கள் பெற்ற நட்புகள் பற்றி?

இதுவரைக்கும் ஆரோக்கியமா இருக்கு,இந்த நிலையை இப்படியே தக்க வைக்கவேண்டும் என்று போராடுவேன்.

14. உங்களுக்கு வலையுலகத்தில், சில அருமையான பட்டப் பெயர்கள் (தல, தளபதி, சிங்கம்) கொடுத்திருக்கிறார்களே! இந்த பட்டப் பெயர்கள் உங்களின் புகழை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக வலையில் பேச்சு அடிபடுகிறதே அது உண்மையா?

அதெல்லாம் வஞ்சப் புகழ்ச்சி அணி அதையெல்லாம் நம்பவேண்டாம், கலவரமே நடந்தாலும் கலங்காம கும்மி அடிப்பதுதான் என் வேலை.

15. வருங்காலத்தில் சினிமா அல்லது அரசியலில் சேரும் உத்தேசம் ஏதாவது உள்ளதா?

நான் கல்லூரி முடித்தவிட்டு சென்னை வந்ததே சினிமாவிலே சேர்ந்து இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான், தமிழ் மக்கள் நல்ல நேரம், நான் வழி தவறி விட்டேன். இல்லைனா அவங்க பாடு ரெம்ப திண்டாட்டம் தான். வாய்ப்பு கிடைத்தா மறுபடியும் சினிமாவுக்குள் நுழைவேன். ஆனா வாய்ப்பு வருமா வராதா என்பதை காலம் தான் சொல்லும்.

16. திரை விமரிசனம் எழுதுவதிலாகட்டும், அரசியல் விமரிசனம் எல்லாவற்றிலும் புகுந்து விளையாடுகீரீகளே இந்த ஞானம் உங்களுக்கு எப்படி வந்தது? இதெற்கென்று ஏதாவது சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டீர்களா?

எழுதுவதற்கு பயிற்சி எடுத்து இருந்தால், நான் ஒழுங்கா எழுதுவேனே.. எனக்கு படிப்பறிவு அதிகமா இருந்தாலும், வாசிப்பு அனுபவம் ரெம்ப குறைவு, அதனாலே நான் எழுவது எல்லாம் ஒரு வரைமுறை இல்லாமல் இருக்கும், அதையும் சிலர் ரசிக்கிறார்கள்(?) என்ற நம்பிக்கையிலே தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கிறேன். எழுதுவதற்கு முன்னால் ஒரு வரி கதையை யோசித்து வைத்துவிட்டு, அதிலே மசாலா, காரம், குத்து பாட்டு கலந்து கடையிலே ஏத்துவேன்.

17. உங்கள் மீது பொறாமை கொள்பவர்களை அடையாளம் தெரிந்து கொண்டால் உங்களின் மனநிலை எப்படி இருக்கும்?

அப்படி யாரும் என்னைப் பார்த்து பொறாமை அடைந்ததாக தெரியவில்லை, அப்படி யாரவது இருந்தால் என்னிடம் தெரியப் படுத்தவும், உங்களுக்கு சிலை வைக்கணும்.. என்னையும் ஒரு மனுசனா மதிச்சி பொறமை படுகிற அன்பு உள்ளத்துக்கு மரியாதை செலுத்தனும்.

18. நம்பிக்கை துரோகிகளை அடையாளம் கண்டு கொண்டால், பார்த்தவுடன் அவர்களை என்ன செய்ய முயற்சி செய்வீர்கள்?

கண்டிப்பா கோபம் வரும் ... வாய்க்கு வந்த மாதிரி திட்டுவேன்.. கொஞ்ச நாள்ல மறந்து போவேன். ..

19. சரி, நீங்கள் விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக டைரெக்டர் ஷங்கர் உங்களை சந்தித்ததாகவும், அது சமயம் நீங்க கதாநாயகியாக பிரியாமணியை சிபாரிசு செய்தாகவும் ஒரு செய்தி வலையில் உலா வருகிறதே அதை பற்றி....

இந்த செய்தி எனக்கே புதுசா இருக்கு, தமிழ் மக்களின் தலை விதி அப்படி இருந்தால், நான் என்ன செய்ய முடியும்....

20. கடைசியாக ஒரு கேள்வி, வலையில் உங்கள் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்? புதிதாக வரும் வலைப் பதிவர்களுக்கு உங்களின் வழிகாட்டுதல் என்ன?

நான் சொன்னா உடனே கேட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ள ரெண்டு பதிவரை சொல்லுங்க, அவங்களுக்கு நிச்சயமா வழி காட்டுறேன்.

எனது கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்த நண்பர் நசரேயன் அவர்களுக்கு நன்றி!! நன்றி!! நன்றி!!

டிஸ்கி:நண்பர் நசரேயன் அவர்களின் பதில்களைப் படித்திருப்பீர்கள்,கும்ம நினைப்பவர்கள் நன்றாக கும்மவும்.






Sunday, September 5, 2010

மணமகள் தேவை!!!!!

நண்பர் தேடிய மணமகனுக்கு நான் தேடிய மணமகள்!!


நல்ல வேலையில் அதுவும் இன்று வரை கணினித் துறையில் சிறந்த முறையில் பணி புரிந்து கொண்டிருக்கும் ஒரு ஆனழகனுக்கு மணமகள் தேவை!!

மணமகள் படிப்புத் தகுதி மற்றும் படித்த பல்கலைகழகம்:

கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் எந்த படிப்பு படித்திருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும். மணமகள் கண்டிப்பாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது விதிக்கப் படும் பல விதிகளில் இதுவும் ஒன்று. எந்தத் துறையானாலும் ஏற்றுக் கொள்ளப்படும். அதுவும் உயர் பதவியில் இருப்பது கூடுதல் தகுதியாக கண்டிப்பாகக் கருதப்படும்.

உயர் பதிவியில் இருப்பதினால், அலுவலகத்தில் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் காட்டும் கண்டிப்பும், கெடுபிடியும் என்னிடம் கண்டிப்பாக காட்டக் கூடாது. மீறி காட்டினால் மனித வதை சட்டத்தின் கீழ் யாரிடம் வத்தி வைக்கவேண்டுமோ அதை கச்சிதமாக செய்து முடித்து விடுவேன்.

மணமகள் என்னை விட அதிகம் சம்பளம் வாங்கவேண்டும். மனைவியின் இந்த தகுதியினால் எனக்கு எந்தவித குற்ற உணர்வோ அல்லது மன உளைச்சலோ கண்டிப்பா வராது என்று உறுதி அளிக்கிறேன்.

பின் தூங்கி முன் எழவேண்டும் என்றெல்லாம் கெடுபிடி கிடையாது. எப்பொழுது வேண்டுமானாலும் உறங்கலாம், எப்பொழுது வேண்டுமானாலும் எழலாம். எப்பொழுது எழுந்தாலும் அவங்கதான், காபியிலே ஆரம்பித்து தேவையான எல்லா உணவுகளும் அருமையான சுவையுடன் தயாரித்து விட்டு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். இது கட்டளைன்னு சொன்னா அதுக்கு நான் பொறுப்பு ஆகமாட்டேன்.

வீட்டில் இருந்தபடியே வேலை செய்து கிழிச்சா போதும்ன்னு என்னோட மேனேஜர் சொல்லிட்டார். அதனால் அலுவலகத்திற்கு செல்லும் கெடுபிடி எனக்கு இல்லை. அதுக்காக வீட்டு வேலை எல்லாம் செய்வேன் என்று எதிர் பார்க்கக் கூடாது.

அவங்க அலுவலகத்தில் எல்லாம் கொண்டு ட்ராப் பண்ண முடியாது. அவங்களேதான் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். ஏனெனில் அதே நேரத்தில் என்னோட நண்பர் ஒருவரை தினமும் அலுவலகத்தில் கொண்டு சேர்க்கவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. அதற்காக அவரிடம் கடன் வாங்கி இருப்பதாக எல்லாம் தப்பு தப்பாக எண்ணக் கூடாது. மேலும் என்னோட இந்த நடவடிக்கையிலே குற்றம் கண்டுபிடித்தால் அதுக்கும் நான் பொறுப்பு ஆகமாட்டேன். ஏன், எதுக்கு, என்ன, எப்பொழுது இது போன்ற கேள்விகள் எனக்கு அறவே பிடிக்காது என்பதையும் தைரியமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். மீறி கேட்டாலும் விடை எப்போதும் என்னிடம் கண்டிப்பாக கிடைக்காது. இதுக்கு திமுரு என்றெல்லாம் பட்டம் சூட்டக் கூடாது

நான் என் கணவரைவிட அதிகம் சம்பாதிக்கிறேன் என்ற எண்ணம் எந்த சந்தர்பத்திலும் கண்டிப்பாக வரக்கூடாது. எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்கணும். அடிக்கடி ஹோட்டல், சினிமா, பீச், பார்க் அழைத்துப் போகுமாறு தொந்தரவு பண்ணக் கூடாது. கண்டிப்பாக தோழிகளுடன் கூட எங்கும் செல்லக் கூடாது. ஏனெனில் மனைவியாக வரவிருப்பவள் எப்போதும் என்னை மட்டுமே சார்ந்து இருக்கணும். இதெல்லாம் கண்டிப்பு என முத்திரைக் குத்தக் கூடாது. மீறி எனக்கு தவறான முத்திரை குத்தி தன் தோழிகளிடமோ அல்லது பெற்றோர்களிடமோ போட்டு கொடுத்தால் அதற்கு என் சார்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வருடத்தில் ஒரு முறையாவது ஹோட்டல், சினிமா, பீச், பார்க் இந்த இடங்களுக்கெல்லாம் கண்டிப்பாக அழைத்துச் செல்வேன், என்பதை மிகவும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அடிக்கடி வீட்டுக்கு விருந்திற்கு அழைத்து வருவேன். அவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் ருசியான சாப்பாடு பரிமாறி உபசரிக்கணும். முகத்தில் எப்போதும் மலர்ச்சியையே முன் நிறுத்தி அனைவரிடமும் அன்பாகப் பேசி உபசரித்து வழி அனுப்பவேண்டும். நான் எங்கு வேண்டுமானாலும் எனது தோழிகளுடன் செல்வேன். அது என்னோட சொந்த விருப்பத்தின் கீழ் வருகிறது. அதற்காக் போட்டி மனப்பான்மையுடன் மனைவியாக வரவங்க நடந்துக் கொள்ளக் கூடாது.

மேலே கூறி இருக்கும் எல்லாவற்றையும் மிக கவனமாகவும், சிரத்தையாகவும் படிக்கவும். கூறப்பட்டுள்ள என்னோட விருப்பங்களுக்கு ஒத்துப் போகத் துடிக்கும் மணமகள் உடனே என்னை தொடர்பு கொள்ளலாம். அவசரப்பட்டு ஒத்துக் கொண்டுவிட்டு, திருமணம் முடிந்த பிறகு எனது கொள்கைகள் கேவலமாகத் தெரிந்தாலும் வெளியே யாரிடமும் குறை கூறக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

நான் ஒரு தடவை சொன்னால் ஆயிரம் தடவை சொன்ன மாதிரி.

இப்படி எல்லாம் நிபந்தனைகளை அள்ளி வீசி மணமகள் தேடும் தனது ஆருயிர் நண்பருக்காக, தானும் களத்தில் இறங்கி மணமகள் தேடும் படலத்தில் ஈடுபட்டிருக்கும் எனது நண்பரின் முழுத் தகவல்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

இந்த அரிய சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன் படுத்திக்கொள்ளப் போகும் மணமகளுக்கு வாழ்த்துக்களை அட்வான்சாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நண்பரின் அடையாளம் கையிலே துண்டு இருக்கும். அதைப் பார்த்து யாரும் அரசியல்வாதி என்று ஒரு முடிவான முடிவிற்கு வந்து விடாதீர்கள். துண்டு நண்பரின் வாழ்க்கையில் பின்னி பிணைந்த ஒரு அரும்பெரும் பொருள் என்று கூறினால் அது மிகையாகா.

மேலே கூறி இருக்கும் சிறிய கருத்துக்களை மலர்ந்த முகத்துடன் ஏற்றுக் கொள்ளும் மணமகள் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.



தெளிவான முகவரி
=================

திரு.நசரேயன்

குண்டக்க மண்டக்க கும்மி அடிப்போர் சங்கம்
என் கனவில் தென்பட்டது (கடை பேரு)
கூகிள் ஆண்டவர் ரோடு
ப்ளாக்ஸ்பாட் குறுக்கு சந்து
தமிழ்மணம் போஸ்ட்

பொறுப்பு அறிவித்தல்: சும்மா படிச்சிட்டு மறந்திடுங்க, நண்பரை திட்டாதீங்க.


Wednesday, August 18, 2010

வைகைப் புயலின் அட்டகாசம் - PART - II

வைகைப் புயலின் பிரச்சனை இன்னமும் முடிந்த மாதிரி தெரியல!! ம்ம்ம்... என்னான்னு பார்க்கலாம் வாங்க....


"என்னாது காலை உடைப்பீங்களா, சரிக்கா ரொம்ப சரி உன்னைய நம்பி ஆத்தாளும், அப்பனும் அனுப்பி வச்சாங்க பாரு அவங்களை சொல்லணும்"

"அவங்க தான் போயி சேர்ந்துட்டாங்களேடா! அதை ஏன் இப்போ நினைனவு படுத்தறே?"

"என்னடி ரொம்ப பீலிங்கி காட்டறயா? இப்படியே அவன பேசவிட்டு அவனோட வாயை பாத்துகிட்டே இரு வெளங்கிடும்"

"நீங்க உள்ளே போயி கை கால் கழுவிகிட்டு வாங்க. கஞ்சி காச்சி வச்சிருக்கேன் ஒரு முழுங்கு குடிச்சிட்டு கடையாண்ட போயிட்டு வந்திடுங்க. சரக்கு வரலைன்னு கடையிலே இருந்து சேகர் மத்தியானமே போன் பண்ணினான். போயிட்டு வாங்க அதுக்குள்ளே சமைச்சிடறேன்

"என்னாது கஞ்சியா ஏண்டி சமைக்கலை?"

"நீங்க இல்லாதனாலே சமைக்கலே கஞ்சிதான் காச்சினேன். இனிமேதான் சமைக்கணும். வேலு அந்த மண்ணெண்னை அடுப்பை பத்தவை, பத்தவச்சா குப்பு குப்புன்னு சத்தம் கேக்குது பாரு"

"ஆமா இவனை போய் இந்த வேலையை செய்ய சொல்றே! அடுப்ப பத்தவக்கறேன்னு சொல்லிட்டு வீட்டையே பத்த வச்சிடப் போறான். யாரு கிட்டே என்ன வேலை வாங்கறதுன்னு உனக்கு வெவஸ்தையே இல்லாமப் போச்சு.."

"வேணாம்க்கா என்னைய நெம்ப மட்டமா நினைக்கவேணாம்னு சொல்லி வை"

"நீங்க ராத்திரிக்குதானே வரதா சொன்னிங்க? அதனாலே மத்தியானம் வெறும் கஞ்சியோட நிறுத்திட்டேன். நெத்திலி மீனும், கருவாடும் வாங்கி வச்சிருக்கேன்; கஞ்சி குடிக்க பிடிக்கலைன்னா..... இருங்க ஒரு அஞ்சு நிமிஷத்திலே சமைச்சிடுறேன், சாப்பிட்டப்பறம் கடைக்குப் போலாம்"

"எனக்கு வேணாம் வடிச்சி உன் தம்பி தலையிலே கொட்டு, ஒரு வேலை செய்ய துப்ப காணோம் நின்னுகிட்டு வேடிக்கை பாக்கறதைப் பாரு"

"நான் உங்க கிட்டேதான் பேசிகிட்டு நிக்கேன், நீங்க ஏன் தம்பியை வம்புக்கு இழுக்குறீங்க?

"ஆமாண்டி அவனை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது அதான்."

"போங்க பெத்த புள்ளையாட்டமா நம்மளையே சுத்தி சுத்தி வாரான் அவனை வையாதீங்க? பாவம் பெத்தவங்களும் போயி சேர்ந்துட்டாங்க, அவனக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ண வேண்டாமா? அதைதான் நான் எப்போதும் யோசிச்சிகிட்டே இருக்கேன்"

"கல்யாணம்.... அதுவும் இவனுக்கு அதுசரி"

"வேணாம் மாமா! நீங்க என்ன வேலை சொன்னீங்களோ அதை நாளைக்கு கச்சிதமா முடிச்சிடுவேன்; சந்தைக்குப் போயி என்ன விக்கணும்? அதை வெவரமா சொன்னா என்னாவாம்?? எதை வித்துட்டு எதை வாங்கணுமோ அதையும் வெவரமா சொன்னா வாங்கியாந்திடுவேன். என்னைய இதுக்கு மேலே எதுவும் சீண்ட வேணாம், அக்கா நீயும் மாமனுக்கு கொஞ்சம் சொல்லி வை"

"ஆமாங்க என்ன பண்ணனும்னு நீங்க சொன்னது எனக்கே புரியல.. இன்னொரு தடவை சொல்லுங்க "

"அது சரி நீ அவனோட அக்காதானே! உனக்கு மட்டும் சட்டுன்னு வெளங்கிடுமா? எல்லாம் என் தலைவிதி; அதாண்டி நம்ம சின்னுவை (கெடாவை) வித்துட்டு ஆட்டுகுட்டி நாலு வாங்கி வரச்சொன்னேன். அதைதான் சுருக்கமா 'வளர்ந்ததை வித்துட்டு வளர்றதை வாங்கிவான்னு சொன்னேனேன்.' ஒண்ணு சொன்னா பத்து புரிஞ்சிக்கவேண்டாம் அவனவன் கோடு போட்டா ரோடு போடறான். நீங்க மட்டும் இன்னும் வெளங்காமையே இருங்க, போடா போ என் முன்னாடி இப்படி நிக்காதே! உங்க கூட பேசியே எவ்வளவு நேரம் ஆச்சு இப்படியே பஞ்சாயத்து வச்சிக்கிட்டு இருந்தா ஒருநாள் நானும் வெளங்காம போயிடுவேன். சரி நீ சமைச்சு வை நான் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்"

"சரிங்க சீக்கிரமா வந்துடுங்க"

"ம்ம்ம்... உன் தம்பிக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லி வை"

"ம்ம்ம்ம்... போயிட்டு சீக்கிரமா வந்துடுங்க"

"அப்பாடா மாமா கிளம்பிட்டருக்கா... கிளம்பிட்டாரு.. என்னக்கா எப்ப பார்த்தாலும் இப்படி கடிஞ்சிகிட்டே இருக்காரே! உனக்கு கோவமே வராதாக்கா "

"கடைக்குத்தான் போயி இருக்காரு இரு இப்ப வந்திடுவாரு ஜப்பானுக்கு போயிட்ட மாதிரி சந்தோஷப் படறே!"

"பின்ன என்னக்கா.. எப்ப வாயை தொறந்தாலும் விளங்க மாட்டே, விளங்காமே போயிடுவே, நானும் விளங்க மாட்டேன் இதை தவிர உன்னோட புருஷன் வேறே ஏதாவது பேசி இருக்காரா? என்ன பிரிச்சனைக்கா அவருக்கு ?"

"உனக்கு ரொம்ப திமிருடா, உன்னை சும்மா உக்கார வச்சி சோறு போடறாரே! அதுக்கு நீ இதுவும் பேசுவே இன்னமும் பேசுவே, நாளைக்கு அவரு சொன்ன வேலையை கச்சிதமா முடிக்கிற வழியை பாரு"

"என்ன நீ கூட ரொம்ப கோச்சுக்கரே.. சரிக்கா விடு விடு"

"டேய் வேலு சமைச்சிண்டேடா, கஞ்சியும் குடிக்கலே, சாப்பிட வாடா"

"மாமா வரட்டும் எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம்க்கா"

"அம்மா அப்பா வந்திட்டாரு... வந்திட்டாரு... வந்து பாரு..." இது அந்த தம்பதியரின் சீமந்த புத்திரன் மாது"

"ஏண்டா இப்படி கத்தறே? ஏங்க கை கால் கழுவிகிட்டு வாங்க சாப்பிடலாம்; வேலு கூட நீங்க வரட்டும்னு சாப்பிட காத்திருக்கான்"

"பரவா இல்லையே உன் தம்பிக்கு என் மேலே இவ்வளவு பாசமா? இல்லே நடிக்கிறானா?" பய நம்ம மேலே பாசமாத்தான் இருக்கான் போல, நாமதான் ரொம்ப வேலுவை நோகடிச்சுட்டோமோ இருக்கட்டும்.. இருக்கட்டும்.. இப்படியே இருந்தாதான் அவனை திருத்த முடியும்.

"ஏங்க எப்ப பார்த்தாலும் அவனை ஏதாவது சொல்லிகிட்டே இருக்கீங்க?

"சரி சரி சோத்தைப் போடு. ஏண்டா நிக்கறே இப்படி உக்காரு"

"இருக்கட்டும் மாமா நீங்க மொதல்ல சாப்பிடுங்க நானும் அக்காவும் அப்பறமா சாப்பிட்டுக்குறோம்."

"அட இங்கே பாருய்யா! அக்கா மேலே கரிசனத்தை.. அடச்சே உக்காந்து சாப்பிடு.."

"சரிங்க மாமா...." அப்பாடா... அப்பாடா....!! சாப்பிட்டு முடிச்சாச்சு. நல்ல சாப்பாடு கருவாட்டு குழம்பும், நெத்திலி வருவலும் எம்புட்டு நல்லா இருக்கு, அக்காவுக்கு அப்படியே நம்ம அம்மாவோட கை பக்குவம். பாவம் அக்கா இந்த சிடுமூஞ்சியை கட்டிக்கிட்டு அல்லாடுது....

"என்னடா யோசிக்கற மாதிரி நடிக்கறே? மனசுக்குள்ளே என்னைய திட்டிகிட்டு நிக்கிறியா?

"நான் ஏன் உங்களை திட்டபோறேன், நாளைக்கு போப்போற என்னோட வேலையை பத்தி யோசிக்கிறேன்"

"ஆமா நீ யோசிச்சிட்டாலும்.. அதை ஏன் இங்கே நின்னுகிட்டு செய்யறே"

"சரி நன் யோசிக்கலை டிவி பார்கலாமுல்லே"

"ம்ம்ம்ம்.. என்னமோ செய்யி, செய்யறது உனக்கே நல்லா இருந்தா சரி"

"ஏன் மாமா நீங்க மட்டும் டீவி பாக்கறீங்க நானும் கொஞ்சம் நேரம் பக்ககூடாதா.."

"மாமா... மாமா... இங்கே நின்னுகிட்டு என்ன பண்றீங்க? என்னடா அங்கே நின்னா உங்கப்பா கேள்வி கேக்கறாரு, இங்கே நின்னா நீ கேள்வி கேக்கறே? ஏண்டா உங்க குடும்பமே எல்லாரும் ஒரு மார்க்கமாதான் பேசுவீங்களா?

"என்னாது குடும்பமா? யாரை சொல்றீங்க? எங்க அம்மா, அப்பா, தாத்தா, சித்தப்பா, பெரியப்பா, சின்ன அத்தை, பெரியத்தை, எங்க பாட்டி, சின்ன தாத்தா எல்லாரையும் சொல்றீங்களா? இருங்க இதை எங்கப்பாகிட்டே சொல்றேன்"

டேய் இருடா.. இருடா... ஏண்டா! இப்படி வில்லங்கமாவே யோசிக்கறே? கொஞ்சம் சின்னபுள்ளையா யோசிக்க மாட்டியா?

"நான் சின்ன புள்ளையா? ஒன்பதாவது படிக்கிறேன் தெரியுமுல்லே? அது சரி நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க மாமா?"

"நானா? நிறைய படிச்சிருக்கேன்."

"அதான் எது வரைன்னு கேக்குறேனுல்லே!"

"அதா அது வந்து.. வந்து இல்லே.. அதை சொன்னா உனக்கு புரியாது"

"சொல்லுங்க எனக்கு நல்லாவே புரியும்"

இவன் போற ரூட்டே சரி இல்லே, எப்படியாவது பேச்சை மாத்தியாகணும், "டேய் டீவிலே ஒரு பொண்ணு பேசிகிட்டு நிக்குதே என்ன சொல்லுது?"

"ஐயோ மாமா இது கூட விளங்கலையா? சர்தான்... அந்தக்கா ஒன்னும் பேசிகிட்டு நிக்கலை? வானிலை அறிக்கை சொல்லிக்கிட்டு இருக்காங்க"

"என்னவாம்? மழை வருமா வராதா?

"வரும்... ஆனா வராது..."

"டேய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்ன என்கிட்டவேவா?"

"சரி சரி கோச்சுக்காதீங்க வாங்க நான் கொல்லப்பக்கம் போனும்"

"எதுக்குடா நான் வரமாட்டேன் போ, இந்த நேரத்துலே அங்கே வர பயந்து வருது "

"ஏன்? நான் சின்ன பையன் எனக்குதான் பயம் உங்களுக்குமா?"

"கொஞ்ச நேரம் முன்னாடிதானேடா பெரிய பையன்னு சொன்னே? இப்போ சின்ன பையனாயிட்டியா?"

"அதெல்லாம் எனக்கு தெரியாது வாங்கன்னா வாங்க. இல்லேன்னா அப்பா கிட்டே சொல்லிடுவேன். அப்பா... அப்பா..."

"டேய் வாயை மூடுடா, வந்து தொலைக்கிறேன்"

"மாமா உங்க கையி ஏன் இப்படி நடுங்குது"

"நீ ஏண்டா என் கையை புடிக்கறே? மொதல்லே கையை விடு, போ போயி வேலையை முடிச்சிட்டு வந்து தொலை"

"டப் டப் டப டப டப்"

"ஐயோ மாமா யாரோ இருட்டுலே இருக்காங்க.. ஓடுங்க.. ஓடுங்க.."

"ஐயோ யாருடா அது? எங்கே நிக்கறாங்க? ஓடியா.. ஓடியா.. ஆத்தாடி மூச்சு வாங்குதே"

"வேகமா ஓடுங்க மாமா அவங்க இப்போ சத்தமில்லாம நம்ப பின்னாடி வராங்க போல இருக்கு"

"ஓட முடியலடா! ஆமா எங்கேடா நிக்கறாங்க? புளியமரத்துகிட்டேவா இல்லே வேப்பமரத்துகிட்டேவா ? அது சரி........ ஒரு ஆளா இல்லே இரண்டு மூணு பேரா? எதுக்கு அங்கே நிக்கறாங்க?

"மாமா எனக்கு என்ன தெரியும்? யாரோ கை தட்டினாங்க உங்களுக்கு கேக்கலையா? அதான் நான் உங்களை ஓடச் சொன்னேன்"

"என்னா கை தட்டினாங்களா லூசுப் பயலே! லூசுப் பயலே! கை தட்டினது வேறே யாரும் இல்லை நான்தான்டா"

"என்ன நீங்க கை தட்டினீங்களா? நீங்கதான் லூசு மாமா! ஏன் மாமா கை தட்டினீங்க? "

"அது இல்லேடா, ராத்திரியிலே இந்த மாதிரி இடத்துலே நடக்கும் போது இப்படிதான் கை தட்டிகிட்டே போகணும்"

"எதுக்கு கை தட்டனும்?

"ராத்திரியிலே அது.. அது.. ப்ரீயா சுத்தும்! நம்மளை பாத்தவுடனே பாசக்கார பயலுகன்னு ஒரே போடா போட்டுடும். அதுக்காகத்தான் இப்படி கையை தட்டிகிட்டே போனா வழியிலே நிக்காம ஓடிடும், புரிஞ்சுதா?"

"டேய் எங்கேடா இருக்கே நான் தனியாதான் பேசிகிட்டு இருக்கேனா?"

"மாமா நான் இங்கே இருக்கேன். பயப்படாதீங்க, இருங்க வந்திடறேன்"

"சரிடா! பயபடாம சீக்கிரமா வா"

"கை தட்டுங்க மாமா எனக்கு பயந்து வருதே!" இந்த மாமா ரொம்ப பயப்படறாரே லேசா பயமுறுத்தி பார்ப்போம். நினைத்து முடிப்பதற்குள் வித்தியாசமான சத்த கேட்க ஆரம்பிக்குது. அட இது என்ன சத்தம்? இதுவும் மாமாவோட வேலையா இருக்குமோ? அந்த சத்தம் வர்ற திக்கு நோக்கி கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் மாது.

"சர சர சர சர சர சர...."

"என்னடா கை தட்ட சொன்னா சருகுமேலே நடக்கற, ஓரமா வாடா, எனக்கு பயந்து வருது"

"மாமா நான் எங்கே சருகு மேலே நடக்கறேன், நான் கிணத்துப் பக்காமால்லே நிக்கறேன்"

"ஐயோ அப்படின்னா என்னா சத்தம் இது? எனக்கு புரிஞ்சி போச்சு"

"என்னா மாமா புரிஞ்சி போச்சு?"

"என்னாடா கேள்வி எனக்கு வயத்தை கலக்குது. வரவேண்டியது வந்துடுச்சு போல! ஓடியா... ஓடியா..... ஓடியா... ஓடியாடா ஓடலாம்... "


டிஸ்கி:நண்பர்கள் வளருமா என்று பயந்ததால், அவர்களின் பயத்தை போக்க இந்த தொடரை முடிக்கிறேன். எழுதற ஃப்ளோ கட்டுப் படுத்த முடியாமல் பீரிட்டு வந்தாலும்:)நண்பர்களின் நன்மையைக் கருதி, என்னோட ஆணிகளுக்கும் மதிப்பு கொடுத்து முடிக்கிறேன் :)


சுபம்
ரம்யா...






Tuesday, August 10, 2010

வைகைப் புயலின் அட்டகாசம்!!


அண்ணன் வடிவேலுவை வம்பிற்கு இழுத்து ரொம்ப நாள் ஆச்சா அதான்....!!



தம்பியும் அக்காவும் பாக்குற ஸ்டைலை பார்த்தீங்களா? வாங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன பிரச்சனைன்னு பார்க்கலாம்!!

"அப்பாடா என்ன வெயிலு என்ன வெயிலு தாங்க முடியலைடா சாமி"

"என்னாடா திண்ணையிலே உக்காந்துகிட்டு பொலம்பறே"

"என்னக்கா என்னைய பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?"

"என்னடா நான் கேள்வி கேட்டா நீ என்னைய கேள்வி கேக்கறே? வர வர உனக்கு பதில் சொல்ற பழக்கமே இல்லாம போச்சு!"

"ஆமா நான் தெரியாமத்தான் கேக்கறேன் வெயில்லே அலஞ்சி, திரிஞ்சி இப்படி கருத்து போயி வந்திருக்கேனே! தம்பியை உள்ளே கூட்டிகிட்டு போயி கொஞ்சம் மோரோ இல்லே இளநீரோ கொடுக்கப்பிடாது, திண்ணையிலே குத்த வச்சு கேள்வியா கேக்கறே?"

"ஏண்டா கறுத்து போயிட்டியா? எங்கே என்னைய பார்த்து சொல்லு"

"சரி சரி விடு இதை போய் பெரிசு படித்திகிட்டு.. போக்கா போ உள்ளே ஏதாவது வேலை இருந்தா பாரு"

"நாங்க எல்லாம் வேலை பார்த்திகிட்டுதான் இருக்கோம் அதை நீ சொல்ல வேண்டாம்..."

"சரி சரி எங்களுக்கும் வேலை வந்திடுச்சில்லே!"

"என்னாடா அதிசயமா இருக்கு உனக்கு வேலை வந்திடுச்சா? எங்கேயிருந்து வந்திச்சிடா? ரயில் ஏறி வந்துச்சா? இல்லே லாரி ஏறி வந்துச்சா? மூஞ்சியையும் மொகரகட்டையும் பாரு"

"இங்க பாரு நீயே இவ்வளவு கேவலமா உன் தம்பியை பேசலாமா? உக்காந்து யோசிக்கா யோசி"

"ஆமாண்டா எனக்கு வேறே வேலை இல்லை பாரு உன்னைய பத்தி யோசிக்கத்தான் பொறந்திருக்கிறேனாக்கும், சோம்பேறி! போ போய் கஞ்சி வச்சிருக்கேன் ஊத்தி குடி"

"என்னாது கஞ்சியா? சோறு இல்லையா? கஞ்சி எவனுக்கு வேணும்? பசி வயத்தை கிள்ளுதே.."

"டேய் ராத்திரிக்குத்தான் சோறாக்குவேன், இப்போ கஞ்சிதான்"

"என்னக்கா இப்படி செஞ்சிட்டே, கூட்டாளி வாசு சாப்பிட்டு போன்னு சொன்னான்.. நான் தான் எங்க அக்கா சமைச்சி வச்சிக்கிட்டு காத்திருக்கும்னு சொல்லிட்டு வந்தேன்! நீ என்னாடான்னா கஞ்சியை தூக்கி என் தலையிலே ஊத்தி சீக்காளி ஆக்கிடுவே போல இருக்கே?"

"உனக்காக எதுக்குடா நான் காத்திருக்கணும்? உங்க மாமா ஊரிலே இல்லே தெரியுமில்லே! இப்போ வார நேரம்தான்! மணி என்ன ஆகுது? இந்நேரத்துக்கு போய் சோத்துக்கு சண்டை போடறே? போ அந்த கஞ்சியை குடிச்சிட்டு, மாட்டு தொழுவத்தை கொஞ்சம் கழுவி விடு, எனக்கு இடுப்பு வலி தாங்கலை, ஒருத்தியாவே எம்புட்டு வேலைதான் செய்வேன்! அக்காவுக்கு ஏதாவது ஒத்தாசையா இருக்கணும்னு உனக்கு தோணுதா? போடா போ மொறைக்காதே"

"என்னாது ஒத்தாசையாவா? அதுவும் மாட்டுத் தொழுவத்தை நான் கழுவனும் அது சரி? மொத்தத்துலே நான் வீட்டு வேலை செய்யணும்னே முடிவு பண்ணிட்டியா? மாமா கிட்டே சொல்லி ஏதாவது வேலை போட்டு கொடுக்கச் சொல்லாம இந்த மாதிரி பேச்சை பேச எங்கே கத்துகிட்டே? ஏதோ அக்காவா இருக்கியேன்னு என்னோட கோவத்தை காட்டலை! எனக்குன்னு ஒரு நாதியும் இல்லே! உங்க ஊட்டோட இருக்கேன்னு உங்க எல்லாருக்கும் என்னைய பார்த்தா கேவலமாத்தான் இருக்கு!"

"சரிடா ஏதோ தெரியாம சொல்லிட்டேன், அதுக்கு போயி இவ்வளவு பீல் பண்றே! சரி போ போய் கஞ்சியை குடி மாமா வந்தா உனக்கு வேலைக்கு சொல்றேன்"

"அதெல்லாம் வேணாம்... வேலை நானே தேடிகிட்டேன், நாளைக்கு காலையிலே அஞ்சு மணிக்கி எழுப்பி விட்டா அது போதும், இனிமே சம்பாதிச்சுதான் இந்த வீட்டுலே கையை நனைப்பேன். இன்னைக்கு மட்டும் கொஞ்சமா சாப்பிட்டுக்கிறேன்"

"சரிடா இப்படியே ஒரு ஆயிரம் தடவையாவது சொல்லி இருப்பே! வேலையையும் காணோம் ஒண்ணையும் காணோம். வெட்டிப் பேச்சு பொழைப்புக்கு ஆகாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க"

"எப்பவும் சொல்ற மாதிரி இந்த தடவ சொல்லலை நீ வேண்ணா பாரு! திடீர்ன்னு ஒரு நாள் நான் நெம்ப பெரிய ஆளா வளர்ந்துடுவேன்"

"இப்ப மட்டும் உன்னோட வளர்த்திக்கு என்ன கொறைச்சல்? உன் தலை எங்க வீட்டு நிலைப்படியை முட்டுது. "
"ஏங்க! வாங்க! நேரம் ஆகும்னு சொன்னீங்க, பரவா இல்லையே சீக்கிரம் வந்துட்டீங்க"

"போன வேலை வெள்ளனே முடிஞ்சிடுச்சும்மா அதான் வந்துட்டேன். நான் என்ன சில பேரு மாதிரி வெட்டியாவ ஊரை சுத்த முடியும்? எனக்குன்னு குடும்பம், புள்ள குட்டிங்க இருக்கே"

"இவரு சைட்லே நம்மள தாக்குறாரு?" வேலு இங்கே நிக்காதேடா ஓடிப் போய்டு இல்லேன்னா அந்த கஞ்சிக்கும் ஆபத்து வந்திடும். மனசாட்சி கதற அந்த இடத்தை விட்டு நைசா வேலு நழுவ முயல..

"டேய் எங்கேடா நழுவரே நில்லு இன்னைக்கு பூரா எங்கே சுத்துனே? காட்டுக்கு போனியா? பம்ப்செட் ரிப்பேர்ன்னு சொன்னானே குப்பன், என்ன பண்ணான்னு போய் பார்த்தியா? ஏம்மா நான் காலையிலே உன் கிட்டே சொல்லிட்டு போனேனே! வேலுவை காட்டுக்கு அனுப்புன்னு, வேலுகிட்டே நீ சொல்லலையா? இவன் ஏன் ஒரு மார்க்கமாவே முழிச்சிகிட்டு நிக்கறான்!"

"இல்லைங்க நான்தான் வேலுகிட்டே நீங்க சொன்னதை சொல்ல மறந்துட்டேன், சரி விடுங்க அதை குப்பனே சரி பண்ணிடுவான்"

"ஏங்க நம்ம வேலு நாளையிலே இருந்து வேலைக்கு போகப் போறானாம்"

"அதென்ன நாளையிலே இருந்து? இவ்வளவு நாள் இந்த அறிவு எங்கே போச்சாம்? பாத்துகிட்டே இரு இவனை பார்த்து நம்ம பய கெட்டு குட்டிச் சுவராகபோறான், நீ இவனக்கு ரொம்ப இடம் கொடுத்திட்டே"

"ஏங்க அவனை திட்டனும்னா நேரா திட்டுங்க ஏன் என்னையும் நம்ம புள்ளையையும் சேர்த்து திட்றீங்க?"

"ஆமாண்டி உன் தம்பிதானே! சொன்னவுடனே ரோஷம் பொத்துகிட்டு வந்திடுச்சோ? மொகறையை பாரு அப்படியே ஆடு திருடின கள்ளனாட்டமா முழிக்கிறான்"

"ஏன் மாமா எப்போ பார்த்தாலும் திட்டிகிட்டே இருக்கீங்க? நீங்க வேணா பாருங்க நான் ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் பெரிய ஆளா ஆகப்போறேன் என்ன பண்றதுன்னு தெரியாம திக்கி திணறி திண்டாடப் போறீங்க"

"டேய் இந்த லூசுத்தனமா பேசறதை மொதல்லே நிறுத்து? ஏண்டி உங்கள் குடும்பமே இப்படிதானோ?"

"ஏங்க தம்பியை திட்டனும்னா நல்லா திட்டுங்க! அது இல்லாம ஏன் எங்க குடும்பத்தையே இழுக்குறீங்க? பாருடா உன்னாலே நம்ம குடும்பமே கேவலப்பட்டு நிக்குது? இதெல்லாம் ஒரு பொழப்பான்னு நல்ல யோசிடா!"

"சரி சரி விடு உணர்ச்சி வசப்படாதே இப்ப உங்க குடும்பத்தை பத்தி நான் இல்லாததையும் பொல்லாததையுமா சொல்லிட்டேன்"

"வேணாங்க இதோட இந்த பேச்சை விட்டுடுங்க, என்ன வேலை செஞ்சு முடிக்கனுமோ அதை தம்பிகிட்டே நீங்களே நேரா சொல்லிடுங்க"

"ஏய்! அவங்கிட்டே சொல்ல எனக்கென்ன பயமா? ஒரு வேலை சொல்றேன் அதை நாளைக்கு கச்சிதாமா முடிச்சுகிட்டுவா பார்க்கலாம்"

"அதெல்லாம் முடியாது நாளைக்கு நான் வேலையிலே சேரப்போறேன்"

"அடங்கொன்னியா வீட்டுக்கு உதவியா ஒரு வேலை செய்ய சொன்னா வீம்பா பேசிகிட்டு நிக்கறே? என்னடி இதெல்லாம்? நீயே என்ன வேலைன்னு எடுத்து சொல்லு உன்னோட அருமை தம்பியாண்டான்கிட்டே!"

"ஏங்க நீங்களே அவன்கிட்டே என்ன பண்ணனும்னு சொல்லிடுங்க, அப்பறம் நான் சரியா சொல்லலைன்னு என்னை திட்டுவீங்க"

"சரிடா நாளைக்கு கொஞ்சம் கடைவீதிக்கு போய் உங்கக்காவுக்கு ஏதோ சாமான் வேணுமாம் அதெ வாங்கிகிட்டு, அப்படியே சந்தைக்கு போய் வளர்ந்ததை வித்துட்டு வளர்றதை வாங்கிகிட்டு வா! பணமெல்லாம் சுத்தமா கொண்டு வந்து கொடுத்திடனும் புரிஞ்சுதா?

"என்ன என்ன சொல்றீங்க? ஒண்ணுமே புரியலையே! வித்துட்டு அந்த வார்த்தை மட்டும் புரியுது வேறே எதுவும் புரியல"

"ஆமாண்டா உனக்கு ஒன்னும் புரியாது சாப்பிட மட்டும் வெவரமா புரியும், இந்த கருமத்துக்குதாண்டி உன்னையே விளக்கச் சொன்னேன். அவனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. சரியான கல்லுளி மங்கண்டி உன் தம்பி. புரியாத மாதிரியே உன்னாலே மட்டும் எப்படிடா நடிக்க முடியுது?"

"ஏங்க தம்பிய திட்டிகிட்டே இருக்கீங்க? எனக்கே வெவரம் புரியலையே.. கொஞ்சம் புரியுமபடியா சொன்னாதான் என்னவாம்? தம்பி புரியலன்னா நிதானமா கேட்டுக்கடா"

"வேணாம்க்கா நான் வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டேன் என்னை விட்டுடு அம்புட்டுதான் இப்போதைக்கு என்னால சொல்ல முடியும்"

"நான் சொன்ன வேலையை செய்யலைன்னா இந்த வீட்டுக்குள்ளே இருக்கக் கூடாது மீறி இருந்தா காலை உடைச்சிடுவேன்"

"என்னாது காலை உடைப்பீங்களா, சரிக்கா ரொம்ப சரி உன்னைய நம்பி ஆத்தாளும், அப்பனும் அனுப்பி வச்சாங்க பாரு அவங்களை சொல்லணும்.



வளரும் ரம்யா.....

Saturday, July 31, 2010

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!

எனதருமை வலையுலக நட்புக்களுக்கு உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!

நட்பு என்ற ஏணியைக் கொண்டு இமயத்தையும் எட்டிடுவேனே!!



நட்பு என்ற பாலத்தைக் கொண்டு ஏழு கடலையும் கடந்திடுவேனே!!

துன்பத்தில் துவண்டு போகும் தருணங்களில், கைகோர்த்து தோள் சாயும்போது புது அவதானிப்பை உணர்கின்றேனே !!

காலங்கள் கடந்து போகும், உறவுகள் மறந்து போகும், மலர்கள் உதிர்ந்து போகும், காட்சிகள் மறைந்து போகும் ஆனால் இறுதிவரை நம்முடன் வருவது நட்பு ஒன்றே!

சிந்திக்க வைத்து, சிரிக்க வைத்து, இன்பத்திலும் துன்பத்திலும் உடன்வந்து உருகவைப்பதும் நட்பு ஒன்றே!!

அனைத்து நட்புள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!

என்றும் உங்கள் ரம்யா!!


Wednesday, June 30, 2010

Wedding Query........ ........ (SQL Style)


HUSBANDS QUERY

CREATE PROCEDURE MyMarriage (
BrideGroom Male (25) ,
Bride Female(20) )AS
BEGIN

SELECT Bride FROM india_ Brides
WHERE FatherInLaw = 'Millionaire'
AND Count(Car) > 20 AND HouseStatus ='ThreeStoreyed'
AND BrideEduStatus IN (B.TECH ,BE ,Degree ,MCA ,MiBA) AND Having Brothers= Null AND
Sisters =Yes

SELECT Gold ,Cash,Car,BankBalance
FROM FatherInLaw
UPDATE MyBankAccout
SETMyBal = MyBal + FatherInLawBal

UPDATEMyLocker
SET MyLockerContents = MyLockerContents + FatherInLawGold

INSERT INTO MyCarShed VALUES('BMW')
END

GO


Wife Writes The Below Query:

DROP HUSBAND;
Commit;


ச்சும்மா டைம்பாஸு...

டிஸ்கி: என் தோழி அனுப்பி நான் ரசித்தது, இப்போ உங்களுக்காக...:)


Wednesday, June 23, 2010

கோனே ஃபால்ஸ்!!

இந்த படம் நாங்க எடுக்கலை அங்கே இருந்து வாங்கி வந்தேன். ஏன்னா நாங்க சென்ற போது கொஞ்சமாகத்தான் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

திருக்காரிக்கரை (காரியாற்றின் கரையிலுள்ள ஊர். எனவே 'காரிக்கரை' . என்றாயிற்று) தற்போது மக்கள் "ராமகிரி" என்று அழைக்கின்றனர்.

அழகிய பசுமை நிறைந்த ஊராகத் திகழ்கிறது.

பழமையான பெரிய சிவாலயம். இத்தலம் கால பைரவ தலம் என்று போற்றப்படுகிறது.

இங்குள்ள நந்தியின் வாயிலிருந்து இடையறாது நீர் கொட்டிக் கொண்டேயுள்ளது. இந்நீர் (தீர்த்தக்) குளத்தில் நிரம்பி 'காரியாறு' என்றும் பெயருடன் ஓடுகிறது. இங்கிருந்து கோனே ஃபால்ஸ் பயணமானோம்.

செல்லும் வழி எல்லாம் நண்பர்கள் பட்டாளம். அவர்களை பார்த்தவுடன் மனதிற்குள் ஒரே குஷியாகிப் போனது. பாருங்க குழந்தையை எவ்வளவு அழகா வச்சிக்கிட்டு இருக்காங்க.

இவர்கள் தண்ணீர் குடிக்கும் அழகை இன்றெல்லாம் ரசிக்கலாம். இந்த தண்ணீர் கோனே ஃபால்ஸ்சில் இருந்து வருகின்றது.


அம்மா தண்ணீர் அருந்தும் போது குழந்தையும் சேர்ந்து தண்ணீர் குடித்ததை காண மிகவும் அழகாக இருந்தது..

போட்டோ எடுக்கறதை பார்த்து பயந்துட்டாங்க போல. இல்லே அந்த குட்டியை தூக்கிகிட்டு வந்திடுவோம்னு மொறைக்கிறாங்க.


நந்தி வாயில் இருந்து வரும் தண்ணீர் இப்படி குளமாகிறது. அதில் எல்லாரும் குளிக்கறாங்க!!



NOTE: கோனே ஃபால்ஸ் ஆந்திராவைச் சேர்ந்த அருமையான சுற்றுலா தளம். சென்னையில் இருந்து சுமார் 60KM தொலைவில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த புத்தூரில் இருந்து 10KM தொலைவில் அமைந்துள்ளது. நுழை வாயிலில் அழகிய வளவு அமைத்திருக்கிறார்கள். அதில் "கைலாசானாதா கோனே ஃபால்ஸ்" என்று எழுதி இருக்கும்.





Monday, June 21, 2010

பெருமாளும், பருப்பு போளியும்!!!

இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மயிலு விஜி உங்களுக்கு நன்றி !!






ஏதோ பருப்பு, போளி தராங்கன்னு ஓடி வந்தா தாரிணியை தாக்கி, ரம்யாவை தாக்கி, சின்ன அம்மிணியை தாக்கி ம்ம்ம்.. இந்த விஜிக்கு ஓவர் குறும்பு.

இந்த தொடர் பதிவுக்கு அழைத்த விஜி உங்களுக்கு தைரியம் அதிகம்தான், எப்படியும் நான் ஒரு அதிர்ச்சி (தாமதமா எழுதுவேன்) தருவேன் என்றும் தெரிந்தும் இப்படியா!

யாரையாவது கலாய்க்க சொன்னா ரொம்ப சந்தோஷமா கலாயிக்கலாம்!! ஆனா சூப்பர் தொடருக்கு அழைத்து என்னை சாச்சிட்டியேம்மா:)

எல்லாரும் என்ன பண்ணீங்க எழுதிட்டீங்களா? கடை தொரக்கலின்னா ஆளையே மறந்துடராங்கப்பா!!

என்னை தொடருக்கு அழைச்சிட்டு என்னிடம் சொல்லாதவங்களோட நான் கா விட்டுக்குறேன், நான்தான் உலக மகா ஆணியிலே மாட்டிகிட்டு முழிக்கிறேன், ஒரு மெயில் அனுப்பலாம்னு யோசிச்சீங்களா? போங்கப்பா....:)) சரி சரி நோ டென்ஷன்...

இப்போ மெயின் டாப்பிக்கு வருவோம்!

நல்ல தலைப்பு உணர்வுகளோடு ஒன்றி போய் எழுதக் கூடிய தலைப்பு இல்லையா? எனக்கு அப்படிதான் தோன்றுகிறது.(இதுதான் கேள்வியும் நானே பதிலும் நானே என்பது :-)).

சிறு வயதில் எங்க வீட்டுக்கு அருகே கோவில். அதனால் என்னோட தின வாசஸ்தலமும் அந்த கோவில்தான். படிக்கிறது, விளையாடறது எல்லாமே அந்த கோவிலில்தான் (சின்னப் புள்ளைதானே சாமி மன்னிச்சிடுவாங்க). நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கேதான் இருப்பேன், கண்களுக்குத் தெரியாத அரூவமான உருவமாய் எங்குமே நீக்கமற நிறைந்திருக்கும் நான் நம்பும் எனது தந்தையும் தாயுமாகிய சமயபுர அம்மாவைப் பற்றி இங்கே கூற எனக்கு ஒன்றும் தயக்கமோ ஆட்சேபனையோ இல்லை. கடவுள் இல்லை என்று கூறிவிட்டு ஒதுங்க நான் தயாராக இல்லை. மேடை ஏறி சொல்ல என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் எவ்வளவு வேணும்னாலும் எனது கருத்துக்களை பரிமாறிக் கொள்வதிலும் எந்த சங்கடமும் இல்லை. இந்த உணர்வுகள் என் உணர்வுகளோடு கலந்தவை. நான் உணரும் அளவிற்கு எழுத்து வடிவம் கொடுக்க முடியாது. ஆனாலும் ஓரளவிற்கு சுமாரா எழுதமுடியும்ன்னு நம்பி எழுத ஆரம்பித்து விட்டேன்.

தவறுகள் செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று கூறி யாரும் என்னை வளர்க்கவில்லை. நல்ல எண்ணங்களுடனும், அன்புடனும் நடந்து கொண்டால் அதுவே உன்னை உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டு செல்லும் என்ற அறிவுரையுடன்தான் நான் வளர்ந்தேன்.

மார்கழி குளிரில் அதிகாலையில் ரெண்டு மணிக்கே எழுந்து குளித்து, அந்த நடுக்கத்துடனேயே கோவிலுக்குச் சென்று சுப்ரபாதம் பாடிய நாட்கள் இன்றும், என்றும் என் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் பசுமையான நினைவுகள்! அந்த நினைவுகள் இன்று நினைத்து பார்த்தாலும் ஆனந்தப்பட வைக்கும் நினைவலைகள்!! என நெஞ்சுக் கூட்டுக்குள்ளே சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள இனிமையான நினைவுகள்!!

காலைப்பொழுதில் வாட்டி எடுத்த பனி அரக்கன் கதிரவனின் கதகதப்பில் சற்றே சென்று ஒளிந்து கொண்டாலும் குளிரின் கடுமைதான் குறையுமே தவிர குளிர் குறையாது. அந்த மாலைப் பொழுதில் அந்தக் கோவிலில் செய்யும் பூஜைகள் அபாரமா இருக்கும்!

இப்படியே படிப்பு, பாட்டிக்கு உதவிகள், மற்ற நேரத்தில் கோவில்தான் எனது இருப்பிடம். பேசிக்கொண்டு இருப்பது அங்கே இருக்கின்ற சுவாமி விக்கிரகத்திடந்தான். எனக்கு இருக்கும் ஒரே தோழி அந்த கடவுள்தான்.

இது படிப்போருக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் நான் உணர்ந்ததை தான் கூறுகிறேன்.கடவுள் இருக்கு என சொல்பவர்களுக்கு கண்டிப்பாக கடவுள் இருக்கு. இல்லை என்பவர்களுக்கும் கண்டிப்பாக கடவுள் இருக்கு. அவங்கதான் எங்கேயோ ஒளியாக திகழ்கின்ற உருவமில்லாத அருவமான உருவம். அண்ட சராசரத்தில் இருக்கும் ஒவ்வொரு துகள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள் நம்மை செம்மை படுத்துவதோடல்லாமல் நல்வழி படுத்திக் கொண்டும்தான் இருக்கின்றார்கள்.

கடவுள் இல்லை என்று யாரும் சும்மா சொல்லிவிடுவதில்லை, அப்படி கூற அவர்களிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கலாம். அதே கடவுள் இருக்கின்றது என்று கூறுவதற்கு என்னிடம் இருக்கும் ஆதாரம் நிமிர்ந்து நிற்கும் நான்தான்!!! இதை தவிர என்னிடம் வேறு எந்த ஆதாரமும் இல்லை. உன்னோட உழைப்பினால் நீ உயர்ந்தாய் இதற்கு எதற்கு கடவுள் பெயரை கூறுகிறாய் என்று கேட்கலாம், அருமையான கேள்வி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அனைவரும் நிமிர்ந்து பார்க்கும் இந்த வாழ்க்கையை அடைய எனது உழைப்பும் மட்டும் காரணம் இல்லை என்று அடித்துக் கூறவும் முடியும்.

உங்கள் முன் சிரித்துக் கொண்டு வலம் வரும் இந்த ரம்யா சந்தித்த வேதனைகள்தான் எவ்வளவு?இந்த முன்னேற்றம் காண இடையில் ஏற்பட்ட தடங்கல்கல்தான் எவ்வளவு? ஏமாற்றங்கள்தான் எவ்வளவு? அவமானங்கள்தான் எவ்வளவு? எதுவுமே எண்ணிலடங்கா! கணக்கிலடங்கா! அந்த சூழ்நிலையில் தள்ளப்பட்ட நான், எழ முடியாமல் முடக்கப்பட்ட நான்,எப்படி சாதரணமாக நடமாட முடிந்தது? அந்த தைரியமும் துணிச்சலும் கொடுத்தது யார்? எங்கோ ஏதோ அண்டத்தில் இருக்கும் அரூவமான உருவம்தான் என்று என்னால் கூற முடியும்!

என உள்ளத்தில் ஒரு மூலையில் ஒளிக் கீற்றாய் அவ்வப்போது வந்து போகும் ஒரு ஜ்வாலைதான் எனக்கு மனதில் ஒரு நம்பிக்கையை கொடுத்தது. ரம்யா இதில் இருந்து மீண்டு வா! நடந்து வா! ஓடி வா! இந்த உணர்வுகளால் நான் திகைத்தேன். உன்னால் முடியும் என்று அவ்வப்போது அழைத்துக் கொண்டே இருந்தது. அந்த ஒளி அளித்த வெளிச்சத்தில் நான் மெதுவாக மிக மெதுவாக என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை விதையை மனதில் மிகவும் ஆழமாக பதித்தேன்.

தாக்கிய அவமானகள்! ஏற்பட்ட துன்பங்கள்! துக்கங்கள்! வேதனைகள் அனைத்தையும் மறந்து! மன்னித்து, சில நிகழ்வுகளை மட்டும் நினைவில் உரம் போட்டு வளர்த்து, அதன் மேல் கோபம் வைத்து, அந்த கோபத்தில் ஏற்பட்ட ஜ்வாலையில் என்னை நானே திடப் படுத்திக் கொண்டு தவழத் தொடங்கினேன்! அப்புறம் தத்தி தத்தி நடந்து, பிறகு சாதாரண நடை நடக்கவே பட்ட கஷ்டங்கள் அதிகம்தான். இதற்கெல்லாம் காரணம் ஏதோ ஒரு மூலையில் இருந்து நம்மை வழி நடத்துகிறது! அந்த நடத்துதலில் நமக்கு எந்த தீங்கும் வராது என்ற ஒரே நம்பிக்கை. நடந்தேன்.. நடந்தேன் ஜெயித்தேன்!!!

என்னைப் பொறுத்தவரையில் படிக்கும் காலங்களில்தான் எனது வாசஸ்தலம் கோவிலாக இருந்தது. இப்போ வேலைக்கு வந்த பிறகு நினைத்த நேரத்திலோ அல்லது விசேஷ காலங்களிலோ கோவிலுக்கு செல்ல முடிவதில்லை. அதற்காக நான் வருத்தப்பட்டதும் இல்லை. நம் தூய்மையான மனதே கடவுளின் வாசஸ்தலம், அப்படி இருக்க நான் ஏன் கோவிலுக்கு போகவில்லை என்று வருத்தப் படவேண்டும். சூழ்நிலை அமைந்தால் கண்டிப்பாக செல்வேன். மத்தபடி எனக்கும் கடவுளுக்கும் இடையே இடைத்தரகர்கள் யாரை பற்றியும் யோசிப்பதில்லை, சந்திக்க நினைத்ததும் இல்லை.

பிரபல பதிவர் மயிலு விஜி என்னை சொன்னார்கள் எனது வீட்டை சமயபுரத்திற்கு மாற்ற நினைக்கும் ரம்யா என்று...
ஆமாம் விஜி இதில் என்ன தவறு? அப்படிதான் எங்கள் வீடு!அது ஒரு ஆலயம்தான்!! அந்த ஆலயத்தில்தான் எங்களின் இன்றைய வாசம் என்றால் அது மிகையாகாது! எளிமையான வீடுதான் ஆனாலும் எங்களது வீட்டிலும் ஒரு ஈர்ப்பு இருக்கின்றது என்று எங்க வீட்டிற்கு வருபவர்கள் அனைவரும் கூறுவார்கள். எங்க வீட்டிற்கு வருபவர்கள் எம்மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த இடம் மனதிற்கு அமைதியை கொடுக்கிறது என்று சொல்லாமல் சென்றவர்கள் மிகக் குறைவு.

கடவுளுக்கும் நமக்கும் என்ன ஒப்பந்தம் இருக்கிறது? ஒன்றுமே இல்லை! கூட்டி கழிச்சிப் பார்த்தால் எதுவுமே இருக்காது; இந்த உணர்வு என்னோட மனதில் ரீங்காரமிட்டு சுற்றி வரும் ஒரு உண்ணதமான் உணர்வு! இந்த உணர்வை நான் ரசிக்கிறேன்! நேசிக்கிறேன்! போற்றுகிறேன்! துதிக்கிறேன்! கரைந்து போகின்றேன்! இப்படி எவ்வளவ எழுதிக் கொண்டே செல்லலாம்.

எந்த கோவிலுக்கு செல்லும்போதும் பெரிய ஆன்மீகவாதியாகவோ, வேதங்கள் பல கற்றுக்கொண்டோ, நேம நிஷ்டைகள் பல கடைபிடித்தோ இருக்க வேண்டிய அவசியமில்லை.மாறாக, யாரையும் துன்புறுத்தாமல், ஒருவருக்கும் கெடுதல் நினைக்காமல், பரிசுத்தமான மனதுடன் இருந்தாலே போதும். எதிலும் ஒரு நிறைவு கிடைக்கும். சாமியிடம் பயம் வேண்டாம்! பக்தி வேண்டாம்! கலப்படமில்லாத நேசம் ஒன்றே போதும்! எளிதில் எதையும் வென்றிடலாம்.

சுருங்கசொல்லின் மனிதன் மனிதனாக இருக்கவேண்டும். அன்பு, பண்புடன், காம, குரோத, லோக, மோக, மத, மாச்சர்ய இவைகள் அனைத்தும் தவிர்த்து, நல்ல மனதால், நல்ல சிந்தனையுடனும் வாழத் தெரிந்திருக்கவேண்டும்.மனதால் கூட எவருக்கும் தீங்கு நினைக்கக்கூடாது.(இதுதான் ஆறாவது அறிவின் மிக முக்கியமான வேலை)

இந்த பண்புகளை மனிதனால் மட்டுமே வளர்த்துக் கொள்ள முடியும். அதனால்தான் மனிதப் பிறவியை மிகச் சிறந்த பிறவியாக சிலாக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை கோவிலுக்கு எதற்கு செல்கிறோம். அங்கே சந்திப்பவர்களிடம் குசலம் விசாரிக்கவா? இல்லை தெரிந்தவர்களுடன் புறம் பேசவா? கண்டிப்பாக இல்லை! செல்லும் நேரம் குறைவாக இருந்தாலும், செல்லும் நாட்கள் கணக்கிலடங்கினாலும் நோக்கம் ஒன்றே!

என்னைப் பொறுத்தவரை எந்த கோவிலுக்கு சென்றாலும் ஒரே தெய்வத்தின் உருவம் தான் எனது கண்களுக்கு தெரியும், திருப்பதி சென்றாலும் மாரியம்மாதான், ஸ்ரீரங்க நாதரிடம் சென்றாலும் மாரியம்மாதான், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றாலும் தெரியும் உருவம் மாரியம்மாதான். இப்படி எதிலும் அம்மாவை ஒரு நிலைப் படுத்தி வைக்க முதலில் நான் எனது மனதை ஒருநிலைப் படுத்தி வைக்க வேண்டும் அல்லவா? அந்த காரியத்தை மிகச் சிறிய வயதிலேயே செய்து முடித்துவிட்டேன். யோக நிலையை எனது ஒன்பதாவது வயதில் அடைந்தேன். இது என்னோட பாட்டி உபயம். அவர்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. எனக்கு முன்னால் ஒரு அதிசயமான ஒரு பிம்பம் எனது பாட்டிதான்!!

அதேபோல்தான், எந்த கோவிலுக்குப் போனாலும் அனைத்தும் மறந்து போகும். ஒரே இலக்கு நம் முன்னால் எந்த உருவச் சிலை உள்ளதோ அதனுடந்தான் மனம் ஒரு நிலைப்பட்டுப் போகும். ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ நமது கவலைகள் அனைத்தையும் மறந்து நிற்கின்றோமே! அதுதான் என மனதில் தோன்றும் ஒரு அருமையான யோக நிலை. இதற்கு மேல் என்ன வேண்டும்? எதுவும் வேண்டாம்...

எந்த கோவிலுக்கு சென்றாலும் என் கண்களுக்கு மட்டுமல்ல கருத்துக்களுக்கும் தெரிவது கடவுள் ஒன்றுதான். அந்த கடவுள் நான் மனமுருக வழிபாடும் எனதன்பு தெய்வமான சமயபுரமாரியம்மன்தான்!!!

கிறித்துமஸ் விழாவில் அந்த தோழிகளுடன் கிருஸ்துமஸ் கொண்டாடுவோம்.
இஸ்லாமிய தோழிகளின் வீட்டிற்கு ரமலான் நோன்பு சமயத்தில் சென்று அவர்களின் நோன்பில் கலந்து கொள்வோம். அவர்கள் கொடுக்கும் அந்த நோன்பு கஞ்சியையும் அதே பய பக்தியோடு சாப்பிடுவோம்.

இவர்கள் அனைவரும் எங்க வீட்டில் தீபாவளியை கொண்டாடுவாங்க.

மதம் தாண்டி, இனம் தாண்டி, பல நட்புக்களை அளித்து அந்த நட்புக்களே என்னைச் சுற்றும் உறவுகளாக மாறிய இத்தருணம் கூட அந்த கடவுள அளித்ததுதான் என்றால் அது மிகையாக!

மயிலு, இந்த தலைப்பில் எழுதினால் முடிவே இருக்காது. எனது மனதில் அவ்வளவு உள்ளது. ஆனாலும் முடிக்கும் தருணம் வந்து விட்டது என்று எண்ணுகின்றேன். கைகள் ஒய்ந்து விட்டன, ஆனால் எண்ணங்களும் அதில் எழும் ஓசைகளும் மனதில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன. மற்றுமொரு தருணத்தில் மறுபடியும் இதே போல் ஒரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்.

டிஸ்கி: இங்கு எழுதி இருப்பது அனைத்தும் என்னோட தனிப்பட்ட உணர்வுகள்தான். ஒருவரையும் புண்படுத்த அல்ல. என்னுடைய நம்பிக்கைஎன்னுடன் உறவாடிக் கொண்டிருக்கும் எனதருமையான உணர்வுகளின் உயிரோட்டங்களின் ஆர்ப்பரிப்புதான். நண்பர்கள் நல்ல புரிதலுடன் இந்த தோழியை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.





Saturday, June 19, 2010

அதனாலென்ன!!


விடிய விடிய படித்தும்
விளங்காமல் போன பாடங்கள்
விடிந்ததும் கேலி செய்ததே!

****

வாழ்க்கைப் பாதைகளில்
வரைந்து வைத்த ஓவியம் போல்
கால இறகு பூக்களை தூவி
வைத்ததே!
****

எந்த வடிவமும் பிடிப்பதில்லை
நான் மனதில் வடித்த
உன் முகம் தவிர

****

மலை உச்சிக்கு சென்று
உயிரை துறக்க நினைக்க
ஏதோ ஒன்று மனதை மாற்றியதே!

****

தேர்வுத் தாள்களில்
எழுதிய எழுத்துக்கள்
செல்லுபடியாகாமல் பரிசாக்கியது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே!
****

ஒரிஜினல் கவிதை எழுதியவர் ஈரோடு கதிர்: அவரின் வேறென்ன

கதிருக்கு எதர் கவிதை எழுதியவர்கள் ஏழு பேரு என்று சொன்னார்கள் அவர்கள் பின் வருமாறு:

கதிர் (ஒரிஜினல் கவிதை ): வேறென்ன?

பழமைபேசி: பிறகென்ன?

நிஜம்மா நல்லவன்: வேறென்ன?

இயற்கை ராஜி: நானில்லாமலென்ன‌?

வானம்பாடிகள்: கதிருக்கு எதிரு

நட்புடன் ஜமால் : அதனாலென்ன!!

விவசாயி: அதுக்கென்ன?


இவங்களோட சேர்த்து நானும் எழுதி இருக்கேன்.... நீங்க படிச்சிருப்பீங்க :)

எனக்கு தெரிஞ்சி இவ்வளவு பேருதான் எழுதி இருக்கோம். இன்னும் எவ்வளவு பேரு எழுதி இருக்காங்கன்னு இப்போ நிலவரப்படி தெரியல:) பொறுத்திருந்து பார்ப்போம்:)




Monday, June 14, 2010

எனது ஹாஸ்டல் அனுபவம்!!

வேலைக்கு செல்லும் மகளிர் விடுதியில் தங்கி இருந்த போது ஏற்பட்ட பல அனுபவங்களில் இதுவும் ஒன்று.

தினம் தினம் ஒரு அனுபவம்தான். விடிந்தால் ஒரு பிரச்சனை, விடிந்து முடிந்தால் ஒரு பிரச்சனை, இதில் சில தானே நிகழ்வது, சில நமக்கே தெரியாமல் நாம் காரணமாவது. நான் எப்போதும் இரெண்டாம் ரகம்தான். என்னால்தான் பல பிரச்சனைகள் எனக்கே தெரியாமல் உருவாகிவிடும். .

உண்மையை ஒத்துக் கொள்வதில் தனி தைரியம் வேண்டும் அல்லவா? ஹா ஹா என்ன செய்ய வால் நம்பர் ஒண்ணாக இருந்தால் இந்த மாதிரி நிகழ்வுகள் சகஜம் தானே? சரி வாங்க என்னான்னு பார்க்கலாம்!!

நான் இருவர் தங்கி இருக்கும் அறையில் இருந்தேன். என்னுடன் இருந்த அக்கா ரொம்ப பெரியவங்க. அவங்க டீச்சரா இருந்தாங்க. எனக்கு காலை ஷிப்ட். ஏழு மணிக்கு போயிட்டு மாலை ஐந்து மணிக்கு ஷிப்ட் முடியும். மாலையில் சில சமயம் ஐந்து மணிக்கு வந்து விடுவேன். பல சமயம் அறைக்கு வர ரொம்ப நேரம் ஆகும். அன்று பார்த்து கொஞ்சம் சீக்கிரம் வந்துவிட்டேன். அங்கே எனது விடுதியில் புதுசா சேர்ந்திருந்த சுந்தரி மிகவும் சோகமாக உக்காந்திருந்தாள். இதுதான் வில்லங்கத்திற்கு ஆரம்பம் என்று எனக்கு அப்போ தெரியாமல் போய் விட்டது.

உள்ளே நுழையும்போதே இந்த காட்சியை கவனித்து விட்டேன். இருந்தாலும் பசி என்ற அரக்கன் என்னை மிகவும் மோசமான நிலையில் தாக்கியதால் வேகம் வேகமாக டீ குடித்துவிட்டு சுந்தரியின் அருகே அமர்ந்தேன்..

"என்ன ஆச்சுங்க சுந்தரி? புதுசா வந்திருக்கீங்கல்லே! ஹாஸ்டல் வசதியா இருக்கா? சாப்பாடு நல்லா இருக்கா? " (என்ன கேள்வி சட்டுன்னு விஷயத்திற்கு வருமாறு மனது சொல்கின்றது!)

"எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் ரம்யா, என்னோட ரூம்லே ஒரே கட்டில் தான் இருக்கு. இன்னொரு கட்டில் வர ஒரு வாரமோ இல்லை பத்து நாளோ ஆகுமாம்"...

"சரி அதுக்கு என்ன இப்போ?".

"ரூமுலே ரெண்டு பேரு தங்கி இருக்கோம்"
"சரிப்பா யாரவது ஒருத்தர் கட்டில்லே படுத்துக்கோங்க, அடுத்தவங்க கீழே படுத்துக்கோங்க, என்னப்பா இன்னும் பத்து நாள் தானே சமாளிக்க மாட்டீங்களா?"

"இதெல்லாம் பிரச்சனை இல்லே! என்னோட அறையிலே இருக்கிற கவிதா நான் ஒருத்தி இருக்கிறதை சட்டையே பண்ணாம அவ பாட்டுக்கு நேத்து ராத்திரி கட்டில் நிறைஞ்சு படுத்து தூங்கிட்டா. அதை நினைச்சாதான் ஒரே கோவமா வருது ரம்யா" என்றாள் அழமாட்டாத குறையாக.

"ஐயோ! அப்படியா செஞ்சா கவிதா? எனக்கு அவளை பத்தி அவ்வளவா தெரியாது. இருந்தாலும் உன் கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு தூங்கி இருக்கலாம்" (எண்ணையை ஊத்திட்டோமோ? அப்படிதான் தெரியுது:))

"இன்னைக்கு என்ன பண்ண போறேன்னா, எனக்கும் கட்டில்லே கொஞ்சம் இடம் குடுன்னு கேக்கப் போறேன். நானும்தானே பணம் கட்டறேன். அவ மட்டும் என்ன ஜமீனா?" என்று சொல்லும் போதே கோபம் கொப்பளித்ததை என்னால் உணர முடிந்தது.

"நேரம் ஆச்சு நான் வரேன்" என்று கிளம்பி போய்ட்டாங்க சுந்தரி.

இது என்ன நடக்குமோ என்ற பயம் இருந்தாலும் அடுத்த என்னோட வேலைகளில் கவனம் செலுத்தியதால் (வேறு என்னா சாப்பாடுதான்) சுந்தரியை அப்படியே மறந்து போனேன்.

அடுத்த நாள் மாலையில் அலுவலகத்தில் இருந்து தாமதம் இல்லாமல் வந்து சேர்ந்தேன். அன்று சுந்தரி என்னோட அறையில் அமர்ந்து கொண்டிருந்தாள். எனக்கு ஒரே ஆச்சர்யமாகிப் போனது. ஏனெனில் வேலம்மாக்கா ஒருவரிடமும் பேச மாட்டாங்க. இந்தப் பெண்ணுடன் இருப்பதைப் பார்த்தவுடன் புரியாத புதிரானேன். டீ கோப்பையுடன் மெதுவாக சுந்தரியின் அருகே அமர்ந்தேன், மனதில் ஒரே பரபரப்பு. என்னாவா இருக்கும்? மறுபடியம் ஏதாவது பிரிச்சனையா என்று அறிவதில் ஆர்வம் அதிகமானது.

ஆனால் என்னோட அறையில் இருந்த வேலம்மாக்கா என்னைப் பார்த்து முறைத்தார்கள். நான் அதை கண்டு கொள்ளாமல் சுந்தரியின் அருகே அமர்ந்து... "என்னாச்சு பா?" என்றேன்.

"உன் கிட்டே சொன்ன மாதிரி எனக்கும் கட்டில்லே படுக்க உரிமை இருக்கு, மரியாதையா எனக்கு கொஞ்சம் இடம் விட்டு படுத்துக்கோன்னு சொன்னேன். அவளும் தள்ளி படுத்துகிட்டா. ஆனா பாதி ராத்திரி வேணும்னே என்னை உதைச்சி கீழே தள்ளிட்டா! இடுப்பிலே நல்ல அடி" என்று அழ ஆரம்பித்தாள் சுந்தரி.

"ஹையோ இதென்னா கூத்தா இருக்கு! ஆனாலும் கவிதா ரொம்ப மோசம்பா" கிளம்பும்போது என்னால் இயன்ற ஒரு சின்ன ஐடியா சொல்லி அனுப்பினேன். அதாவது ஒரே கட்டிலில் இருவரும் தலை கீழாகப் படுத்துக் கொள்ளுங்கள். அப்போது இடம் அதிகமா கிடைக்கும் என்றேன். அதற்கு சுந்தரியும் வேகமாக தலையை ஆட்டிவிட்டு சென்றார்கள். மறுபடியும் வேலம்மாக்கா என்னை பார்த்து முறைத்தார்கள்"

"சும்மாவே இருக்காமாட்டியா ரம்யா வீண் வம்பை விலை கொடுத்து வாங்குற? இதெல்லாம் நல்லதுக்கே இல்லேன்னு திட்டினாங்க"

அடுத்த நாளோ அதிகப் பிரச்சனை ஆகிவிட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் உதைத்துக் கொண்டதின் விளைவு இருவர் முகத்திலும் காயங்கள். கேட்டில் நுழையும்போதே எனக்கு விஷயம் காதில் விழுந்து விட்டது. ஒரே பயம். நான் கொடுத்த ஐடியா இவ்வளவு மோசமா விளைவுகளை ஏற்படுத்தி விட்டதே! அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சிகிட்டே உள்ளே நுழைந்தேன்.

மெதுவா என் அறைக்கு செல்ல முயன்றபோது வார்டன் அறையின் முன்னால் ஒரே சத்தம். அனைவரும் வார்டன் ரூம் வாசலில் குழுமி இருந்தார்கள். கவிதா உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தாள். சுந்தரியும் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். இருவரும் ஒரே நேரத்தில் கத்தியதால் விஷயம் தெரியாதவர்கள் விழித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குதான் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுத்தது. நான் கொடுத்த ஐடியாவினால்தான் இப்படி ஆகிவிட்டது என்று எல்லாருக்கும் தெரிந்து விட்டதாக வேலம்மாக்கா என்னிடம் கூறினார்கள். படுபாவி இன்னும் யார் யாரிடம் சொல்லி இருப்பாளோ என்று மனதில் பயம் வேறு...

மெதுவாக கூட்டம் இருக்கும் திசையில் செல்லாமல் அறையினுள்ளே அடைந்து விட்டேன். எல்லாம் முடிந்து வேலம்மாக்கா வந்தார்கள்.

"என்னாம்மா இப்படி ஒரு ஐடியா கொடுத்திட்டு போயிட்டே??"

"ஐடியா கொடுக்கத்தான் முடியும், கவிதாவை அடிக்கவா முடியும் போங்கக்கா"

"உனக்கு கொழுப்பு ஜாஸ்த்தி ஏன் வீணா இதுலே எல்லாம் தலையிடரே ஒழுங்கா உன்னோட வேலை உண்டு நீ உண்டுன்னு இருக்க மாட்டியா" இது வேலம்மாக்காவின் தரப்பு நியாயம்.

மெதுவா போய் கூட்டத்தில் கலந்து கொண்டு இருவரையும் நோட்டம் விட்டேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. ரெண்டு பேரு முகமும் வீங்கிப் போயிருந்தது எனக்கு ரொம்ப பயமா போச்சு. இந்த சண்டைக்கும், இந்த செயலுக்கும் காரணம் யாரு என்று நைசா விசாரித்தேன். காரணம் யாருக்கும் தெரியாது என்று கூறினார்கள். பிறகுதான் உயிர் வந்தது. தைரியமா சுந்தரியை என் அறைக்கு வரவழைத்து விவரம் அறிந்தேன்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக தற்போது தங்கி இருக்கும் அறையை காலி செய்து விட்டு வேறே அறைக்கு செல்லுமாறு ஐடியா கொடுத்தேன். அதன்படி மறுபடியும் வார்டனிடம் தனக்கு வேறே அறை கேட்டு இருக்கிறாள் சுந்தரி. இப்போது அறை எதுவும் காலியாக இல்லை இரு பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த செய்தி மாலை என் காதுகளுக்கு எட்டியது. இரண்டு நாட்கள் முன்பு நான்கு பேர் தங்கும் அறையில் ஒரு பெண் காலி செய்துவிட்டு சென்று விட்டதால் அங்கு ஒரு பெட் காலியாக இருப்பது எனக்கு தெரியும். அதனால்தான் அப்படி ஒரு ஐடியா சுந்தரிக்கு கொடுத்தேன். ஆனால் ஏன் வார்டன் அப்படி கூறினார்கள் என்று புரியவில்லை. அந்த விவரத்தையும் சுந்தரியின் காதில் போட்டு வைத்தேன். ஏனெனில் கவிதா சரியான ராங்கிக்காரின்னு இன்னொரு தோழியும் என்னிடம் கூறியதால் சுந்தரியை காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்கு இருப்பதாக என் மனது கூறியது(இதெல்லாம் கொஞ்சம் ஓவரா ஸீன் போடறதா நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது:-)).

இந்த வெவரம் தெரிந்தவுடன் சுந்தரிக்கு மிகவும் கோவம் வந்து, அதே வேகத்துடன் வார்டன் அறைக்கு விரைந்து சென்றாள். அங்கே கவிதா தனக்கு வேறே அறை கொடுக்குமாறு விவாதம் செய்து கொண்டிருந்திருக்கிறாள், இல்லாதையும் பொல்லாததையும் வார்டனிடம் சுந்தரியை பத்தி கவிதா போட்டு கொடுத்ததை காதில் வாங்கிய சுந்தரி, அழுகையுடன் எனது அறைக்கு வந்து சேர்ந்தாள். இந்த முறை வேலம்மாக்கா ரெண்டு பேரையும் வெளியே போகச் சொல்லி விட்டார்கள். எனக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. அந்த நேரத்தில் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. கவிதா அறையை காலி செய்து விட்டால் சுந்தரிக்கு பிரச்சனை இல்லை என்று முடிவெடுத்து அதை உடனே அவளிடம் கூறாமல் அமைதியாக ஒரு நாளை கடத்து ஆறப்போட்டு பிறகு யோசிப்போம் என்று கூறி சுந்தரியை அனுப்பி வைத்தேன் (இப்போதைக்கு சுந்தரிக்கு நான்தான் லீகல் அட்வைசர்.. காலத்தின் கொடுமையை பார்த்தீங்களா?).

பிறகுதான் தெரிய வந்தது, கவிதாவும், சுந்தரியும் சண்டை போடுவாங்கன்னு நாலு பேர் ரூமிலே இருக்கறவங்க பயப்பட்டதால், வார்டன் இவர்களை தவிர்த்து விட்டதாக ஒரு செய்தி எனது காதுகளுக்கு எட்டியது. தெரிந்தும் நானும் பேசாமல் இருந்து விட்டேன். எந்த தரப்பிலும் எந்த மாறுதல்கள் இல்லாததால் சுந்தரி வேறே ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள்.

இப்படி தினம் தினம் பல அனுபவங்களுடன் கடத்திய நாட்களை இப்போது அசை போட்டாலும், சில அனுபவங்கள் மனத்திற்கு கஷ்டமாக இருந்தாலும் பல அனுபவங்கள் சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக இருக்கும்.

நாம் சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் மரணம் நம்மை விட்டு வெகு தூரத்தில் விலகி நிற்கும்....

ரம்யா...