Monday, October 4, 2010

கேள்விகள் ரம்யா.. மாட்டிக் கொண்டவர் நசரேயன்!!


நண்பர் நசரேயன் அவர்களிடம் ஏதாவது கேள்வி கேட்டு பதில் பெற வேண்டும் என்று பல நாட்களாக யோசித்தேன். பதில் அளிப்பாரோ அளிக்கமாட்டாரோ என்று மனப்போராட்டம் வேறு. சரி பதில் கிடைக்கவில்லை என்றால் என்ன? நம் நண்பரிடம்தானே இந்த தோல்வி என்று ஒரு முடிவுடன் கேள்விகளை அனுப்பி வைத்தேன்.

நண்பர் நசரேயன் என் கேள்விகளுக்கு பெரிய மனதுடன் பதில்களை அனுப்பி இருக்கிறார். நண்பர் நசரேயன் அருமையான மனிதர், எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பதை மிகவும் விரும்புவார் (தவறாக எண்ண வேண்டாம். முக மலர்ச்சியைதான் நான் அவ்வாறு கூறி இருக்கிறேன்). எதையுமே தவறாக எண்ணாமல் ஆரோக்கியமான கோணத்தில் சிந்திக்கும் திறன் படைத்தவர். நண்பரின் மனப்பக்குவம் பல சமயத்தில் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இந்த குணம் மிகவும் ஆரோக்கியமான மனப் பக்குவம்தானே! நண்பரின் இந்த குணம் அவரின் வெற்றிக்கு மிகவும் உதவும் என்பது என் கணிப்பு. என்னோட கணிப்பு சரிதானே நண்பர்களே!!

நண்பர் நசரேயன் என்ன பதில்களை நமக்கு அளித்துள்ளார் என்பதை அறிய உங்களைப் பலவே நானும் மிகவும் ஆவலாக உள்ளேன், வாங்க நண்பரின் பதில்களைப் படிக்கலாம்.....

1. நீங்க எந்த கல்லூரியில் படித்தீர்கள்? உங்களுக்கு முதல் வேலை எங்கே கிடைத்தது? முதல் வேலை மனதிற்கு நிறைவைத் தந்ததா?

நான் மலைக்கோட்டை நகரத்திலே உள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில தான் படிச்சேன் .. ஆமா இந்த கேள்வியை தெரிஞ்சி எனக்கு ஏதும் மருத்துவர் பட்டம் கொடுக்கப் போறீங்களா? என்னோட முதல் வேலை சென்னையிலே தான் கிடைத்து, கல்லூரி முடித்துவிட்டு சென்னை வந்து மின்னணு பெறியியல் துறையிலே மைலாப்புரிலே "யுனைட்டேட் எலக்ட்ரோனிக்ஸ்ல ஒரு நேர் முகத்தேர்வுக்கு போனேன், அவரு கேட்டாரு நீ எங்க தங்கி இருக்கிறாய்னு ஆங்கிலத்திலே கேட்டாரு, அந்த கேள்வி எனக்கு எனக்கு புரியலைன்னு சொன்னேன், உடனே அவரு முதல் வகுப்பிலே தேர்ச்சி அடைந்த உனக்கு ஆங்கிலமே தெரியலையேன்னு சொல்லிட்டு என்னோட குடும்ப விவரங்களை கேட்டு, என்னை பாரிமுனை யிலே இருந்த ஒரு கப்பல் நிறுவனம் ஒன்றிக்கு என்னை அனுப்பி வைத்தார், அங்கே எனக்கு வேலை கிடைத்தது, என்னோட வேலையே எண்ணுரிலே இருக்கும் துறைமுகம் சென்று அங்கு கப்பலில் வரும் கன்டைனர்களில் உள்ள சரக்கு பொட்டலங்களை எண்ணி, அதை சரி பார்த்து அனுப்புவது, படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்ததாலே, ஆறு மதம் வேலை பார்த்துவிட்டு, வேலையை விட்டு விட்டேன். அடுத்த ரெண்டு மாசத்திலே சோத்துக்கு வழி இல்லாம ஊரு பக்கம் போனவன், திரும்பி வரவே இல்லை. ஊரிலே நண்பன் ஒருவனுக்குகாக கணணி தொழில் பயற்சி வகுப்பிலே சேர தென்காசிக்கு அவனுடன் சென்ற போது எனது விலாசத்தையும் கொடுத்து விட்டு வந்தேன். கடைசியிலே அவன் சேராம கம்பிய நீட்டிட்டான், எனது விலாசத்தை வைத்து எங்க வீட்டுக்கே வந்துவிட்ட அந்த பயிற்சி நிறுவனத்திலே வேலை செய்யும் அலுவலர் ஒருவரினால் நான் அந்த பயற்சி நிறுவனத்திலே சேர்ந்து விட்டேன். பல தடைகளை தாண்டி இப்ப எப்படியோ இருக்கேன்.

2. நண்பர்களுடன் அதிகம் சுற்றியதாக கேள்விபட்டோம் அது உண்மையா? சொல்லலாம் என்றால் தாராளமாகப் பகிரலாம்...

அது ஒண்ணும் இல்லை, ஆள் ரெம்ப கருப்பா இருக்கேன் நினைச்சிட ௬டாதுன்னு பல்லை காட்டி சிரிச்சிகிட்டே இருப்பேன், அது அவங்களைப் பார்த்து தான் சிரிக்கிறேன்னு நிறைய நண்பர்கள் உருவாகிட்டாங்க, சும்மா நண்பனா மட்டுமே இல்லாம, செலவுக்கும், சாப்பாட்டுக்கும் காசு கொடுங்கன்னு கேட்டே வாங்கிப்பேன், பிறந்த நாள் வந்தா மோதிரம் அடகு வச்சி விழா கொண்டாடுவது எங்க வழக்கம், உங்களுக்கு பிறந்த நாள் வந்தா சொல்லி அனுப்புங்க.

3. நீங்க சிறிய வயதிலே நாடகங்களில் மிகவும் ஆர்வத்துடன் நடிச்சிருக்கீங்கலாமே நிஜம்மாவா? அந்த அனுபவத்தை எங்களோட பகிர்ந்து கொள்ளலாமே!

நல்ல கேள்வி ரம்யா, சின்ன வயசிலே நாடகம் எல்லாம் நடிச்சி இருக்கேன். நாடகங்களிலே நகைச்சுவை என்ற பெயரில் ஊரிலே அவங்களுக்கு பிடிக்காதவங்களை கேலி செய்வது வழக்கம்,பெரும்பாலும் அந்த மொக்கை நகைச்சுவை எல்லாம் நாடகத்தின் கதையோட சம்பந்தம் இருக்காது, நாடகத்தின் கதை தேய்வு அடையும் போது இப்படி மொக்கைகள் வரும், அந்த நடைமுறை முடிந்து என்னைய மாதிரி வாலிப புள்ளைகள் எல்லாம் தலை எடுத்து நடிக்க வரும் போது, மிகப் பெரிய நகைச்சுவை பஞ்சம் ஏற்பட்டு விட்டது, அதை எப்படி சரி செய்யன்னு மக்கள் யோசித்திகிட்டு இருக்கும் போதுதான், நான் நாடக உலகிலே காலடி எடுத்து வச்சேன், அந்த கால கட்டத்துக்கு தகுந்த மாதிரி காதல் நகைச்சுவை காட்சிகள் எழுதி கொடுத்தேன். அப்பவும் துண்டைப் பத்தி எழுதினேன், இன்னும் எழுதிகிட்டு இருக்கேன். தனியாக ஐந்து அல்லது ஆறு காட்சிகள் எழுதி, நடிக்க ஆள் இல்லாம நானே நடிச்சி இருக்கேன். ஆனா நகைச்சுவைக்கு துணைக்கு நடிக்க வரும் நடிகையோட எனக்கு ரெண்டு பாட்டு வரும்.இப்படியா ரெண்டு நாடகங்களுக்கு கதை எழுதி கொடுத்து, அடுத்து நானே ஒரு நாடகத்தை (1996 வருடம் என்று நினைக்கிறேன்) முழுவதும் எழுதினேன். அதான் எங்க ஊரிலே நடந்த கடைசி நாடகம். கதை எழுத வச்ச பேருதான் நசரேயன், அந்த கதை எழுதின அப்புறமா சினிமா இயக்குனர் ஆகுவேன் என்ற நம்பிக்கையிலே பல காலம் கனவு கண்டேன், அதான் கடைப் பேரு என் கனவில் தென்பட்டது.

4. உங்களுக்கு சூரியன் மீது கடும் கோபம் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்க தெரிவிக்கின்றன உண்மையா?

ஆமா ரம்யா, நல்லா சிகப்பா இருந்த என்னைய கருப்பாக்கி விட்டுதுன்னு கோபம்.ஒரு காலத்திலேயே சுண்டினா ரத்தம் வருகிற மாதிரி இருந்த நான் இப்ப அடிச்சா ௬ட ரத்தம் வருமான்னு தெரியலை.

5. வலைத்தளத்தை தேர்ந்தெடுத்தது எவ்வாறு? இதை உங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் யார்? இப்போது அவர் எங்கே இருக்கிறார்?

இந்த கேள்விக்கு பதில் பலமுறை சொல்லி இருந்தாலும் மறுபடியும் சொல்லுறேன். வலைத்தளம்னு ஒன்னு இருக்கிறது எனக்கு ரெம்ப நாளா தெரியாது, எங்களோட கல்லூரி குழுமத்திலே ஒரு தடவை நான் எழுதி முதல் பரிசு வாங்கிய கவுஜையை எழுதி போட்டேன், அதை பார்த்த என்னோட கல்லூரி நண்பன் சத்யா, மற்றும் ராம் இருவரும் பதிவர்கள் தான், அவங்க எல்லாம் எழுதியே களைச்சி போய்ட்டாங்கன்னு, என்னைய எங்க கல்லூரி குழுப் பதிவிலே எழுதச் சொன்னார்கள், அங்க ஒரு கதையும், கவுஜையும் எழுதிப் போட்டேன். எழுதிப் போட்டுட்டு நானே ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தடவை பார்ப்பேன் யாராவது கருத்து சொல்லுவாங்களா என்று, ஈ ௬ட எட்டிப் பார்க்கலை, அப்புறமா கூகிள் ஆண்டவர் மூலமா தமிழ்மணம் இணைப்பு கிடைத்தது,தமிழ்மணம் திரட்டியில் எழுதுபவர்களை எல்லாம் பார்த்து விட்டு, குழுப்பதிவை இணைக்க சம்மதம் கேட்டேன். கிடைக்கலை, உடனே நான் என்னோட சொந்த கடையை ஆரம்பித்து வியாபாரம் பண்ண ஆரம்பித்தேன், அதனாலே நான் இப்ப இங்க இருக்கேன்.

சத்யா இந்தியாவிலே இருக்கிறார்னு நினைக்கிறேன், ராம் குமார் "முகவை மைந்தன்" என்ற பெயரிலே சிங்கையிலே இருந்து எழுதுகிறார்.

6. உங்களை அறிமுகப் படித்தியவர்களை இப்போது சந்திக்க நேர்ந்தால் அவர்களின்பால் உங்களின் ரியாக்சன் எப்படி இருக்கும்?

தெரியலையே அடி விழுந்தாலும் விழலாம், விரைவிலே அவர்களை சந்தித்துவிட்டு நடந்ததை சொல்லுறேன்.

7. பிரபல பதிவராக இருப்பதால் தர்மசங்கடமான தருணங்கள் ஏதாவது???

நீங்க என்னைய பிரபலமுன்னு எதைவச்சி சொல்லுறீங்கன்னு தெரியலை, தமிழ்மண முகப்பிலே வருகிறதை வைத்து சொல்லுறிங்கன்னா, அதுக்கு காரணம் மொய் வச்சி, மொய் எடுக்கிறதுதான். இதுநாள் வரைக்கும் அப்படி தர்ம சங்கடம் ஏற்பட்டதில்லை, அப்படியே ஏற்பட்டாலும், அது என்னை ரெம்ப பாதிக்காது, எனக்கு ஞாபக மறதி அதிகம்.

8. உங்களை பிரபலமாக்கிய இடுகை எது என்று இப்போது நினைவு கூர்ந்து அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நல்ல கேள்வி ரம்யா, நாம் தமிழ் மணம் வந்த புதுசிலே சூடான இடுகை இருந்தது, அதில் வரும் இடுகைகள் ஒரு நாள் முழுவதும் இருக்கும், அதை அதிகம் பேர் பார்ப்பார்கள். நானும் எப்படியாவது அந்த கோட்டையிலே கால் வைக்கனுமுன்னு நினைச்சேன், வில்லு படத்துக்கு நானே விமர்சனம் எழுதிப் போட்டேன், அது சூடுக்கு போச்சி, அப்புறமா எந்த இடுகையும் சூடு பக்கமே போகலை, மறுபடியும் சூடுக்கு போணுமுன்னு பல நாளா யோசித்து "வெள்ளைகாரிக்கே வெட்கம்". அப்படின்னு கவர்சிகரமா ஒரு தலைப்பு வச்சேன், இடுகை போட்டு அரைமணி நேரத்திலே சூடுக்கு
போச்சி, அப்புறமா அதே பாணியிலே அமெரிக்கா ன்னு தலைப்பிலே வச்சி இடுகைகள் எழுதினேன், அதும் சூட்டுக்கு போச்சி. இப்ப அதையெல்லாம் நினைச்சி பார்த்தா,
இதெல்லாம் ஒரு பொழைப்பா நினைச்சிக்குவேன்.

9. உங்கள் முதல் காதலை உங்க தங்கமணிக்கு தெரியாமல் பகிர்ந்து கொள்ளலாமே? நான் கண்டிப்பா அவங்களுக்கு சொல்ல மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். ...

இந்இடுகையிலே சொல்லப் பட்டது கிட்டத்தட்ட எனது சொந்தக் கதைதான்.

10. அது சரி, உங்க கையிலே எப்போதும் ஒரு துண்டு வச்சிருக்கீங்களே? அது எதுக்கு? அதனால் கடந்து வந்த பாதைகளில் ஏதாவது பலன் கிடைத்துள்ளதா? விவரம் அறிய நண்பர்கள் அனைவரும் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள். விளக்கமா சொல்லுங்களேன் ...

துண்டினாலே ஒரு பிரயோசனம் இல்லை, இடுகைகள்ல துண்டு போட்டு காதல் தோல்விய ஆத்திகிறேன், எழுத்திலே போடுகிற துண்டு கானல் நீர் மாதிரி, நிஜ வாழ்க்கைக்கு பயன்படாது,துண்டைப் பத்தி படிக்கிறவங்க .. அவ்வளவு அப்பாவியா வா இருப்பாங்க?

11. வேலை செய்யும் இடத்தில் வெள்ளையம்மாக்களின் நட்பு பற்றி கொஞ்சமா சொல்லுங்களேன்...

எங்க குழுவிலே ஒரு வெள்ளையம்மா ௬ட இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்,நான் இதுவரை ரெண்டு வெள்ளையம்மா பாட்டி ௬டத்தான் வேலை செய்து இருக்கிறேன். இனிமேலும் அந்த வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கை இல்லை.

12. உங்களின் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாக இருந்த உங்களின் குணங்கள் என்னவென்று கூற முடியுமா?

தன்னம்பிக்கை தான்.....

13. வலையில் நீங்கள் பெற்ற நட்புகள் பற்றி?

இதுவரைக்கும் ஆரோக்கியமா இருக்கு,இந்த நிலையை இப்படியே தக்க வைக்கவேண்டும் என்று போராடுவேன்.

14. உங்களுக்கு வலையுலகத்தில், சில அருமையான பட்டப் பெயர்கள் (தல, தளபதி, சிங்கம்) கொடுத்திருக்கிறார்களே! இந்த பட்டப் பெயர்கள் உங்களின் புகழை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக வலையில் பேச்சு அடிபடுகிறதே அது உண்மையா?

அதெல்லாம் வஞ்சப் புகழ்ச்சி அணி அதையெல்லாம் நம்பவேண்டாம், கலவரமே நடந்தாலும் கலங்காம கும்மி அடிப்பதுதான் என் வேலை.

15. வருங்காலத்தில் சினிமா அல்லது அரசியலில் சேரும் உத்தேசம் ஏதாவது உள்ளதா?

நான் கல்லூரி முடித்தவிட்டு சென்னை வந்ததே சினிமாவிலே சேர்ந்து இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான், தமிழ் மக்கள் நல்ல நேரம், நான் வழி தவறி விட்டேன். இல்லைனா அவங்க பாடு ரெம்ப திண்டாட்டம் தான். வாய்ப்பு கிடைத்தா மறுபடியும் சினிமாவுக்குள் நுழைவேன். ஆனா வாய்ப்பு வருமா வராதா என்பதை காலம் தான் சொல்லும்.

16. திரை விமரிசனம் எழுதுவதிலாகட்டும், அரசியல் விமரிசனம் எல்லாவற்றிலும் புகுந்து விளையாடுகீரீகளே இந்த ஞானம் உங்களுக்கு எப்படி வந்தது? இதெற்கென்று ஏதாவது சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டீர்களா?

எழுதுவதற்கு பயிற்சி எடுத்து இருந்தால், நான் ஒழுங்கா எழுதுவேனே.. எனக்கு படிப்பறிவு அதிகமா இருந்தாலும், வாசிப்பு அனுபவம் ரெம்ப குறைவு, அதனாலே நான் எழுவது எல்லாம் ஒரு வரைமுறை இல்லாமல் இருக்கும், அதையும் சிலர் ரசிக்கிறார்கள்(?) என்ற நம்பிக்கையிலே தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கிறேன். எழுதுவதற்கு முன்னால் ஒரு வரி கதையை யோசித்து வைத்துவிட்டு, அதிலே மசாலா, காரம், குத்து பாட்டு கலந்து கடையிலே ஏத்துவேன்.

17. உங்கள் மீது பொறாமை கொள்பவர்களை அடையாளம் தெரிந்து கொண்டால் உங்களின் மனநிலை எப்படி இருக்கும்?

அப்படி யாரும் என்னைப் பார்த்து பொறாமை அடைந்ததாக தெரியவில்லை, அப்படி யாரவது இருந்தால் என்னிடம் தெரியப் படுத்தவும், உங்களுக்கு சிலை வைக்கணும்.. என்னையும் ஒரு மனுசனா மதிச்சி பொறமை படுகிற அன்பு உள்ளத்துக்கு மரியாதை செலுத்தனும்.

18. நம்பிக்கை துரோகிகளை அடையாளம் கண்டு கொண்டால், பார்த்தவுடன் அவர்களை என்ன செய்ய முயற்சி செய்வீர்கள்?

கண்டிப்பா கோபம் வரும் ... வாய்க்கு வந்த மாதிரி திட்டுவேன்.. கொஞ்ச நாள்ல மறந்து போவேன். ..

19. சரி, நீங்கள் விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக டைரெக்டர் ஷங்கர் உங்களை சந்தித்ததாகவும், அது சமயம் நீங்க கதாநாயகியாக பிரியாமணியை சிபாரிசு செய்தாகவும் ஒரு செய்தி வலையில் உலா வருகிறதே அதை பற்றி....

இந்த செய்தி எனக்கே புதுசா இருக்கு, தமிழ் மக்களின் தலை விதி அப்படி இருந்தால், நான் என்ன செய்ய முடியும்....

20. கடைசியாக ஒரு கேள்வி, வலையில் உங்கள் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்? புதிதாக வரும் வலைப் பதிவர்களுக்கு உங்களின் வழிகாட்டுதல் என்ன?

நான் சொன்னா உடனே கேட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ள ரெண்டு பதிவரை சொல்லுங்க, அவங்களுக்கு நிச்சயமா வழி காட்டுறேன்.

எனது கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்த நண்பர் நசரேயன் அவர்களுக்கு நன்றி!! நன்றி!! நன்றி!!

டிஸ்கி:நண்பர் நசரேயன் அவர்களின் பதில்களைப் படித்திருப்பீர்கள்,கும்ம நினைப்பவர்கள் நன்றாக கும்மவும்.






46 comments :

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ரம்யா
வணக்கம் நசரேயன்...

கேள்வியும் பதிலும் நல்லாயிருக்கு

sakthi said...

ரம்ஸ் சூப்பர்

sakthi said...

நண்பர் நசரேயன் அருமையான மனிதர், எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பதை மிகவும் விரும்புவார் (தவறாக எண்ண வேண்டாம். முக மலர்ச்சியைதான் நான் அவ்வாறு கூறி இருக்கிறேன்).

நம்பிட்டேன்

Anonymous said...

அவருக்கே உரிய பாங்கில் பதில்கள் சுவையாகவும் சிரிக்கும்படியாகவும் இருக்கு...ஏங்க அம்மணி இப்படி யாரையாவது கேள்வி கேட்டுகிட்டே இருக்கணுமா உங்களுக்கு?

நசரேயன் said...

//நண்பர் நசரேயன் அருமையான மனிதர், எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பதை மிகவும் விரும்புவார் (தவறாக எண்ண வேண்டாம். முக மலர்ச்சியைதான் நான் அவ்வாறு கூறி இருக்கிறேன்).//


நானும் நம்பிட்டேன்

பழமைபேசி said...

//என்னோட முதல் வேலை சென்னையிலே தான் கிடைத்து//

எடுத்த வுடனே பொய்.... மலைக்கோட்டை அடிவாரத்துல, பரோட்டோ போடுற வேலையெல்லாம் பார்த்திருக்கேன் பரிதாபமாப் பேசினீரே???

பழமைபேசி said...

//நல்ல கேள்வி ரம்யா,//

இது எங்க இருந்தோ கடன் வாங்குனா மாதர தெரியில உமக்கு???

பழமைபேசி said...

//துண்டினாலே ஒரு பிரயோசனம் இல்லை//

நடிகையோட துண்டைப் போட்டுதல, அவங்க டாலர் நோட்டாக் கேட்டதச் சொல்லாம வுட்டிட்டீரே? என்னய்யா ஞாபக மறதி உமக்கு???

http://urupudaathathu.blogspot.com/ said...

அருமையான் கேள்விகள்,
அருமையான பதில்கள்...

( ஹி ஹி இன்னுமா இந்த உலகம் நம்பிகிட்டு இருக்கு??)

http://urupudaathathu.blogspot.com/ said...

மெய்யாலுமே நல்லாயிருக்கு!!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

//நண்பர் நசரேயன் அருமையான மனிதர், எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பதை மிகவும் விரும்புவார் ,எதையுமே தவறாக எண்ணாமல் ஆரோக்கியமான கோணத்தில் சிந்திக்கும் திறன் படைத்தவர். ////

எல்லாம் நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு???

sakthi said...

சரி, நீங்கள் விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக டைரெக்டர் ஷங்கர் உங்களை சந்தித்ததாகவும், அது சமயம் நீங்க கதாநாயகியாக பிரியாமணியை சிபாரிசு செய்தாகவும் ஒரு செய்தி வலையில் உலா வருகிறதே அதை பற்றி....

இந்த செய்தி எனக்கே புதுசா இருக்கு, தமிழ் மக்களின் தலை விதி அப்படி இருந்தால், நான் என்ன செய்ய முடியும்...

அதானே !!!!

Unknown said...

வெள்ளயம்மான்னு ரெண்டு கெழவியாவது இருக்காங்களேன்னு சந்தசபட்டுகுங்க தல,

அப்புறம் த்ரீ இடியட்சுல ( அதாங்க அடுத்த சங்கர் படம்) ஒரு இடியட் விஜய், ஒரு இடியட் நீங்க, இன்னொரு இடியட் யாருங்க ?

நசரேயன் said...

ரம்யா பேட்டியெல்லாம் எல்லாம் நல்லா இருக்கு எப்ப இடுகை போடுவீங்க ?

நசரேயன் said...

//இது எங்க இருந்தோ கடன் வாங்குனா
மாதர தெரியில உமக்கு??//


ஒரு பிரபல பதிவரோட தொலைக்காட்சி பேட்டியிலே இருந்து ஆட்டைப் போட்டேன்

RAMYA said...

//
நசரேயன் said...
ரம்யா பேட்டியெல்லாம் எல்லாம் நல்லா இருக்கு எப்ப இடுகை போடுவீங்க ?
//

நண்பரே இதுவே ஒரு இடுகைதானே!!:-)

RAMYA said...

// நசரேயன் said...
ரம்யா பேட்டியெல்லாம் எல்லாம் நல்லா இருக்கு எப்ப இடுகை போடுவீங்க ?
//

இப்படி எல்லாம் என்னைய மாட்டி விடக்கூடாது:(

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
வணக்கம் ரம்யா
வணக்கம் நசரேயன்...

கேள்வியும் பதிலும் நல்லாயிருக்கு
//

நன்றி ஞானசேகரன், உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு நலமா??

பழமைபேசி said...

//நசரேயன் said...
ரம்யா பேட்டியெல்லாம் எல்லாம் நல்லா இருக்கு எப்ப இடுகை போடுவீங்க ?
//

எந்திரன் பார்த்தும் திருந்தலையா நீரு? இடுகை, இடுறதுயா!!!

தமிழ் அமுதன் said...

நல்ல கேள்விகள்....நல்ல..பதில்கள்..!


’’பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை’’

ரம்யா ஒரு பொட்டி நெறய கேள்விகள வைச்சுகிட்டு அடுத்த பதிவர தேடிட்டு இருகாங்களாம்..!;)

'பரிவை' சே.குமார் said...

பதில்கள் சுவையாகவும் சிரிக்கும்படியாகவும் இருக்கு...

Thanks to RAMYA & Nasareyan Anna.

வால்பையன் said...

//பிறந்த நாள் வந்தா மோதிரம் அடகு வச்சி விழா கொண்டாடுவது எங்க வழக்கம், உங்களுக்கு பிறந்த நாள் வந்தா சொல்லி அனுப்புங்க.//

எனக்கு பிறந்தநாள் வருது, உங்களுது தங்க மோதிரம் தானே!

வால்பையன் said...

//நல்ல கேள்வி ரம்யா,//

அப்ப மததெல்லாம் நொள்ள கேள்வியா?!

வால்பையன் said...

//நல்ல கேள்வி ரம்யா,//

திரும்பவும் பாருடா

வால்பையன் said...

ரொம்ப சீரியஸா பதில் சொல்லியிருக்காருப்பா!, கூட்டிகிட்டு போய் ரெண்டு பாட்டில் குளுகோஸ் ஏத்துங்க!

இனியா said...

"நான் மலைக்கோட்டை நகரத்திலே உள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில தான் படிச்சேன்"

St. Joseph's ????

குடுகுடுப்பை said...

thundukku vera meaning irukku.

நசரேயன் said...

//இனியா said...
"நான் மலைக்கோட்டை நகரத்திலே உள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில தான் படிச்சேன்"

St. Joseph's ????//

தல பாது(காப்பு) காரணங்களுக்குக்கா பொறியியல் கல்லூரி பெயரை சபையிலே சொல்லல மின் அஞ்சல் அனுப்புறேன்.

MSATHIA said...

நசரேயன்,

//இனியா said...
"நான் மலைக்கோட்டை நகரத்திலே உள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில தான் படிச்சேன்"

St. Joseph's ????//

தல பாது(காப்பு) காரணங்களுக்குக்கா பொறியியல் கல்லூரி பெயரை சபையிலே சொல்லல மின் அஞ்சல் அனுப்புறேன்.
///

---நல்லா தேறிட்டே ;-)

//சத்யா இந்தியாவிலே இருக்கிறார்னு நினைக்கிறேன், ராம் குமார் "முகவை மைந்தன்" என்ற பெயரிலே சிங்கையிலே இருந்து எழுதுகிறார்.
//

ரொம்ப நாள் கழிச்சி இன்னைக்கு தமிழ்மணம் எட்டிப்பாத்தா உன்பேரு மாட்டியது. எட்டிப்பாத்தா என்னை வேற இழுத்துவிட்டிருக்கே.. அப்படியே நெஞ்சம் நெகிழ்ந்தது ..கண்கள் கலங்கின ;-))

அதுகெடக்கட்டும் இப்போதைக்கு அட்லாண்டால இருக்கேன். அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ILA (a) இளா said...

இந்தப் பதிவிலாவது நசரேயன் உணமைய ஒன்னாவது சொல்வாருன்னு நினைச்சேன். அத்தனையும் பொய்

சுரேகா.. said...

:) இதெல்லாம் நடக்குதா? :))

கயல் said...

அண்ணாச்சி இவளோ நல்லவரா நீங்க?

//
நண்பர் நசரேயன் அருமையான மனிதர், எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பதை மிகவும் விரும்புவார் (தவறாக எண்ண வேண்டாம். முக மலர்ச்சியைதான் நான் அவ்வாறு கூறி இருக்கிறேன்).
//
மிகவும் ரசித்தேன். இதற்கான அண்ணாச்சி பதிலை! :))

ரம்யா மிகவும் அழகான முயற்சி! வாழ்த்துக்கள்.

Anonymous said...

நசரேயன் said...

//நண்பர் நசரேயன் அருமையான மனிதர், எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பதை மிகவும் விரும்புவார் (தவறாக எண்ண வேண்டாம். முக மலர்ச்சியைதான் நான் அவ்வாறு கூறி இருக்கிறேன்).//


நானும் நம்பிட்டேன்


நாங்களும் தான் வேற வழி...

Anonymous said...

//சரி, நீங்கள் விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக டைரெக்டர் ஷங்கர் உங்களை சந்தித்ததாகவும், அது சமயம் நீங்க கதாநாயகியாக பிரியாமணியை சிபாரிசு செய்தாகவும் ஒரு செய்தி வலையில் உலா வருகிறதே அதை பற்றி....//

ரம்யா நாங்க பொருத்து போறோம் என்பதற்காக இப்படியா..தாங்கலை டா சாமி தெரியாமல் ரெண்டாவது முறை வந்துட்டேன் நொந்துட்டேன்..

Anonymous said...

//"நான் மலைக்கோட்டை நகரத்திலே உள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில தான் படிச்சேன்"//

இது நீங்க சேரும் முன் சேர்ந்ததும் கல்லூரியின் இன்றைய நிலை என்ன? இப்படி கேள்வி கேட்க உனக்கு தோனலையா ரம்யா?

நட்புடன் ஜமால் said...

நான் சொன்னா உடனே கேட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ள ரெண்டு பதிவரை சொல்லுங்க,]]

நான் ஒருத்தன் இருக்கேன் நசர்

அந்த இன்னொருத்தரும் நானே இருக்க கூடாதா ...

பவள சங்கரி said...

ரம்யா உங்க கேள்விகள் சூப்பர்......நசரேயனின் பதிலும் தான்..........கலக்குங்க......

அமுதா கிருஷ்ணா said...

நானும் நம்பிட்டேன்..நண்பர் நசரேயன் அருமையான மனிதர், எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பதை மிகவும் விரும்புவார் (தவறாக எண்ண வேண்டாம். முக மலர்ச்சியைதான் நான் அவ்வாறு கூறி இருக்கிறேன்).

RAMYA said...

//
sakthi said...
ரம்ஸ் சூப்பர்
//

Thanks Sakthi..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-)))))

அண்ணன் வணங்காமுடி said...

pass ah fail ah

அண்ணன் வணங்காமுடி said...

1. நீங்க எந்த கல்லூரியில் படித்தீர்கள்? உங்களுக்கு முதல் வேலை எங்கே கிடைத்தது? முதல் வேலை மனதிற்கு நிறைவைத் தந்ததா?

வேந்தன் ஆல் பாஸ் டுடோரியல். அப்படி ஒரு சம்பவம் இன்னும் நடக்க வில்லை. மொதல்ல வேல கிடைக்கட்டும் அப்பறமா சொல்லறேன்.

Vijiskitchencreations said...

நசரேயன் சூப்பரா அதுவும் நேச்சுரலா பதில் அளித்திருப்பது பாராட்ட வேண்டியது.

ரம்யா சூப்பரா கேள்வி கேட்டு தூள் கிளப்பிட்டிங்க.

கேள்வியும், பதிலும் நான் பொறுமையா படித்து முடித்து ஆ என்ன நேச்சுரலா பதில் அளித்திருக்கும் நசரேயனுக்கு பாராட்டுக்கள்.

மே. இசக்கிமுத்து said...

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பக்கம் படித்தேன், ரசித்தேன்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சூப்பர் தளபதி

கலக்கிட்டீங்க, :) அதும் வழி சொல்ற பதில் சூப்பர்..

Unknown said...

வந்தது வந்துட்டீங்க எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா..சூப்பர் கேள்வி சூப்பர் பதில்.