ஆமாம்பா இது ஒரு மாதிரி சோகம்தான் ஆனா எனக்கு இல்லே!!
அந்த அக்கா வந்தாங்க இல்லே, நான் கூட மொதல்லே சொன்னேனே,நட்பா இருந்து அப்புறம் அக்காவா மாறினாங்கன்னு. என் பதிவை கூட படிச்சுட்டு தூங்கினாங்க இல்லே அவங்களோட நடந்த மற்றொரு அனுபவம்.
இந்த பதிவை படித்துவிட்டு மன நிறைவோடு சென்று விட்டார்கள். (ஏன் எல்லோரும் ஒரு மாதிரியா சிரிக்கிறீங்க??)
நிஜம்மாவே நல்லா இருக்குன்னு சொன்னாங்க.
வால்பையனின் கேள்விகள், ரம்யாவின் பதில்கள்.
அந்த அக்காவின் -- மறு விமரிசனம்
===================================
1.இங்கே முதல் ரசனை வால்பையனுக்கு போகின்றது. 2.இரண்டாவதாகத்தான் அவர்களின் சபாஷ் எனக்கு.
3.அருமையான கேள்விகள் அதற்கு தகுந்த பதில்கள்தான்.
4.கேள்விக் கேட்டாதானே பதில், இதுவும் அருமையான முடிவு.
5.இதை நானும் வரவேற்கின்றேன்.
6.ஜெயித்தது என் நண்பர்தானே. (உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன்) சேச்சே இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட பாட்டு. ஹி ஹி ஹி.
அப்பா ஒரு வழியா முன்னுரை முடிந்தது.
இப்போ வாங்க உள்ளே போகலாம்.
=========================
ஊருக்கு போறேன் சொன்னவங்க திடீரென்று மனது மாறி, மறுபடியும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. ஆனா அவர்களை பார்த்தவுடன், இந்த முறை அக்காவை பதிவை படிக்கச் சொல்லி துன்புறுத்தக் கூடாதுன்னு முடிவு எடுத்து இருந்தேன். நல்ல முடிவுதானே!! என்னப்பா சிரிக்கறீங்க?? போங்கப்பா சிரிச்சவங்க எல்லாம் ஒன்னும் சரி இல்லை...
சரி வாங்க மீதியை படிக்கலாம்
======================
அவங்க வந்தப்போ எங்க வீட்டுலே நான் தனியா தான் இருந்தேன். விட்டுலே இருந்தவங்க ஊருக்கு போய் இருந்தாங்க.
வந்தாங்க வந்தவுடன் சில விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்புறம்தான் மறுபடியும் ஏன் வந்தாங்க என்கின்ற விஷயத்தை சொன்னாங்க.
அக்கா: ஒன்னும் இல்லைப்பா!!
ரம்யா: ஏதோ விஷயம் என்று தானே சொன்னீங்க, அப்புறம் என்ன ஒன்னும் இல்லை??
அக்கா: இல்லேடி அப்படித்தான் பேச்சை ஆரம்பிக்கணும் இல்லையா??
ரம்யா: ஓ!! ஆரம்பமா?? அது சரி
அக்கா: என்னாடி நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ பாட்டுக்க ஏதோ பேசிகிட்டே இருக்கே?? முக்கியமான் ஒரு விஷயம் அன்னைக்கி வந்த போது மறந்து விட்டேன். அதை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.
ரம்யா: இல்லேக்கா நீங்க சொன்னதை நான் அப்படியே உள்வாங்கி மறுபடியும் அதை அப்படியே திருப்பி சொன்னேன். அதான் வேறு ஒன்றும் இல்லை. சரி சொல்லுங்க.
அக்கா: பத்தியா கடைசியிலே என்னையே நீ வாருரே?? பரவா இல்லையாடி??
ரம்யா: இல்லேக்கா நான் கடைசியிலே இல்லே மொதல்லே இருந்தே உங்களை வாரிக்கிட்டு தான் இருக்கேன்.
அக்கா: தனியா இருக்கியே அப்படின்னு யோசிச்சு சரி இந்த பிள்ளை கூட இன்னும் ரெண்டு நாள் இருக்கலாம்னு வந்தா நீ என்னை வச்சி காமெடியா பண்ணறே??
ரம்யா: சேச்சே, நான் உங்களை வச்சி காமெடி, கீமெடி ஒன்னும் பண்ணலைக்கா!! சரி, சரி நான் அடங்குறேன், நீங்க இப்போ சொல்லுங்க.
அக்கா: ஏய் குறுக்கே ஒன்னும் பேசக் கூடாது என்ன புரிஞ்சி போச்சா??
ரம்யா: இல்லேக்கா, நான் குறுக்கே பேசவே மாட்டேன். ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்ல விரும்பறேன். எனக்கு உங்க பிரச்சனை புரிஞ்சிடுச்சு, ஆனா போகலை சரியா??
அக்கா: ஏண்டி என்னைய போய் இப்படி டார்ச்செர் பண்ணறே ?? உனக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகம் தான். குறையவே இல்லை.
ரம்யா: இல்லேக்கா, போன வாரம் டாக்டர் கிட்டே போனேன், நின்னா, நடந்த மயக்கம் வருதுன்னு. டாக்டர் சொன்னாரு உடம்பு ரொம்ப அனிமிக்கா இருக்கு, நல்ல கொழுப்பு சத்து நிறைந்த உணவா எடுத்துக்கோன்னு சொன்னாரு. ஆனா என்னக்கா நீங்களும் அந்த துறைலே தானே இருக்கீங்க. நீங்க மட்டும் என்னக்கா என்னை பார்த்து இப்படி சொல்லிட்டீங்க??
நான் டாக்டர் சொன்னதை அப்படியே எடுத்துகிட்டு என் உணவு பழக்கங் வழக்கங்களை இப்போ தான் மாற்றிக் கொண்டு வருகின்றேன். உங்க கிரகம் அந்த நேரமா பார்த்து என் கிட்டே மாட்டிடீங்க போல இருக்கு. சரி சரி, கோச்சுகாதீங்க. இப்போதில் இருந்து நான் ஒழுங்கா கேக்கறேன் சரியா??
அக்கா: இல்லேடி நம்ப தம்பிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கோம்.
ரம்யா: அது நம்ப தம்பி இல்லே, உங்களுக்கு தம்பி, எனக்கு அண்ணா சரியா?
அக்கா: அதெல்லாம் இருக்கட்டும், பேசிகிட்டே இருக்காதே, கல்யாணத்துக்கு கண்டிப்பா நியும், உன் கூட இருக்கறவங்க எல்லாரையும் கூட்டிகிட்டு வீரபாண்டிபட்டினத்துலே இருக்கின்ற சர்ச்க்கு வந்திடுங்க.
ரம்யா: அக்கா எப்படி வர்றது ??
அக்கா: ரயிலுக்கு டிக்கெட் வாங்கிடுங்க. ரயில்லே ஏறினவுடனே ரெண்டு கிலோமீட்டரில் வலது பக்கமா திரும்பி பார்த்தால், சர்ச் தெரியும். உடனே ஏறங்கிடுங்க.
ரம்யா: ரெண்டு கிலோமீட்டரிலா?? என்னாக்கா சொல்லறீங்க?? இல்லையே, வீரபாண்டிபட்டினம் ரொம்ப தூரமாச்சே, ரெண்டு கிலோ மீட்டரா?? அதுக்கு எதுக்கு ரயிலு?? எங்க காரிலேயே வந்துடுவொமே?? ஒரே குழப்பம்ஸ். இல்லேக்கா நீங்க சொல்லறமாதிரி ரெண்டு கிலோமீட்டரில் சேத்துப்பட்டே தாண்டாது ரயிலு, எப்படி அது வீரபாண்டிபட்டினம்னு சொல்லறீங்க??
அக்கா:வேண்டாம்டி நான் ஊருக்கு போய் பத்திரிகை அனுப்பறேன்.மரியாதையா வாயை மூடிகிட்டு வந்து சேரு. இப்போ நான் தூங்கப் போறேன், பேசிகிட்டே இருக்காமே தூங்கு சனியனே. எதைப் பேசினாலும் நொண்டு பேசறே!
ரம்யா: இந்த அக்காவை ரொம்ப கடுப்பேத்திட்டோமோன்னு ரொம்ப யோசனையா இருந்திச்சு. சரி சரி இனிமேல் இவங்களை ஒன்னும் சொல்லக்கூடாதுன்னு முடிவெடுத்துட்டு அப்படியே கொஞ்சம் லேசா தூங்க ஆரம்பிச்சுட்டேன். திடீர்ன்னு ஒரே சத்தம்.
"என்னங்கடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க, நல்லா அழுந்த தேச்சு கழுவுங்கடி" அப்படீன்னு அமானுஷ்யக் குரல் கேட்டுச்சு.
எனக்கு ஒண்ணுமே புரியலை. நான் தனியா தானே இருந்தேன். இந்த அக்கா இருப்பது நினைவிற்கு வரலை.
ரொம்ப பயந்துட்டேன். எழுந்து விளக்கு போடக் கூட பயம். வீட்டுக்குள்ளே யாரோ பூந்துட்டாங்க, இப்போ என்னா நடக்கப் போகுதோ,ஐயோ பயந்து வருதேன்னு நினைக்கும்போதே அழுகையா வருது.
கொஞ்சம் நேரம் விழித்திருந்தேன். அப்புறம் ஒன்னும் சத்தம் இல்லை. பயந்தபடியே தூங்கிட்டேன். மறுபடியும் ஒரு குரல்,
"நான் சொல்லிகிட்டே இருக்கேன் உன்னாலே கேக்க முடியலை இல்லே??" இந்த முறை கோவம் குரலில் அதிகம் தெரிஞ்சுது. சரி இன்னைக்கு தூக்கத்திற்கு சங்குதான் தெரிஞ்சி போச்சு. சரி, கொஞ்சம் புத்தியா யோசிக்கலாம்னு நினைச்சேன் (அதெல்லாம் எங்கே உனக்குன்னு கேக்கறது காதிலே விழுது, என்ன செய்ய அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா) எங்கே இருந்து இந்த சத்தம் வருதுன்னு உன்னிப்பா கவனிச்சேன். தொடர்ந்து பேச்சுக் குரல் கேட்ட வண்ணம் இருந்தது.
அட நம்ப அக்காதான் இவ்வளவோ அமர்க்களம் பண்ணறாங்க. ஓ!! இவங்களுக்கு தூக்கத்திலே பேசற பழக்கம் போல இருக்கு. தெரிஞ்சாலும் பயத்தோட தான் படுத்திருந்தேன். எப்பபோ விடியும்ன்னு காத்திருந்தேன், காலையிலே என்னாக்கா! ராத்திரி தூக்கத்திலே பேசினீங்கன்னு கேட்டா, இல்லேடி நான் பேசமாட்டேன், ஆனா அந்த ஜெயா அக்கா இல்லே அவங்க தான் தூக்கத்திலே பேசுவாங்க....
ரம்யா:இங்கே பாருங்க நேத்து ராத்திரி இங்கே படுத்து இருந்தது நீங்க தான், நீங்க தான் பேசினீங்க, ஏனக்கா ஜெயாக்கவை சொல்லறிங்க??
அக்கா:சரிடி இப்போ என்னா அதுக்கு, நான் கிளம்பறேன், கல்யாணத்துக்கு வந்துடுன்னு சொல்லிட்டு.
கிளம்பிட்டாங்கையா!! கிளம்பிட்டாங்க!!